12 March 2015

இந்தியாவுக்கு கடற்படை ஒரு கேடா?

பயணங்களில் மிக மகிழ்ச்சியான பயணம் கடல்வழிப் பயணம்தான். அதே நேரத்தில் ஆபத்துகள் நிறைந்த பயணமாக நாவல்களும், திரைப்படங்களும் அச்சுறுத்தியுள்ளன. அதுவும் ‘தினத்தந்தி’யில் வரும் கன்னித்தீவு நாயகன் சிந்துபாத், நாயகி லைலாவை அடைவதற்காகக் கடல்தாண்டி, மலைதாண்டி பயணிப்பார். அதில்கூட கடல்வழிப் பயணத்தில்தான் பல ஆபத்துகளை சிந்துபாத் சந்திப்பார். அப்போதெல்லாம் நாமும் கடலில் பயணம் செய்தால் எப்படி ஒரு ‘த்ரில்’ இருக்கும் என்பதை நினைக்கும்போதே அச்ச அலை அடிக்க ஆரம்பிக்கும்.

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல்களில் புக்கர் பரிசு பெற்ற ‘The old man and the sea’ நாவலில் வரும் நாயகன் சாண்டியாகு கடலில் படும் பாடுகளை நினைத்தாலே கடலிலிருந்து தரையில் விழுந்து துடிக்கும் மீனைப் போலத்தான் நம் மனம் துடிக்கும்.

அப்படித்தான் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடல்வழிப் பயணத்திற்கு வாய்ப்புக் கிடைத்தது. தமிழீழ மக்களின் விடுதலைக்காக, சாவை ஒரு குப்பியில் அடைத்துக் கழுத்தில் மாட்டிக்கொண்டு போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூலம்தான் அந்த அழைப்பு வந்தது.
போர் தொடங்கிய நேரம். வான்வெளியில் விமானங்கள் ‘கிபீர்’ குண்டுகளை அப்பாவி தமிழ் மக்கள் மீது பொழிந்து கொண்டிருந்தன. ‘ஷெல்’கள் வெடித்துச் சிதறுகையில் பனை மரங்களும், காணிகளும்கூட ஓலமிட்டன.

இந்தச் சூழலில்தான் இராமேசுவரத்திலிருந்து கடல்வழிப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. முதல் நாள் இரவிலிருந்து தூங்க முடியவில்லை. கடல் அலைகள் முகத்தை முத்தமிட்டுப் போயின. சீறிப் பாயும் புலிகளின் படகுகள் கடலைக் கிழித்துக்கொண்டு பறந்தன. நெருப்பாய்க் கொதித்தது கடல் நீர். கடல் பயணம் இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்று நினைத்து நினைத்துத் தூக்கம் படகேறிப் போனது.

மடிஅடித்து மீனவனாக மாறி அதிகாலை படகில் ஏறிய 1 மணி நேரத்தில் கடல் ஒவ்வாமையால் வாந்தி.. குடல் பகுதியின் கடைசி நீரும் கடல் நீரில் கலந்தது. 5 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நமது மீனவச் சொந்தங்களின் படகிலிருந்து புலிகளின் படகுக்கு மாற்றம். எந்த நேரமும் சொடுக்கத் தயாராகும் துவக்குகள். கையைத் தட்டினால் கடல் அலைகளும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் கம்பீரம். நான்கே புலிகள். அழைக்க வந்திருந்தார்கள். கேனல் சேரலாதன்தான் எம்மைக் கைத் தூக்கி புலிகளின் படகுக்குள் இழுத்தார். ‘சேரா’ என்று அன்புடன் அழைக்கப்படும் சேரலாதன், தமிழீழ ஊடகப் பிரிவின் பொறுப்பாளர். ‘ஒளிவீச்சு’ என்னும் ஒளி நாடா ஊடகத்தை உருவாக்கியவர். (இதைப் பார்த்துத்தான் பின்னாளில் ‘தமிழ்மாலை’ என்று மாறன் தொடங்கினார்.) எப்போதும் பாட்டும் பகடியுமாய் இருக்கும் களப்புலி சேரா. இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படியான ஊடகப் புலி நீண்ட கால நண்பர். இவரின் முயற்சியில்தான் இந்த கடல்வழிப் பயண வாய்ப்புக் கிடைத்தது.

தமிழகத்தின் அரசியல் நிலவரத்தைக் கதைத்துக்கொண்டே இழுவை வயரை இழுத்துவிட படகு நெருப்பை இரைத்துக்கொண்டு பறந்தது. வானும் கடலும் ஒரே நேரலையில் சங்கமித்தன. இருளும் அலையும் வெள்ளியை அள்ளிக்கொண்டு வருவது போன்று கடல் அலையை அள்ளி வந்தன. வங்காள விரிகுடா அமைதியானது. புலிகளின் படகு போகிறது. எல்லாம் அமைதியாய் இருப்போம் என்று அமைதியானது. புலிப் படகின் பாய்ச்சல் பேரிரைச்சலாய் கடலைக் கிழித்துக்கொண்டு சீறியது. ஒரு மணி நேரத்தில் நாச்சிகுடா என்னும் நாவலந்தீவில் இறங்கிவிட்டது. படகிலிருந்து கை கொடுத்து வரவேற்றார் கேனல் சிறீராம். (படுகொலையான இசைப்பிரியாவின் கணவர்.) “வாங்க மச்சான்” என்று வரவேற்று அழைத்துப் போனார் வன்னிதேசத்துக்கு.

நாச்சிகுடா தீவில் இறங்கும்போது வேறு படகு ஒன்று புறப்படத் தயாரானது. அந்தப் படகு எங்கு போகிறது என்று கேட்டபோது, கச்சத்தீவுக்குப் போகிறது என்றனர் கடல் புலிகள். அங்குதான் புனித அந்தோணியார் கோவில் இருக்கிறது என்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், நெடுந்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் உள்ள ஈழத் தமிழர்களும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வது நீண்டகாலத்து வழக்கம் என்ற கூடுதல் தகவலையும் தந்தனர். அப்போதிருந்தே கச்சத்தீவு போக வேண்டும் என்கிற ஆவல் அவ்வப்போது மேலெழும்பிக்கொண்டே இருந்தது.

இராமேசுவரத்தைக் கூட நெடுந்தீவுக்காரர்கள் ‘தீவு’ என்றுதான் குறிப்பிடுகின்றனர். நீண்ட காலமாக கச்சத்தீவை ஒரு வழிபாட்டுத்தலமாக இரு நாட்டுத் தமிழர்களும் கொண்டிருந்தாலும் வணிகத்திற்கும் பயன்பட்டதாகக் கூறுகின்றனர். 1974ஆம் ஆண்டு, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி - இலங்கை அதிபர் சிறீமாவோ பண்டாரநாயகாவிடம் கச்சத் தீவைக் கையளித்தபின் கச்சத் தீவுக்கு தமிழர்கள் யாருமே போக முடியவில்லை. 1974ஆம் ஆண்டு வந்த கச்சத் தீவு ஒப்பந்‌தத்தில் மொத்தம் 8 விதிகள் உள்ளது. அதில் 5, 6ஆம் விதிகளில் கச்சத் தீவுக்கு மீனவர்கள் போவதற்கோ, புனித அந்தோணியார் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கோ எந்தத் தடையும் இல்லை. யாரிடமும் அனுமதியும் கேட்க வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் எழுதிய நூலில் கச்சத் தீவு குறித்து இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தமே செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார். திமுககூட இந்த ஒப்பந்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சட்டப்படி ‘Historical Water’ கடல் பரப்பில் இந்த ஒப்பந்தங்கள் செல்லாது என்பதுதான் சரியானது. ஆனால் எல்லை மீறியதாக, இன்று வரை 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தெற்காசியப் பெருநிலப்பரப்பில் வல்லரசாகத் துடிக்கும் இந்தியாவின் குடிமகனை குருவி சுடுவதுபோல் சுட்டுக்கொல்கிறார்கள். ஆனாலும், வெட்கமே இல்லாமல் வங்காள விரிகுடா கடல் பரப்பில் இந்தியக் கப்பல் படையைச் சேர்ந்த வீரர்கள் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தக் கேவலத்தை கடந்த 28-2-2015 அன்று அனுபவிக்க நேர்ந்தது. கச்சத் தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவுக்குப் போக கடந்த இரு ஆண்டுகளாகவே முயற்சி செய்து வந்தோம். இந்த ஆண்டுதான் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

28ஆம் தேதி காலை 10 மணிக்கு இராமேசுவரம் கடற்கரைக்கு வரச்சொல்லியிருந்தார்கள். அதற்கு முன்னதாகவே கடற்கரைப் பரப்பெங்கும் கச்சத் தீவுக்குப் போகத் தயாராகும் மக்கள் கூட்டம். தமிழகக் காவல்துறையும் கடலோரக் காவல்படையும் மக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தது. எமது படகு எண் 89. வரிசை வரிசையாக அழைத்துக் கொண்டிருந்தனர். எந்த வசதியும் செய்து கொடுக்கப்படாத நிலையில் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இந்திய அதிகாரிகள் மட்டும் நிழலில் அமர்ந்திருந்தார்கள். கச்சத் தீவு போகும் பக்தர்களுகளோ கடும் வெய்யிலில் கொதிக்கும் மணற்பரப்பில் காத்திருக்க வேண்டியிருந்தது. எந்த ஒழுங்கும் செய்யப்படவில்லை. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் படாதபாடு படவேண்டியிருந்தது.

காலை 10 மணிக்கு நின்றவர்கள் நண்பகல் 1 மணிக்குத்தான் சுங்க அதகாரிகள் முன் நிறுத்தப்பட்டோம். சோதனைகள் செய்கிறார்களாம்... அவ்வளவு சோதனைகள்! நாவறண்டு தண்ணீர்த் தாகத்தில் மயக்கம் போட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படவோ, முதலுதவி செய்யவோ அங்கு எந்த முகாமும் அமைக்கப்படவில்லை. மந்தை மந்தையாக படகில் ஏற்றிவிட்டு தன் கடமையைச் செய்ததாக திருப்திப்பட்டுக்கொண்டார்கள் சுங்க இலாகா அதிகாரிகள். காவல்துறையின் பல்வேறு கடும் சோதனைகளுக்குப் பிறகு, படகு கச்சத் தீவு நோக்கி விரைந்தது.

கடந்த முறை நாச்சிகுடா தீவு பயணத்திற்கும் கச்சத்தீவுப் பயணத்திற்கும் நிறைய வேறுபாடு இருந்தது. இடையே இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகளும் வீரர்களும் கடலில் ரோந்து வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு படகிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? குழந்தைகள், பெண்கள் எத்தனை என்று கணக்கைச் சரிபார்த்து சரிபார்த்து அனுப்பிக் கொண்டிருந்தனர். வெள்ளி நிலா கடலுக்குள் குதித்து குதித்து விளையாடுவதுபோல் மீன்கள் துள்ளி துள்ளி படகுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்தன. 

 தமிழினத்தின் அடையாளமாக கடல் நீர் கருப்பு வயப்பட்டிருந்தது. அப்படியே கடல் நீர் குதித்து குதித்து எழுவதுபோல் அலை மேலெழும்பியது. மேலெழும்பிய கடல் அலை நம்முடன் ஏதோ கதைப்பது போலவே இருந்தது. இந்தக் கடல்தான் மாவீரன் கிட்டு உள்ளிட்ட 18 புலிகளை விழுங்கியது. இந்தக் கடல்தான் தங்கச்சி அங்கயற்கண்ணியை உள்வாங்கியது. சிங்கள ஆதிக்க ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப் பிழைக்க ஓடிய எம் சொந்தங்களைச் சுமந்து சுமந்தே இந்தக் கடல் தள்ளாடுகிறதே... இந்தத் தள்ளாட்டத்தில் எத்தனை பேர் செத்து மடிந்தார்களோ! கடல் பரப்புக்கு மேலே மட்டுமல்ல உள்ளேயும் எம் சொந்தங்கள்.

அதோ... கச்சத் தீவு என்று படகைச் செலுத்திக் கொண்டிருந்த மீனவச் சொந்தத்தைச் சார்ந்த தம்பிகள் கை நீட்டிக் காட்டிய திசையை நோக்கிப் பார்த்தபோது நமக்கு முன்பு ஏராளமான படகுகள் கச்சத் தீவை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தன. 'சயூரா' என்ற ஒரு சிங்களக் கடல் படையைச் சார்ந்த கப்பல் கச்சத் தீவை ஒட்டி நின்றுகொண்டிருந்தது. அதற்கு நேரெதிரிலே ‘விக்ரகா’ என்னும் இந்தியக் கப்பல் நின்று கொண்டிருந்தது. தமிழகப் படகுகள் இந்தியக் கப்பல் படையின் கேப்டன் நினைத்த மாதிரி வராததால் தமிழர்களை மிக மோசமாக நடத்தினார். அவமதிப்புச் செய்ததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த படகுகள் சிங்களக் கப்பலை நோக்கி நகர்ந்தன. அங்கு போனதும் இன்னும் ‘Green signal’ வரவில்லை. போய் அணுகி வாங்கிவரச் சொன்னார்கள். என்ன அனுமதி என்றால் இந்தியக் கடற்படை கேப்டனின் அனுமதி. இவர் சிங்கள அதிகாரிக்கு ‘Green signal’ செய்யவில்லையாம். மீண்டும் இந்திய ‘விக்ரகா’ கப்பலுக்கு வந்து அனுமதி வாங்கிய பிறகே நகர முடிந்தது.

கடற்கொள்ளையர்களை எப்படி நடத்துவார்களோ அப்படி தமிழர்களைப் படகிலேயே வரிசை வரிசையாக மூன்று முறை சுற்ற வைத்து, உட்கார வைத்து எண்ணிவிட்டு விரட்டினார்கள். இந்தி அதிகாரிகளும், மலையாளிகளும் கப்பல் மேல்தளத்தில் நின்று சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தார்கள். ‘சிங்களமும் இந்தியமும் தமிழுக்கு இரட்டைப் பகை’ என்பதை அனுபவரீதியாகக் காண முடிந்தது. 

இரவு 8 மணியளவில் கச்சத் தீவில் இறங்கியபோது, சிங்களக் காவல்துறையும் கடல் படையைச் சேர்ந்தவர்களும் எந்தச் சோதனையுமின்றி உள்ளே அனுமதித்தனர். இந்திய அதிகாரிகளைவிட சிங்கள அதிகாரிகள் மேலானவர்கள் என்று எண்ணும் வகையிலான செயல்பாடுகளைக் கச்சத் தீவில் காண முடிந்தது. கடந்த முறையைவிட பக்தர்கள் அதிகம் என கடற்கரை ஓரத்தில் படுத்துக்கொண்டிருந்தவர்கள் கூறினர். அவர்களுக்குப் பக்கத்திலேயே 89ஆம் எண் படகைச் சேர்ந்தவர்களும் படுத்துக்கொண்டோம். கச்சத் தீவு முழுக்க, அந்த அந்தோணியார் கோவிலைச் சுற்றி எங்கெங்கு இடம் கிடைத்ததோ அங்கெல்லாம் மக்கள் படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள். தேவாலயத்தில் இரவு 12 மணி வரை ஜெப ஆராதனைக் கூட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

“போரில் கொல்லப்பட்டவர்களுக்காகவும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்காகவும், காணாமல் போனவர்களுக்காகவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் இன்னும் சிறைப்பட்டிருக்கும் மக்களின் விடுதலைக்காகவும், அம்மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்படியாக ஜெபிப்போமாக..!” என்று ஆராதனைப் பாடல்களுக்கிடையே ஜெபித்தனர்.

ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் சந்தித்துக் கொண்டாலும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டனர். அங்கு போடப்பட்டிருந்த சந்தையைச் சுற்றிக் கூட்டம். சந்தையில் 2 சதவீதம்தான் தமிழர்களின் கடை. மற்றவை சிங்களவர்களின் கடைகளுக்குத்தான் சிங்கள அரசு அனுமதி அளித்திருந்தது. வணிகத்தில் தமிழர்கள் இலாபம் சம்பாதித்து பொருளாதாரத்தில் வலிமையாகிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்ததை கவனிக்க முடிந்தது.

மறுநாள் அதிகாலையே தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வந்திருந்த யாவரும் தத்தமது காலைக் கடன்களை முடித்துவிட்டு அந்தோணியாரைத் தரிசிக்கத் தயாரானார்கள். சிலர் சந்தைகளில் சிங்களப் பொருட்களை வாங்கவும் வேடிக்கை பார்க்கவும் தயாரானார்கள். காலை 10 மணியளவில் இலங்கையைச் சேர்ந்த நீதிபதி ஒருவரும் இலங்கை கப்பல்படை அதிகாரிகளும் அழைக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மறை மாவட்டப் பேராயர் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இந்திய - இலங்கை மக்களுக்கான கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அமைதி திரும்ப வேண்டுமெனவும், ஈழ மக்களின் அபிலாசைகள் நிறைவேற வேண்டுமெனவும், காணாமல் போனவர்கள் திரும்ப வரவேண்டுமெனவும் எல்லாம் வல்ல தேவாலயத்தில் ஜெபித்தனர். அவரது ஜெபம் விண்ணிலும் கேட்கப்படட்டும் என நாமும் ஜெபித்தோம்.

வரிசை வரிசையாக படகுகள் தயாராய் நின்றன. அவரவர் வந்த படகுகளில் ஏறி ஊர் திரும்பினோம். திரும்பும்போது இந்தியக் கப்பல் ஒன்றில் இந்திய தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது. பார்க்கும்போதே அந்தக் கொடியின் மீது நமக்கு மரியாதை ஏற்படுவதற்குப் பதிலாக அருவறுப்புத்தான் ஏற்பட்டது. இந்தக் கொடியைத் தூக்கிக்கொண்டு யாரைப் பாதுகாக்க கடல் பரப்பில் அலைகிறார்கள் என்கிற கேள்வியே கடல் அலைபோல் அடித்துக்கொண்டே இருந்தது.

இராமேசுவரத்தில் இறங்கியபோதும் அங்கே உட்கார்ந்திருந்த இந்திய அதிகாரிகளைப் பார்த்ததும் கோப உணர்ச்சியே மேலெழுந்தது. கடலில் மீன்பிடிக்கப் போகும் மீனவர் சொந்தங்களைக் காப்பாற்றத் துப்பில்லாத இவர்களுக்கு என்ன மரியாதை? என்ன வல்லரசு நாடு இது? இவர்களுக்கு ஒரு கொடி தேவைதானா? என்கிற கேள்விகள் நம்மைத் துளைத்துக்கொண்டே இருந்தன. இந்த இலட்சணத்தில் இந்திய - இலங்கைப் படகுப் பயணம் என்கிற அறிவிப்பு வேறு. 

 சொந்த நாட்டுத் தமிழர்களைக் காவுகொடுத்தேனும் இந்தியா தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தயாராகிவிட்டது.

வன்னி அரசு.

கச்சத் தீவு பயணத்தின் புகைப்படத் தொகுப்பு:









































































0 comments:

Post a Comment