20 March 2015

அரசு உருவாக்குமா ஆண்ட பரம்பரை ‘கோட்டா’?

"நாங்கள்லாம் ஆண்ட பரம்பரை... நாடாளப் பிறந்தவர்கள்..." என்றெல்லாம் சாதிப் பெருமை பேசுபவர்கள் இடஒதுக்கீட்டுச் சலுகைகளுக்காக மட்டும் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வெட்கமே இல்லாமல் அரசிடம் மண்டியிடுகிறார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டும் வீரம் காட்டுகிறார்கள்.

இப்படித்தான் இந்தியா முழுக்க ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போக்குக்குக் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் காட்டியுள்ளது உச்ச நீதிமன்றம். வட மாநிலங்களில் மிக வலிமை வாய்ந்த சாதியான ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

வட மாநிலங்களில் 'ஆரிய ஜமீன்தார்கள்' என்றும், நிலக்கிழார்கள் என்றும் அழைக்கப்படும் இந்த ஜாட் சமூகத்தினரை கடந்த மார்ச் 4, 2014 அன்று முன்னேறிய வகுப்பிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. அதாவது, தேர்தல் ஒழுங்குமுறை விதிகள் அமலுக்கு வரும் மார்ச் 5 2014க்கு முந்தைய நாளில் அவசரம் அவசரமாக அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது.

இதற்கு முன்பாகவே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைப்பது தொடர்பாக மத்திய அரசு கருத்து கேட்டது. அதற்கு, சமூக பொருளாதார ரீதியாக எடுக்கப்படும் சென்சஸ் பணி (2011) முடிந்த பிறகுதான் இதனைப் பரிசீலனை செய்ய முடியும் என்று சொன்னது. ஆனாலும் தொடர் அழுத்தத்தின் காரணமாக, ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். என்னும் சமூக அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி மையத்திடம் ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டது ஆணையம். ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். நிறுவனமோ எந்த நேரடி கள ஆய்வும் செய்யாமல் இருக்கும் பழைய தரவுகளின் அடிப்படையில் தமது கடமையை வெறும் புள்ளிவிவரங்களாகத் தொகுத்து தந்தது. இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாட் சமூகத்தைச் சேர்க்கக் கூடாது என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கருத்துச் சொன்னதுடன் எதிர்ப்பையும் பதிவு செய்தது. ஆனாலும் கடந்த காங்கிரஸ் அரசு அரசியல் இலாபத்திற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் எதிர்ப்பை மீறி ஜாட் சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. பா.ஜ.க.வும் இதனை வரவேற்றது.

வட மாநிலங்களில் பீகார், குஜராத், அரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி, இராஜஸ்தான் (இரு மாவட்டங்களில் மட்டும்), உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மிக அதிகமாக வாழும் ஜாட் சமூக மக்கள் தங்களை ஆரிய பாரம்பரியத்தில் வந்தவர்களென்று, இராஜபுத்திரர்களுக்கு இணையாகக் கருதி வருபவர்கள். இந்தியாவையே ஆளப் பிறந்தவர்கள் என்று மார்தட்டுபவர்கள். நாடாண்ட பரம்பரை என்று மீசையை முறுக்கிக் கொள்பவர்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை, நம்ம ஊரு 18 பட்டி பஞ்சாயத்து மாதிரியான ‘காஃப்’ பஞ்சாயத்தின் மூலம், நம்ம ஊரு வன்னியர், தேவர், கவுண்டர் மாதிரி அடக்கி ஒடுக்கி வருபவர்கள். 

ஜாட் காஃப் பஞ்சாயத்து 
அரியானா மாநிலத்தில் துலினா என்னுமிடத்தில் செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக 2002ஆம் ஆண்டு 5 தலித்துகள் அடித்தும், உயிரோடு எரித்தும் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர கொலைகளைச் செய்தவர்கள் இந்த ஜாட் சாதியை சேர்ந்த இந்துத்துவ கும்பல் தான். கடந்த 2012ஆம் ஆண்டு இதே மாநிலத்தில் இஸார் மாவட்டம் டாப்ரா கிராமத்தில் +2 படிக்கும் தலித் மாணவி ஒருவரைத் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த 18லிருந்து 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 8 பேர், தூக்கிக்கொண்டுபோய் நாள் முழுக்க கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். 

அதேபோல், 2014ஆம் ஆண்டு இதே இஸார் மாவட்டத்தில் பகானா என்னும் கிராமத்தில் தங்கள் உரிமைக்காக போராடிய தலித்துகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஜாட் பஞ்சாயத்து தலைவரின் உறவினர்கள் உடன் 3 ஜாட் இளைஞர்கள் சேர்ந்து கொண்டு தலித் சிறுமிகள் 4 பேரை (13ல் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள்) விடிய விடிய ஒரு வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தனர். அம்மாநிலத்தில் சமீப காலங்களில் தலித்துகள் தங்கள் நிலவுரிமைக்காக நடத்திய போராட்டங்களினாலும், அரசியல் ரீதியாக அமைப்பாய் திரள தொடங்கியதாலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், தலித்துகளை அச்சுறுத்தவும், சாதிவெறியை நிலைநாட்டவுமே இக்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது . 

மிர்ச்பூர் கலவரம் என்றைழைக்கப்படும் சம்பவத்தில் 2010ஆம் ஆண்டு மிர்ச்பூர் சேரிக்குள் புகுந்த ஜாட் சாதி வெறியர்கள் அங்கிருந்த குடிசைகளை தீக்கிரையாக்கினார்கள், இதில் 70வயது தந்தையையும் அவரின் 18 வயதான மாற்றுத் திறனாளி மகளையும் குடிசைக்குள் உயிரோடு எரித்துக் கொன்றனர். மிர்ச்பூர் தலித்துகள் பொருளாதாரத்தில் வலிமை பெற்று வந்ததாலேயே திட்டமிட்டு தாக்கப்பட்டதாக பின்னர் உண்மை அறியும் குழுக்கள் கண்டறிந்தனர். இந்த இடத்தில் உங்களுக்கு 2012ல் சாதி வெறியர்களால் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட தர்மபுரி கலவரம் நினைவுக்கு வரலாம். (மிர்ச்பூர் கலவரத்தின் படங்கள்)

அதேபோல் முஸாபர் நகரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் மீது ஜாட் இந்துக்கள் கொடூரத் தாக்குதலைத் தொடுத்து கலவரங்களை உருவாக்கினர். 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டும் 50,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், இங்கே குச்சிக்கொளுத்தி இராமதாசு கிளப்பிவிட்டதுபோல, இஸ்லாமிய இளைஞர்கள் ஜாட் இனப் பெண்களைக் கிண்டல் செய்தனர் என்பது தான். பின்னர் இந்த பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மிகப் பெரும் வெற்றி பெற்றது. சாதி வெறியின் புகலிடம் இந்துத்துவம் தானே?

முஸாபர் நகரின் அப்பாவி இஸ்லாமியர்கள்

காவல்துறை ஜாட் குடியிருப்புகளுக்குள் நுழையவே அஞ்சியது. அது குறித்த வழக்குகள் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. காஃப் பஞ்சாயத்தில் இத்தகைய பலாத்கார நடவடிக்கைகளைச் சொல்லி வெளிப்படையாக மிரட்டி வருகின்றனர். ஆனாலும், பெரிய, சிறிய ஓட்டுப் பொறுக்கும் கட்சிகள் இந்தக் கொடுமைகளைக் கண்டுகொள்வதில்லை. கடந்த 18 ஆண்டுகளாக அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக ஜாட் சாதியினரே இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் கண்டித்தும், நீதிகேட்டும் தலித் மக்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்ட தலைமைச் செயலகத்தை கடந்த 2 ஆண்டுகளாக தலித்துகள் முற்றுகையிட்டு தங்கள் வாழ்வுரிமைக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதேபோல் தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் மூன்று மாதங்கள் முகாமிட்டு தங்களது வீரஞ்செறிந்த தொடர் போராட்டங்களை தலித்துகள் முன்னெடுத்தனர். ஆனாலும் கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தலித்துகளின் போராட்டத்தை மோடி அரசு அடக்கி ஒடுக்கியது. 

ஹிசார் மாவட்டம்: இரண்டு வருடங்களுக்கும் மேலாக தலித்துகளின் முற்றுகை போராட்டம் 

ஜந்தர் மந்தரில் மூன்று மாதங்கள் நடந்த பகானா தலித்துகளின் போராட்டம்  
இப்படி சாதியப் பெருமைகளை நிலைநாட்டுவதற்காக அரசியல் பொருளாதார பலத்தோடு ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் சமூகத்தைத்தான் பின்தங்கிய வகுப்பு என்றும், சமூக-பொருளாதாரம் மற்றும் கல்வியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அச்சமூகத்தை முன்னுக்குக் கொண்டுவருவதற்காக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வரிசைப்படுத்தியது மத்திய அரசு. ஏற்கனவே இந்தப் பட்டியலில் குஜ்ஜார், குர்மி போன்ற ஆதிக்க சமூகங்களை இணைத்தது. இந்தச் சமூகங்கள் எல்லாம் நிலவுடைமைச் சமூகங்களாக, மற்ற சமூகங்களை ஒடுக்குகிற சமூகங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

இப்படியான ஆதிக்கச் சாதியான ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தவறு என பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான போராட்டக் குழு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததையொட்டித்தான் கடந்த 18-3-2015 அன்று உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பின் நகலை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம் (தீர்ப்பின் நகலை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)


இந்த தீர்ப்பில் உள்ள சில முக்கிய குறிப்புகள் :

பத்தி 48- பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது போன்ற முக்கிய முடிவுகள் பழமையான, காலாவதியான தரவுகளை கொண்டு எடுக்கப்படகூடாது. பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டத்தில் பகுதி 11ல் குறிப்பிடப்படுவது போல 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிற்படுத்தப்பட்டோர் சாதி பட்டியலை மறு ஆய்வுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. இது தற்காலத்திற்கு ஏற்ற புதிய புள்ளி விவரங்கள், தரவுகளின் தேவையை உணர்த்துகிறது. 

பத்தி 51- சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பழைய தரவுகளைக் கொண்டு பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலை அணுகுவது பிற்போக்குத்தனமான ஆட்சியையே குறிக்கும். கடந்த 20 ஆண்டுகளில் இந்த பட்டியலில் புதிய சாதிகள் சேர்க்கப்படுகிறதே ஒழிய எந்த சாதியும் நீக்கப்படவில்லை. இந்த போக்கே நமது அரசியலமைப்பின் நோக்கத்திற்கு மாறாக உள்ளது. 

பத்தி 53- பின்தங்கிய நிலைக்கு சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம், கல்வி மற்றும் அரசியல் என பல தனித்த காரணிகள் இருக்கலாம். ஆனால் சாதியை மட்டுமே பிற்படுத்தப்பட்டதற்கான அளவீடாக எடுத்துக் கொள்ளகூடாது என நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இதற்கு புதிய அளவீடு முறைகளை உருவாக்கி, புதிதாக தோன்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை கண்டறிதல் வேண்டும். . இதன் அடிப்படையிலேயே சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினர்க்குரிய உரிமைகள் மூன்றாம் பாலினம் என்று சொல்லப்படும் அரவாணிகளுக்கும் பொருந்தும் என்று 2014ல் தீர்ப்பு ஒன்று வந்துள்ளது.

பத்தி 54- இனிமேலும் பிற்படுத்தப்பட்ட நிலையை கணக்குகள் அடிப்படையில் வகுக்கப்பட்ட சமூகம், பொருளாதாராம், கல்வியை குறித்தான தரவுகள் மட்டும் தீர்மானிக்க முடியாது. அதன் அடிப்படையில் முன்பு எடுக்கப்பட்ட தவறான முடிவுகளை வைத்து மீண்டும் அந்த தவறை அனுமதிக்க முடியாது. மேலே கூறப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில், அரசியல் ரீதியாக நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஜாட் போன்ற சாதிகளை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பிரேந்தர் சிங் தலைமையில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 27 ஜாட் எம்பிக்கள், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீயை சந்தித்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியுள்ளனர். இத்தீர்ப்பை ரத்து செய்யாவிட்டால் பெரும் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதற்குப் பணிந்துபோன இந்துத்துவ பாஜக அரசு மேல் முறையீடு செய்யவும் தயாராகிவிட்டது. ஏனென்றால், இந்துத்துவத்தைக் கட்டிக்காப்பதுதானே பாஜகவின் மநுதர்மமாக இருக்கிறது.

கடந்த பல நூறாண்டு காலமாக அரசியல் சமூகம் பொருளாதாரம் என அனைத்து மட்டங்களிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு சமூக இழிவுக்குள்ளாக்கப்படும் சமூகங்களுக்குத்தான் இடஒதுக்கீடு, அவர்களை கை தூக்கி மேலே விடுவது தான் இடஒதுக்கீட்டின் நோக்கம், இதுவே சமூக நீதி என புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போராடினார்கள். ஆனால், இன்று சாதிப் பெருமை பேசுகின்ற சமூகத்தினரும் கூட இடஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்து வருகின்றனர்.

இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் ஒன்றில் ஜாட் சாதியினர் 
தமிழகத்திலும் இப்படிப் பல சாதிகள் உள்ளன. தங்களை ஆண்ட பரம்பரை என்றும், இயற்கையின் உயர்ந்த கொடையான தாயின் கர்பப் பையைத் தவிர மற்ற எல்லா இடங்களிலிருந்தும் பிறந்தோம் என்று பெருமை பேசிக்கொண்டு, இடஒதுக்கீட்டுக்காக அரசிடம் கையேந்துகிறார்கள். இப்படி சாதிப் பெருமை பேசுபவர்கள், தங்களை உயர்த்த சமூகமாகச் சொல்லிக் கொள்பவர்கள், ‘நாங்கள் முன்னேறிவிட்டோம். பின்தங்கியவர்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம், யாரிடமும் கையேந்துகிற நிலையில் நாங்கள் இல்லை’ என்று அறிவித்துவிட்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேற வேண்டும். இதுதான் வீரம். இதைவிட்டுவிட்டு ஒரு பக்கம் ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் இடஒதுக்கீட்டுக்காக மண்டியிடுவது முரண்பாடு இல்லையா?

மூன்றாம் பாலினமான அரவாணிகளுக்கும் இடஒதுக்கீடு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியதன் அடிப்படையில் அவர்களை இந்த அரசு பரிசீலிக்க வேண்டும். 'ஆண்ட பரம்பரை' 'தீச்சட்டியிலிருந்து பிறந்தவன்' 'இந்த ராஜாவின் பரம்பரை - அந்த சமஸ்தானத்தின் வாரிசு' எனப் பேசுகின்ற அனைத்துச் சாதியினரையும் ஒரு தொகுப்பாகச் சேர்த்து ‘ஆண்ட பரம்பரை கோட்டா’ ஒன்றை உருவாக்கி அதில் இணைத்துவிடுவது நல்லது. இதுதான் உண்மையான சமூகநீதியின் உச்சமாக இருக்கும்!

வன்னி அரசு.

2 comments:

vimalrajnpt said...

நீங்க தான் சாதியை ஒழிக்க போரீங்களே அப்புரம் என்னதுக்கு sc/st இடஒதுக்கீடு. எதுக்கு தேர்தலில் தனித்தொகுதி.தமிழகத்தில் எண்மையான சாதி வெறி கும்பல், மன நோயாளி கும்பல் நீயும் மற்றும் திருமாவும் தான்.. உனக்கு திராணி இருந்தால் தைரியம் இருந்தால் முகநூலில் comment section open இல் வைத்து பதிவிடவும்.

vimalrajnpt said...

நீங்க தான் சாதியை ஒழிக்க போரீங்களே அப்புரம் என்னதுக்கு sc/st இடஒதுக்கீடு. எதுக்கு தேர்தலில் தனித்தொகுதி.தமிழகத்தில் உண்மையான சாதி வெறி கும்பல், மன நோயாளி கும்பல் நீயும் மற்றும் திருமாவும் தான்.. உனக்கு திராணி இருந்தால் தைரியம் இருந்தால் முகநூலில் comment section open இல் வைத்து பதிவிடவும்.

Post a Comment