10 May 2013

மருத்துவர் இராமதாசின் பொய் முகமும், வேலாயுதபுர சாதியத்தின் கோர முகமும்-வன்னிஅரசு

“நெல்லை மாவட்டம் கழுகுமலைக்கு அருகே உள்ள அந்த ஊரில் வசிக்கின்ற நானூறு ரெட்டியார் குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். தாழ்த்தப்பட்டோர் எங்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று காப்பாற்றும்படிக் கதறி அழுகிறார்கள்”
vanniarasu_velayuthapuram_6
நாதஸ்வர வித்வான் எம்.எஸ்.முத்தையாவுடன்...
கடந்த 25-4-2013 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சாதிச் சங்கக் கூட்டத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கானோர் மத்தியில் நூற்றுக் கணக்கான உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்த அதிர்ச்சித் தகவலை மருத்துவர் இராமதாசு வெளிப்படுத்தினார். அந்த ஊர் எது என்று ஊடகவியலாளர்களும் உளவுத்துறையும் ஆராய ஆரம்பித்தனர்.
8-5-2013 அன்று நாமும் அந்த ஊரைத் தேடி பயணப்பட்டோம். அந்த ஊரின் பெயர் டி.வேலாயுதபுரம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலிருந்து 3வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த டி.வேலாயுதபுரம் (மருத்துவர் இராமதாசு சொல்வதைப்போல் நெல்லை மாவட்டத்தில் இல்லை.)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் இராசா, ஆதித் தமிழர் பேரவையின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், கவுதமன் ஆகியோருடன் நாமும் அந்த ஊருக்குச் சென்றோம். புளியம்பழங்களைச் சுமந்துகிடக்கும் மரங்களும், மஞ்சநெத்திப் பூக்களின் மணம் மரப்பும் மரங்களும் வழிநெடுக எங்களை வரவேற்றன. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த 47 குடும்பங்களும், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 4 வண்ணார் குடும்பத்தினரும் அடங்கியதுதான் இந்த வேலாயுதபுரம்.
வேலாயுதபுரத்திற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கொடி பறக்கும் காரில் நுழைந்தவுடனேயே அந்த ஊர் மக்கள் கும்பல் கும்பலாகக் கூட ஆரம்பித்தனர். ஊர் மந்தைக்கு அருகே இரண்டு போலிசார் காவலுக்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் வேலாயுதபுரம் சேரிக்குச் செல்லும் பாதையைக் கேட்டுச் சென்றோம். எலந்தப் பழங்களை சின்னஞ்சிறு பிள்ளைகள் முள் படாமல் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். ஊருக்கும் சேரிக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. சேரிக்குள் நுழைந்தோம்.
இந்தியாவிலுள்ள எல்லா ஊர்களும் சேரியை எப்படி நடத்துகின்றனவோ அப்படித்தான் வேலாயுதபுரமும் சேரியை நடத்துகிறது. ஊருக்கே செருப்புத் தைத்துக் கொடுத்தாலும் அருந்ததிய மக்கள் செருப்புப் போட்டுக்கொண்டு ரெட்டியார் தெருவுக்குள் நடக்க முடியாது. சைக்கிள் வாங்கலாம். ஆனால் உருட்டிக்கொண்டுதான் போக வேண்டும்; ஏறிச் செல்ல முடியாது. அங்குள்ள நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் அருந்ததியர் குழந்தைகளுக்கு தனியேதான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்புக்கு மேல் யாரும் படிக்கக் கூடாது.
இங்குள்ள அருந்ததியர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் எதுவும் இல்லை. கூலி வேலைக்குத்தான் செல்லவேண்டும். பெண்கள் அங்குள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்குச் சென்று தீக்குச்சிகளை அடுக்க வேண்டும். ஆண்கள் சீமைக் கருவேல மரங்களை வெட்டி கரிக்கட்டைகளாக்கி திருநெல்வேலி, தூத்துக்குடி, கழுமலை, சங்கரன்கோவில் போன்ற ஊர்களுக்குச் சென்று விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டும். இதுதான் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலை.
vanniarasu_velayuthapuram_7
சுபா குடும்பத்தாருடன்..
கடந்த 10-8-2006 அன்று தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைசெய்யும் சுபா என்கிற 16 வயது பெண், “இந்த ஊரின் கொடுமையிலிருந்து எங்கள் மக்கள் விடுதலை பெற வேண்டும்” என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்.
ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் சுபாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்துள்ளனர். சாதிப் பெயரைச் சொல்லி கேலியும் செய்து வந்துள்ளனர். சுபா மட்டுமல்லாது சேரியிலிருந்து வருகிற எல்லா பெண்களிடமும் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கேலியும் கிண்டலும் செய்து கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த சுபா தற்கொலை செய்துகொள்கிறார். காவல்துறையோ, வழக்கம்போல் சிலரைக் கைது செய்துவிட்டு பின்பு அவர்களை விட்டுவிடுகிறார்கள். சுபாவின் தற்கொலையை அடுத்து, போலிஸ், கோர்ட் என்று அதே சேரியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அலைய ஆரம்பிக்கிறார். “போலிசுக்கெல்லாம் போக வேண்டாம்!” என்ற ரெட்டியார்களின் கட்டளையை மீறி கருப்பசாமி களப்பணியாற்ற ஆரம்பித்தார்.
இந்நிலையில், கடந்த 12-4-2013 அன்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கருப்பசாமி வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த 13 இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
“இந்த ஊர்ல ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு தம்பி. எங்க தெருவுக்குள்ள ரேசன் கடை இல்லை. அவுங்க தெருவுக்குள்ள இருக்கிற ரேசன் கடைக்குத்தான் போக வேண்டும். யாரும் இல்லாத நேரமாப் பாத்து ஜன்னலுக்கு வெளியே நின்னுதான் வாங்க வேண்டும்” என்றார் சேரித்தெரு நாட்டாமை சுப்பிரமணி.
சுப்பிரமணியின் மகன் முத்துகிருஷ்ணனுக்கு ஊரில் அஞ்சல் அலுவலக உதவியாளராகப் பணி கிடைத்தது. “சக்கிலியப் பய தொட்ட லட்டர நாங்க வாங்கணுமா? ஒழுங்கு மரியாதையா வேலை வேணாம்னு எழுதிக் கொடுக்கச் சொல்லு” என்று தினமும் ரெட்டியார் சமூகத்தினர் சுப்பிரமணியை மிரட்ட ஆரம்பித்தனர். மிரட்டலுக்குப் பயந்து முத்துகிருஷ்ணன் வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்னைக்குச் செல்கிறார். இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால், முத்துகிருஷ்ணனோ சென்னைக்குப் போய் அடுத்தடுத்த போட்டித் தேர்வுகளை எழுதி இப்போது தலைமைச் செயலகத்தில் கமாண்டோவாக துப்பாக்கியும் கையுமாகப் பணிபுரிகிறார்.
நாதஸ்வர வித்வானாக அம்மாவட்டங்களில் புகழ்பெற்றவராக மதிக்கப்படும் எம்.எஸ்.முத்தையா, “இப்பகுதியில் திருவிழாக் காலங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் நாங்கள் போகக் கூடாது. ஊரில் உள்ள நிகழ்ச்சியில்தான் நாதஸ்வரம் வாசிக்க வேண்டும். அதுவும் இலவசமாகத்தான் வாசிக்க வேண்டும். உறவினர்களின் வீடுகளுக்கு நாங்கள் போக வேண்டுமென்றாலும், உறவினர்கள் எங்கள் வீடுகளுக்கு வரவேண்டுமென்றாலும் ஊர் மந்தையில் காலில் விழுந்து கேட்டுவிட்டுத்தான் போக வேண்டும், வரவேண்டும்” என்றார். சிறந்த நாதஸ்வர வித்வானான எம்.எஸ்.முத்தையாவுக்கு கடந்த ஆண்டுதான் அரசு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது. ஆனால் வேலாயுதபுரமோ...?
vanniarasu_velayuthapuram_8
கருப்பசாமி குடும்பத்தாருடன்..
அடிமைத்தனத்திற்கு எதிராக 2006ஆம் ஆண்டு உயிர்நீத்த சுபாவின் மறைவுக்குப் பிறகு அருந்ததியர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தார்கள். மந்தையில் துணிச்சலாகக் கேள்வியெழுப்ப ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அரிபால் ரெட்டியார், அருந்ததியர் பலரை மந்தையில் வைத்தே அடித்துள்ளார். இவர் வேலாயுதபுரத்திலிருந்து வெளியேறி துபாயில் சென்று பணிபுரிந்து வந்தவர். “நான் போகும்போது ஊரு இப்படியில்லையே. இவனுகளுக்கு யார் துணிச்சலத் தந்தது? இவனுகள ஆரம்பத்துலயே அடக்கி வைக்கணும்” என்று அரிபால் ரெட்டியார் கொதித்துப்போனதன் விளைவு சேரியைச் சுற்றி முள் வேலி அமைக்கும் பணி தொடங்கியது. 47 குடும்பங்கள் வசிக்கும் அருந்ததியர் குடியிருப்பைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைத்தனர். அருந்ததியர்கள் இந்த முள்வேலிக்குள்தான் வாழ வேண்டும். ரெட்டியார்களின் காடு கரைகளில் கால் வைக்கக் கூடாது. கால் வைத்தால் தீட்டுப் பட்டுவிடுமாம்.
இந்தத் தீண்டாமை முள்வேலி அமைக்கும்போது பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இவர் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். “என்னையும் சக்கிலியர்களோடு ஒதுக்கி வைத்துவிடுங்கள். இதற்கு நான் உடன்படமாட்டேன்” என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். விளைவு 2011 பஞ்சாயத்துத் தேர்தலில் தோழர் இராதாகிருஷ்ணன் தோற்கடிக்கப்பட்டு அமராவதி என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மதிமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பழனிச்சாமி ரெட்டியார்தான் இப்போது அருந்ததியர்களை ஒடுக்குவதில் மும்முரமாக இருக்கிறார். இவரோடு போஸ், அரிபால், சுப்புராஜ் (அதிமுக), இராஜேந்திரன், மணிகண்டன், நாராயண ரெட்டியாரின் மகன் பால்ராஜ், தவிட்டு ரெட்டியாரின் மகன் ரமேஷ், நாராயணன், பெத்து ரெட்டியார், சீனிச்சாமி ரெட்டியார் ஆகியோர்தான் தீண்டாமை முள்வேலி உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளைச் செய்வதில் முன்னணியில் நிற்பவர்கள். 
கடந்த 12-4-2013 அன்று கருப்பசாமி படுகொலை செய்யப்பட்டதை அடுத்துதான் இந்தத் தீண்டாமை முள்வேலி உலகுக்கே தெரிய வந்துள்ளது. 13-4-2013 அன்று அந்த ஊருக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. இராஜேந்திரன் அவர்கள் தீண்டாமை முள்வேலியைப் பார்த்துக் கொதித்துப் போய்விட்டார். அவரே முன்னின்று முள்வேலியைப் பிரித்து எறியும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனாலும், கழுகுமலை காவல்நிலைய அதிகாரிகளோ உள்ளூர்ப் பகை வேண்டாம் என்று ரெட்டிகளோடு ஒட்டி உறவாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இத்தகைய சேரியைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் நமக்கு வந்தது.
ஆதித்தமிழர் பேரவையின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் தோழர்கள் சிலர் எங்களைப் பார்ப்பதற்காக சேரிக்குள் வர முயன்றனர். அப்போது ஊர் மந்தையில் பெண்கள் வழிமறித்து, “ஏண்டா சக்கிலியப் பயலுகளா, எங்கடா வந்தீங்க? இந்த நாய்களுக்கு நீங்கதான் சப்போர்ட்டா? கார்ல உள்ள போன அந்த சக்கிலிய நாயிகள நாங்க வெளியே விடப்போறதில்ல...” என்று வாய்க்கு வந்தபடி கூச்சலிட்டு அவர்களை அடிக்காத குறையாக விரட்டியடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலிசோ வேடிக்கை பார்த்ததைத் தவிர ஒன்றும் செய்யவில்லை. இதையறியாமல், நாங்களோ அந்தத் தீண்டாமை முள்வேலியையும் ஊர் மக்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரே ஒரு போலிஸ்காரர் எங்களிடம் வந்து, “சார் கொஞ்சம் இருங்க. அவங்க கும்பலா கூடி கோபத்தோட இருக்காங்க. போலிஸ் ஃபோர்ஸ் வந்ததுக்குப் பிறகு நீங்கள் போகலாம்” என்றார்.
vanniarasu_velayuthapuram_9
காவல் துறையினருடன்...
மாலை 5 மணிக்கு சேரிக்குள் போன நாங்கள் இரவு 7 மணியளவில் வெளியேற முயன்றோம். போக முடியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் இரு காவலர்களுடன் வந்து, “சார் எங்க பின்னாலயே வாங்க” என்றபடி நடந்து சென்றார்கள். நாங்கள் காரில் பின்தொடர்ந்தோம். ஊர் தெருவை நெருங்கும்போதே அந்தக் குரல் கேட்டது.
“அந்தச் சக்கிலியப் பயலுகள இறக்கிவிடுங்க. இவனுங்களுக்கெல்லாம் கார் ஒரு கேடா?” என்று கத்த ஆரம்பித்தனர். கைகளில் அரிவாள், வேல்கம்பு, ஈட்டி மற்றும் கற்கள். நிலைமையை அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு எங்களிடம் மிக அமைதியாகச் சொன்னார், “சார் போகலாம் சார். பேசிட்டேன். போற வழியில மந்தையில போய் இனிமே வரமாட்டோம்னு சொல்லிட்டுப் போயிருங்க” என்றார்.
அதிர்ந்துபோன நாங்கள், “அவர்களிடம் போய் சொல்ல வேண்டுமா? இல்லை காலில் விழுந்து செல்ல வேண்டுமா? என்ன நடக்கிறது இங்கே” என்று கோபத்துடன் கேட்டோம். சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் அந்த ஊர் மக்களிடமே சென்றுவிட்டார். உயர் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசிய பிறகு டி.எஸ்.பி. தலைமையில் காவல்துறையினர் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல்தான் சேரியைக் கடந்து ஊரையும் கடந்து வெளியேறினோம். நடந்ததை கழுகுமலைக் காவல் நிலையத்தில் புகாராக எழுதிக் கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி வற்புறுத்தி வந்தோம்.
டி.வேலாயுதபுரம் சேரியைப் பார்வையிடச் சென்ற நமக்கே இந்த நிலை என்றால் காலங்காலமாய் அங்கேயே குடியிருக்கும் அப்பாவி அருந்ததிய மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். இலங்கையில் முள்வேலி முகாம்களை அகற்றக் கோரி தமிழர்களெல்லாம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற சூழலில்தான், சொந்த மண்ணிலேயே முள்வேலிக்குள் மண்ணின் மைந்தர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.
இவ்வளவு கொடுமைகளையும் செய்துவிட்டு தலித்துகள்தான் கொடுமை செய்கிறார்கள் என்று மருத்துவர் இராமதாசு பேசுவது நியாயம்தானா? அவர் பொது மேடையில் நாகரிகமாகப் பேசுவதில்லை. பேசும் பேச்சிலும் உண்மை இல்லை. ஆனால் தொடர்ந்து எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று சவால் விட்டுக்கொண்டேயிருக்கிறார். 'விடுதலைச் சிறுத்தைகள் பெண்களைக் கடத்துகிறார்கள், அதை வைத்துப் பேரம் பேசுகிறார்கள்' என்று வாய்க்கு வந்தபடி பேசி ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் காட்டியதில்லை. இல்லாததை எப்படிக் காட்ட முடியும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இராமதாசு பேசுவதெல்லாம் பொய்யும் புரட்டும்தான் என்பதை இந்த வேலாயுதபுரம் சேரி உலகுக்குக் காட்டுகிறது. வேலாயுதபுரம் சேரிமக்களிடம் நாங்கள் வந்த நோக்கம் குறித்துப் பேசும்போது, “நீங்கதான் ரெட்டியார்களைக் கொடுமைப்படுத்துறதா டாக்டர் இராமதாசு சொன்னாரு. உண்மையான்னு பார்க்க வந்தோம்” என்று சொன்னபோது, ஒரு கிழவி கோபத்தோடு, “அந்த பிராடுகாரப் பயல இங்கக் கூட்டியா, அவனும் எங்கத் தாலிய அறுத்துட்டுப் போகட்டும்” என்றார்.
மருத்துவர் அவர்களே உங்கள் குடும்ப சுயநலத்திற்காக ஏன் இப்படி சேரிமக்களின் உயிரை எடுக்கிறீர்கள்?
- வன்னிஅரசு
Bookmark and Share

24 April 2013

கௌரவம் - சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு - வன்னிஅரசு


கௌரவம் - சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு - வன்னிஅரசு

அந்தப் பெரியவருக்கு வயது 70 இருக்கும். 23ஆம் புலிகேசி மன்னனைப்போல் அவருக்கும் ஒரு மீசை இருக்கும். இடுப்பில் பச்சை பெல்ட் மாட்டியிருப்பார். மேல் சட்டை இல்லை. முக்கால் அளவு வேட்டி. காலையில் எழுந்தவுடன் குளித்து விபூதிப் பட்டை தீட்டி பக்தி மணக்க மணக்க நடைபயணம் புறப்படுவார். யாரிடமும் பேசமாட்டார். யாராவது பேச முயற்சி செய்தால்கூட கண்டுகொள்ள மாட்டார். உணவு வாங்குவதற்கு வரிசையில்கூட வந்து நிற்க மாட்டார். எல்லோரும் உணவு வாங்கிச் சென்றபின் அவரது அலுமினியத் தட்டில் சோறு வாங்கிச் செல்வார். காவலர்கள் ஏதாவது கேட்டால்கூட, எதுவும் பேச மாட்டார். ஆனாலும் அந்த மத்திய சிறைவாசிகளில் பலர் அந்தப் பெரிசுக்கு மரியாதை கொடுத்துத்தான் வந்தார்கள்.

gouravam_450“டேய் இது எங்களுக்காக கட்டுன ஜெயிலுடா... பள்ளன் பறையன் எவனாவது ஜெயிலுக்கு வந்திங்கன்னா தேவன்னு சொல்லிப் பிழைச்சிட்டுப் போங்கடா” என்று தனிமைச் சிறையில் அடைபட்டிருக்கும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட கைதி கூட இந்தப் பெரிசைப் பார்த்தால் வணக்கம் போடுவான்.

பெரிசு பெயர் பாண்டித்தேவர். உசிலம்பட்டியைச் சேர்ந்தவர்.

நானும் பலமுறை அவரிடம் பேச முயற்சி செய்து பேச முயன்றேன் முடியவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டேன் - பாண்டித்தேவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையாம். மற்றபடி எந்த விவரமும் தெரியவில்லை. பாண்டித்தேவர் லாக்-அப் ஆகும்வரை நூலகத்தில்தான் இருப்பார். நூலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் படித்து முடித்தவர் அவர்தான். நூலக ஆசிரியர் சுருளிதான் என்னை பாண்டித்தேவருக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு வரும் நூல்களை அவருக்கும் படிக்கக் கொடுத்ததன் மூலம் என்னோடு சகஜமாகப் பேச ஆரம்பித்தார். அப்புறம்தான் அவரது முழுக் கதையும் எனக்குத் தெரிந்தது.

ஆசை ஆசையாய் வளர்த்த அவரது மகள் பக்கத்து ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட பள்ளர் வகுப்பைச் சேர்ந்த பையனைக் காதலித்துளளார். ஊரில் உள்ள புளிய மரங்களும் பனை மரங்களும்கூட இவர்களது காதல் கதையினை பேச ஆரம்பித்தன. பாண்டித்தேவருக்கு அது தெரியாமலா போய்விடும்! அவர் கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டது.

எட்டு மாதமாகக் கண்டுகொள்ளவில்லை. எட்டு மாதமாக வீட்டை விட்டே வெளியேறியதில்லை பாண்டித்தேவர். ஏதோ நடந்தது நடந்துபோச்சு என்று ஒன்பதாவது மாதம் வளைகாப்பு செய்து மகளை அழைத்து வருவதற்காக வைப்பதற்காக பாண்டித்தேவரின் மனைவி செல்கிறார். தலித் மருமகனும் மகிழ்ச்சியாக வளைகாப்பு முடித்து மனைவியை மாமியாருடன் அனுப்பி வைக்கிறார். வயறு நிறையக் குழந்தையோடு கை நிறைய வளையல்களோடு நெற்றி நிறைய மஞ்சள் குங்குமத்தோடு வாய் நிறைய சிரிப்போடு வந்த மகளைப் பார்த்து கட்டி அணைத்துக்கொண்டார் பாண்டித்தேவர். தன் கையாலேயே மகளுக்குச் சோறு ஊட்டிவிடுகிறார்.

இரவு 10 மணி. எல்லோரும் தூங்கப்போய்விட்டனர். நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம். வீட்டுக்குள் ஒரு உருவம் தீயில் எரிந்து விழுகிறது. வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் வந்து பார்க்கும்போது கருகிய நிலையில் பாண்டித்தேவரின் மகள் கிடக்கிறாள். வயிற்றுக்குள் இருந்த குழந்தையும் கருகி செத்துப்போனது.

“அப்பாடா... அப்பத்தான் என் சாதி கௌரவம் காப்பாற்றப்பட்டது தம்பி!” என்றார் பாண்டித்தேவர்.

“உங்க ஆசை மகளைக் கருக்கிட்டிங்களே. உங்க மகளைவிட சாதி பெரிசாப் போச்சா?” என்று கேட்டதற்கு,

அந்தப் பெரிசு எந்தச் சலனமும் இல்லாமல் சொன்னார்- “என்னை விட என் சாதி கௌரவம்தான் முக்கியம்”

இதற்காகத்தான் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

மதுரை மத்திய சிறையை இப்போது கடந்து போனாலும் அந்த பாண்டித்தேவர் என் நினைவில் வந்துபோவார்.

சக ஆயுள் சிறைவாசியாக நான் இருந்தாலும், இம்மாதிரியான காட்டுமிராண்டித்தனங்களின் எச்சங்களோடுதான் பயணப்பட்டேன். 1990ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வை, 1998ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றபோது அறிந்தேன். இப்படியெல்லாமா மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கொதித்துப் போனேன்.

ஆனால், நாயக்கன்கொட்டாய் இளவரசன்-திவ்யா காதலை சாக்காக வைத்து மூன்று சேரிகளைத் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கிய சாதிவெறியர்களை நினைக்கும்போது, பாண்டித்தேவர் என்கிற பெரிசு பரவாயில்லைபோல் தோன்றியது.

விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையில் வன்னியப் பெண் கண்ணகி, தலித் வகுப்பைச் சேர்ந்த முருகேசனை காதல் திருமணம் செய்துகொண்டார். எல்லா காதலர்களும் செய்வதைப்போலத்தான் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார்கள். கண்ணகியின் உறவினர்கள் ஊர் ஊராய்த் தேடிக் கண்டுபிடித்து ஊர் மந்தைக்கு அந்த காதல் ஜோடியை இழுத்து வந்தனர். மக்கள் யாவரும் பார்த்துப் பதைக்க, காதல் ஜோடி கதறக் கதற விஷம் கொடுத்து எரித்துக் கொல்கின்றனர். தங்களுடைய சாதி கௌரவத்தைக் காப்பதற்காக மனிதநேயத்தை கொன்றழித்த இந்தக் கொடூரத்தின் முன்பு பாண்டித்தேவர் என் நினைவில் வந்து வந்து போகிறார்.

இப்படி சமூகத்தில் அன்றாடம் நடக்கும் அவலங்களை, அநியாயங்களை படைப்புகளாக்க இச்சம்பவங்கள் யாரையும் உறுத்தவில்லையோ, மனசாட்சியை உலுக்கவில்லையோ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் ‘கௌரவம்’ திரைப்படம் வந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் நீயா? நானா? நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கொடுமை செய்பவர்களைவிட அதனை அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டார். அத்தகைய ஆபத்தானவர்கள் இந்தச் சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் உலவுகிறார்கள். மார்க்சியம் பேசுகிற, தமிழ்த் தேசியம் பேசுகிற, காந்தியம் பேசுகிற, முற்போக்குப் பேசுகிற எத்தனையோ இயக்குநர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் இயங்குகிறார்கள். எதற்கெடுத்தாலும் புரட்சி பேசுவது, அல்லது பெரியார் கருத்துகளைச் சொல்வது, இன்னும் கூடுதலாய் கருப்புச் சட்டையைப் போட்டுக்கொண்டு நாத்திகனாய் விசுவரூபம் எடுப்பார்கள். ஆனால் எடுக்கும் திரைப்படங்களைப் பார்த்தால் சமூகத்திற்கு எதிரான மசாலா படங்களையே எடுத்து பெருமை பேசுவார்கள்.

ஆனால் இயக்குநர் ராதாமோகன் அவர்கள் மிக நேர்மையாக இச்சமூகத்தில் நிலவும் சமூக அநீதியை திரைக்கதைப் போக்கில் எந்தத் திணிப்பும் இல்லாமல் அம்பலப்படுத்தியிருக்கிறார். சாதியின் பெயரால் நடக்கும் கௌரவக் கொலைகள் இயக்குநரை எந்த அளவுக்குப் பாதித்திருந்தால் இப்படியொரு படைப்பைப் படைக்கக் களம் இறங்கியிருப்பார்! சாதி எப்படியெல்லாம் சமூகத்திற்கு எதிராக இருக்கிறது என்பதை மிக நேர்த்தியாகப் திரைப்படமாக்கியிருக்கிறார்.

திரைப்படத்தில் பல இடங்களில் சினிமாத்தனமும் முரண்பாடுகளும் இருந்தாலும் இப்படியொரு கதையை களமாக அமைத்து தமிழகம் முழுவதும் சாதியை முன்வைத்து அரசியல் செய்பவர்களை அம்பலப்படுத்திய துணிச்சலுக்காகவே இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும்.

தன்னுடன் படித்த சண்முகத்தை தேடிப்போன நண்பர்களுக்கு அந்த டி.வெண்ணனூர் கிராமத்தில் நடப்பவை அதிர்ச்சியளிக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சண்முகம் அந்த ஊரில் மேல் சாதிப் பண்ணையாரான பசுபதியின் மகளை காதலித்து கூட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார். அவர்கள் என்ன ஆனார்கள்? மர்ம முடிச்சுகளை கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களுடன் சேர்ந்து அவிழ்க்கின்றனர். சாதி கௌரவத்தைக் காப்பதற்காக அந்த காதல் ஜோடியை வெட்டிப் படுகொலை செய்யும்போது இந்தியாவில் இப்படி எத்தனைக் காதலர்கள் வெட்டியும் நஞ்சு கொடுத்தும் எரித்தும் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதை நினைக்கும்போது நம் குலை நடுங்குகிறது.

“உங்களுக்கு கௌரவம்தான் முக்கியம் என்றால் நீங்க சாக வேண்டியதுதானே? ஏன் என் பிள்ளையைக் கொன்னீங்க?” என்று பண்ணையாரை அவரது மனைவி கேட்கும்போது பல பெரிய மனிதர்களின் செவுளில் அறைந்ததுபோல் இருக்கிறது. கம்யூனிசம் பேசுகிற தொழிற்சங்கவாதிகூட எப்படி இருப்பார் என்பதை நாசர் தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். தலித்துகளுக்குள்கூட தீண்டாமை இருக்கிறது என்பதை சம்பந்தமில்லாமல் கம்யூனிஸ்டுகள் பேசுவதை இயக்குநர் சுட்டிக்காட்டியுள்ளார். சேரியைக் காட்டும்போதுகூட புரட்சியாளர் அம்பேத்கர் சிலை கோணியால் மூடப்பட்டிருக்கும் அயோக்கியத்தனத்தையும் சத்தமில்லாமல் படம்பிடித்துள்ளனர்.

தேநீர்க் கடைகளில் முன்பெல்லாம் தலித்துகளுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் ஊற்றுவார்கள். அதற்கடுத்து தனிக் குவளைகளை ஒதுக்கினார்கள். நாகரிகம் வளர வளர, அறிவியல் வளர வளர தீண்டாமையும் வேறொரு வடிவம் கொள்கிறது என்பதை திரைப்படத்தின் தேநீர்க் கடைகள் அம்பலப்படுத்துகின்றன. சேரியிலிருந்து வருகிற மாசி என்கிற இளைஞன் தேநீர் குடிக்க கடைக்கு வரும்போது மரத்தில் தொங்க விடப்பட்டுள்ள பயன்படுத்திவிட்டுத் தூக்கிப்போடும் காகிதக் குவளையில் தேநீர் குடிப்பான். உயர் சாதியினர் கண்ணாடிக் குவளையில் குடிப்பதை குளோஸ்-அப்பில் காட்டும்போது இப்பல்லாம் யார் சாதி பார்க்குறாங்க என்று முற்போக்குப் பேசுபவர்களின் முகத்தில் காறி உமிழ்வதுபோல் உள்ளது.

“சேரிக்காரர்கள் எவ்வளவுகாலம்தான் அடி வாங்குவார்கள். திருப்பி அடிப்பது எப்போது?” என்று சேரித் தோழர் கேட்கும்போது தலித் மக்களின் வலியையும் உணர்வையும் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளைக் களைய மாணவர்களும் இளைஞர்களும் களமிறங்கினால்தான் முடியும் என்று இயக்குநர் இளைஞர்களை உசுப்பேற்றியிருக்கிறார்.

இன்றைக்கு மாணவர்களை, இளைஞர்களை சாதிவெறி ஊட்டி தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்ற முயற்சி செய்து வரும் மனித சமூகத்திற்கே அவமானமான செயலை அரங்கேற்றி வருகிற காட்டுமிராண்டிகளுக்கு அறிவுரைக்கும் வகையில் சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு இத்திரைப்படம். சமூகத்தில் தன்னோடு வாழும் சக மனிதன் ஏன் இப்படி சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்படுகிறான்? புறக்கணிக்கப்படுகிறான்? கொல்லப்படுகிறான் என்பதை பிரகாஷ்ராஜ், ராதாமோகன் ஆகியோர் கேள்வி கேட்டிருப்பது துணிச்சலான செயல், பாராட்டுக்குரிய செயல்.

சமூகநீதிக்காகப் போராடுபவர்கள், முற்போக்குப் பேசுபவர்கள், சமூகத்தை மாற்றத் துடிப்பவர்களும் இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். அனைவரையும் பார்க்கத் தூண்ட வேண்டும். அப்போதுதான் இந்தச் சமூகத்தின் அவலங்களை பரப்புரை செய்ததற்கான கடமையைச் செய்ததாக அமையும்.

- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)

30 January 2013

திரைப்படங்களில் 'விசுவரூபம்' எடுக்கும் 'இந்துத்துவம்' - வன்னி அரசு



நாட்டுக்கோழி அடித்து மணக்க மணக்க மசாலா தடவிநெருப்பில் வாட்டி ருசிக்க ருசிக்க குழம்பு வைத்து விருந்து தடபுடலாக ஏற்பாடாகி விட்டது. இலை போட்டு, பரிமாறி சாப்பிட யாவரும் தயாராகி விட்டனர். நாட்டுக்கோழியின் மணம் ஊரெல்லாம் சுண்டி இழுக்கிறது. நாவில் உமிழ்நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. கைக்குத்தல் அரிசிச் சோறோடு கோழிக்கறியை பிசைந்து வாயில் வைக்கும் போது "அய்யோ அந்த உணவில் விஷம் கலந்திருக்கிறது. யாரும் சாப்பிடாதீர்கள்" என்று ஒருவன் கத்துகிறான். எல்லோரும் அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள், இவ்வளவு சிரமப்பட்டு செலவு செய்து விருந்து படைத்து விட்டார்கள் என்று விஷம் கலந்த உணவை யாரும் சாப்பிடுவார்களா?

kamal_vishwaroopam_370அதேபோல்தான் 'விசுவரூபம்' திரைப்படமும். 'கோடிக்கணக்கில் செலவு செய்து விட்டோம்; பெரும் பொருட்செலவில் பல நாடுகளில் படப்பிடிப்பு எடுத்து விட்டோம். ஆகவே திரைப்படம் திரையிட்டே ஆக வேண்டும்' என்று சொல்வது ஞாயமா? நல்ல விருந்தில் ஒரு சொட்டு 'விஷம்' விழுந்தாலும் உணவு முழுக்கப் பரவி உண்பவர்களை சாகடிக்கும். அதேபோல்தான் பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுத்தாலும் இசுலாமிய சமூகத்திற்கெதிராக விஷத்தைக் கொட்டியிருப்பது சனநாயகத்தை, மதச்சார்பின்மையைச் சாகடிப்பதற்கு ஒப்பானதுதான்.

திரைப்படக் கலைஞர் கமல் எழுதி இயக்கியிருக்கும் 'விசுவரூபம்' திரைப்படத்தை இசுலாமிய சமூகத்தினரின் கடுமையான எதிர்ப்பால் தமிழக அரசு தடை செய்தது. கமல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக படத்தில் காட்சிகள் இல்லை என்று கூறி தடையை நீக்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்திய முஸ்லிம்களுக்கு என்று தனி கொள்கை, கோட்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இது ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தின் உணர்வுகளுக்கு எதிரானது என்று எண்ணத் தோன்றுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறப்பட்டுள்ளது. இசுலாமிய சமூகத்தினர் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டுள்ளதாக இசுலாமிய சமூகம் மட்டுமல்ல படம் பார்த்த மற்றவர்களும் அப்படித்தான் வருத்தப்பட்டனர்.

படம் தடை செய்யப்பட்ட சூழலில் கமலுக்கு ஆதரவாக பலர் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.இராமகிருஷ்ணன் மற்றும் வன்னியர் சங்கத் தலைவர் இராமதாஸ் (இனி இவரை இப்படி அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்) ஆகியோர் 'கமல் நல்லவர், வல்லவர், சிறந்த கலைஞன்' என்றெல்லாம் கமல் மீது தங்களுக்குள்ள தனிப்பட்ட மதிப்பை வைத்து அறிக்கை விடுத்து 'விசுவரூபம்' திரைப்படத்தை வெளியிட ஒத்துழைப்புத் தர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"உலக மகா கலைஞன் கமல். அவனது படைப்பைச் சுதந்திரமாக வெளியிட உதவுங்கள்" என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா உருக்கமாக கமலுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

கமல் என்கிற தனிமனிதனுக்காகப் பேசும் இவர்கள் கோடிக்கணக்கான இசுலாமிய சமூகத்தினரைக் கொச்சைப்படுத்தி, திரித்துக் காட்டுவதைக் கண்டிக்கவும் இல்லை; அக்காட்சிகள் தணிக்கைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட‌ வேண்டும் என்று கமலுக்கு அறிவுரையோ ஆலோசனையோ சொல்ல முன்வரவும் இல்லை.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டுமே கமலின் இசுலாமிய விரோதப் போக்கைக் கண்டித்தார். கடந்த 27.1.2013 அன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து விட்டார்கள். அவர் நட்டப்படக் கூடாது என்று சொல்கிறார்கள். கோடிக்கணக்கான இசுலாமியர்களின் நன்மதிப்பைவிட, கோடிக்கணக்கான பணம் முக்கியமல்ல" என்றார். அது மட்டுமல்லாமல் தணிக்கைக் குழுவையும் கண்டித்து கட்சி, மதச் சார்பற்ற அறிவுஜீவிகளைத் தணிக்கை குழுவில் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இச்சூழலில் 'விசுவரூபம்' திரைப்படத்தை முன்வைத்து இன்றைக்குப் பல விவாதங்களை நாம் முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கமல்ஹாசன் நல்ல கலைஞர், இதற்கு முந்தைய திரைப்படங்களையெல்லாம் சிறப்பாக எடுத்திருக்கிறார் என்றெல்லாம் கமலுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். (உன்னைப் போல் ஒருவன் கூட நல்ல திரைப்படம்தானா?) "இது வரை நன்றாகத்தான் இருந்தான். பாவம் இப்போது புத்தி பேதலித்து விட்டது. தெரியாமல் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான். மன்னித்து விட்டுவிடுங்கள் யுவர் ஆனர்" என்று நீதிபதியிடம் வழக்கறிஞர் பேசினால் எப்படி நீதிமன்றமே சிரிக்குமோ அப்படித்தான் இந்த உலகமே சிரிக்கும். கமல் நல்ல சமூக சிந்தனை உள்ளவராக இருந்திருந்தால் ஒட்டுமொத்த சினிமா என்ன சிந்தனையைக் கொண்டுள்ளதோ அத்தகைய இந்துத்துவ சிந்தனைகளைக் கமலும் கொண்டிருப்பாரா? இதில் என்ன முற்போக்கு என்று புரியவில்லை.

கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் விஜயகாந்த் கூட இசுலாமியத் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டத்தான் திரைஉலகில் நுழைந்ததுபோல் பாகிஸ்தான் வரை சென்று இசுலாமியத் தீவிரவாதிகளை வேட்டையாடுவார். உச்சகட்டமாக இசுலாமியத் தீவிரவாதிகள் மதுரை அழகர் கோவிலைத் தகர்க்க சதித்திட்டம் தீட்டுவதையும், அந்தச் சதித்திட்டத்தை கள்ளழகர் 'விஜயகாந்த்' முறியடிப்பதையும் நாம் சகித்துக் கொண்டுதான் இருந்தோம். இப்படி விஜயகாந்த் மட்டுமல்ல பெரும்பாலான திரைப்படங்களில் இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளாக, இந்திய தேசத்திற்கே எதிரானவர்களாகத்தான் சித்தரிக்கிறார்கள்.

அண்மையில் விஜய் நடித்து வெளிவந்த 'துப்பாக்கி' படத்திலும் இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளாகத்தான் அப்பட்டமாகக் காட்டினார்கள். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த 'பயணம்' திரைப்படத்தில்கூட விமானத்தை இசுலாமிய பயங்கரவாதிகள் கடத்துவதைப் போலத்தான் காட்டினார்கள்.

இது திரைக்கதைக்காகவோ அல்லது விறுவிறுப்புக்காகவோ எடுக்கப்படுவதல்ல. சமூகத்தில் மேலாதிக்கம் செய்து வரும் இந்துத்துவச் சக்திகளின் திட்டமிட்ட பரப்புரையும் சிந்தனையும்தான் இதற்குக் காரணம்.

இன்றைக்குத் திரை உலகமே இந்துத்துவ ஆதிக்கவாதிகளின் பிடியில்தான் சிக்கி இருக்கிறது. அதனால்தான் இசுலாமியச் சமூகத்தை மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மற்றும் கிறித்துவ சிறுபான்மை சமூகத்தையும் இழிவுபடுத்தி காட்சி அமைக்கின்றனர்.

துணி வெளுப்பவர்களைக் கிண்டல் செய்வது, முடி வெட்டுபவர்களை முட்டாள்களாகக் காட்டுவது, தாழ்த்தப்பட்டவர்களை அடிமைத் தொழில் செய்பவர்களாக அல்லது அடிமைத் தொழிலை விரும்பியோ விரும்பாமலோ செய்பவர்களாகக் காட்டுவதில்தான் பெரும்பாலான திரைப்படங்கள் போட்டி போட்டுள்ளன. தலித்துகளை மட்டுமல்லாது பெண்களை எவ்வளவு உச்சத்திலும் நின்று கேலி செய்து கொண்டிருக்கிறது சினிமா உலகம்.

மானே, தேனே, மயிலே, குயிலே என்று வர்ணித்த திரைத்துறையினர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்கா, முத்துன மாங்கா என்றெல்லாம் பெண்களைக் காய்கறிகளை வைத்துக் கிண்டல் செய்யும் அளவிற்குச் சென்றனர். இந்த ஆணாதிக்க மனோபாவம் என்பது இந்துத்துவத்தின் உள்ளீடுதான்.

தலித்துகளைக் கூட இழிவுபடுத்தி ஏராளமான படங்களில் திட்டமிட்டும் தற்செயலாகவும் காட்சி அமைத்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு பல திரைப்படங்களில் "அட சண்டாளா" என்று பேசுவார். தாழ்த்தப்பட்டோரைப் பட்டியலிடும்போது 'சண்டாளன்' என்கிற சாதியும் உள்ளது என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். 'சாமி' திரைப்படத்தில் நடிகர் விவேக் முற்போக்கு வைதீகனாக நடிப்பார். அதில் மற்றொரு வைதீகன் அவனுடைய மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். அப்போது செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். உடனே நடிகர் விவேக், "அந்த புள்ளாண்டனுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடாதோ" என்பார். உடனே அந்த வைதீகன் "அவங்கள்ளாம் படிக்கக் கூடாது" என்று சாதியைக் காரணம் காட்டுவார். உடனே அந்த தாழ்த்தப்பட்ட பையனிடம் போய் என்ன படிக்க விரும்புகிறாய் என்று விவேக் கேட்பார். "லா படிக்க விரும்புகிறேன்" என்பான் அந்த தலித் பையன். "என்ன லா" என்பார் விவேக். அதற்கு 'சகிலா' என்பான். இப்படித்தான் தலித்துகளைப் பயன்படுத்தி கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.

அது மட்டுமல்ல இன்றைக்கு திரைப்படங்களில் மட்டுமல்ல, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ஒரு வார்த்தையை சகஜமாக பழக்கத்தில் விடுகிறார்கள். 'அட்டு பிகர்' என்கிற சொல்லாடல்தான்.

இந்தச் சொல்லாடல் அனைத்துத் திரைப்படங்களிலும் பெண்களைக் கிண்டல் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். இந்த 'அட்டு பிகர்' எங்கிருந்து வந்தது?

'Hut' என்கிற ஆங்கில வார்த்தையிலிருந்துதான் வந்திருக்க முடியும். ஏனென்றால் 'hut' என்றால் குடிசை என்று பொருள். சேரிகளெங்கும் குடிசைகள் இருப்பதனால் சேரிப் பெண்ணை அல்லது குடிசைப் பெண்ணைக் கிண்டல் செய்வதற்காக 'hut figure' அட்டு பிகர் என்று கூறுகிறார்கள். இன்றும் திரைப்படங்களில் கறுப்புப் பெண்களை அல்லது கிண்டல் செய்வதற்காகவே காட்டப்படும் பெண்களை இப்படி அழைக்கிறார்கள்.

kamal_vishwaroopam_400வில்லன்களாகச் சுட்டப்படும் பெயர்களைக் கூட பாருங்கள். ஆஸிப்கான், யூசுப்கான், அன்வர், பீட்டர், டேனியல் என்று சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த பெயர்களையே தொடர்ச்சியாகக் காட்டி வருகிறார்கள்.

இதுவெல்லாம் திரைக்கதை ஆசிரியருக்கும் தெரிந்தே, திட்டமிட்டே வைக்கப்படுகிற காட்சிகள், பெயர் சூட்டல்கள்தான். இதை திரைப்படத்துறையினர் மிகவும் துணிச்சலாக செய்து வருகின்றனர். இதில் உலக மகா கலைஞர் கமலஹாசன் எந்தவிதத்தில் முற்போக்கு? எந்தவிதத்தில் மற்றவர்களைவிட வித்தியாசமானவர் என்று புரியவில்லை.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

எதற்காக சினிமா எடுக்கிறார்கள், சமூகத்தை மாற்றவா? அல்லது புரட்சி செய்து புதிய மாற்றத்தை உருவாக்கவா சினிமா எடுக்கிறார்கள்? அதுவெல்லாம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் காலம். விதவைத் திருமணத்தை வலியுறுத்தி திரைப்படங்கள், சமூக இழிவுகளுக்கெதிரான திரைப்படங்கள், அறிஞர் அண்ணா, கலைஞர், திருவாரூர் தங்கராசு போன்றோரின் திரைப்படங்கள் எல்லாம் சமூகத்தைப் புரட்டிப் போட்டன. அது ஒரு காலம்.

இப்போது சமூகநீதிக்கு எதிரான திரைப்படங்களைத் துணிச்சலாக எடுக்கின்றனர். இடஒதுக்கீடுதான் சமூகத்தைச் சமப்படுத்தும் என்று தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வாழ்நாள் முழுக்கக் களமாடினார்கள். ஆனால் சினிமா மூலம் பிழைக்க வந்த அட்டக்கத்திகள் அப்போராளிகளுக்கு எதிராகவே திரைப்படம் எடுத்து வருகின்றனர். லட்சுமி நடித்த 'ஒரே ஒரு கிராமத்திலே', ஷங்கர் இயக்கிய 'ஜென்டில்மேன்', முருகதாஸ் இயக்கிய 'ஏழாம் அறிவு', அமிதாப்பச்சன் நடித்த 'ஆரக்ஷா' போன்ற படங்கள் எல்லாம் சமூகநீதிக்கு எதிரான விஷக் கருத்துக்களைக் கொண்டவை தான்.

இம்மாதிரி திரைப்படங்களை எடுப்பவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்களை விட சிறந்த சமூக சிந்தனையாளர்களா? எதுவும் இல்லை. இந்துத்துவத் கருத்தியலின் அடிமைகள்தான்.

கதாநாயகியை பாம்பு வந்து காப்பாற்றுவது, மயில் காப்பாற்றுவது, குழந்தை இல்லையென்றால் வேப்பிலை கட்டி ஒரே ஒரு பாட்டு பாடினால் குழந்தை பெற்று விடுவது, மறுபிறப்பில் வந்து பழி வாங்குவதுபோல், பிசாசு, பில்லி சூன்யம் இது போன்ற காட்சி அமைப்புகளும் கதை ஓட்டமும் இந்துத்துவ மன ஓட்டத்தில் எடுக்கப்படுவதுதான். இதுவெல்லாம் நம்பப்படுவதில்லை என்றாலும் திட்டமிட்டே நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள்.

திரைப்படங்கள் வணிகமயமாகி விட்டது. தயாரிப்பாளர்களுக்கு படம் ஓட வேண்டும். கதை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை. கதையே இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் லாபம் தரும்படி ஓட வேண்டும். இதுதான் இன்றைக்கு அளவுகோலாக இருக்கிறது. இதில் எங்கே வந்தது சமூகம் குறித்த அரசியல்?

சமூகம் குறித்து திரைப்படம் எடுப்பவர்கள், சமூகத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்துதான் 'உலக மகா கலைஞன்' கமலஹாசன் விசுவரூபம் திரைப்படத்தை எடுத்தாரா? அவருக்கு இசுலாமியர்கள் பற்றிய பார்வை என்ன? சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் செய்கிற எதிர்வினையை பெரும் சமூகமான இசுலாமிய சமூகத்தின்மீது திணித்து, ஒட்டுமொத்தமாக பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது என்ன அரசியல்?

செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்காவின் இசுலாமிய பயங்கரவாத அறிவிப்பு 'உலகமயமாகிக் கொண்டிருக்கிறது'. அதைத்தான் உலகமெங்கும் கடை விரித்து வியாபாரம் செய்யத் துணிந்துள்ளார்கள்.

இந்த வியாபாரத்தில் இசுலாமியர்களைப் பலி கொடுத்துத்தான் லாபம் பார்க்கத் துடிக்கிறார் கமல். இதைப் புரிந்துகொள்ளாமல் சிலர் 'கருத்துச் சுதந்திரம்' என்று திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் பண்பாட்டையே கொச்சைப்படுத்தி அவதூறு பரப்புவதுதான் கருத்துச் சுதந்திரமா?

முதலில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு திரைப்படங்களை எடுப்பது நல்லது. இத்தருணத்தில் நடிகவேள் எம்.ஆர்.இராதா சொன்னதுதான் ஞாபகம் வருகிறது - "கூத்தாடிகளுக்கு எதற்கு அரசியல்?".

நடிகவேளை விட சிறந்த சமூகக் கருத்துக்களை சினிமாவில் இதுவரை யாரும் சொன்னதில்லை. இனியும் சொல்லப் போவதும் இல்லை. இப்போது அரசியலும் சமூகமும் இந்துத்துவ ஆதிக்கத்தின் உச்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு சினிமா வழி அமைத்துத் தந்து கொண்டு இருக்கிறது. வியாபாரிகளின் எண்ணமும் செயலும் லாபத்தை நோக்கித்தான். சினிமா வியாபாரிகளின் நோக்கம் பணத்தோடு இந்துத்துவக் கருத்தியலைப் பரப்புவதும்தான்.

அந்த வகையில்தான் நடிகர் கமல் இந்துத்துவ மேலாதிக்கத்தோடு இசுலாமிய விரோத திரைப்படத்தை எடுத்துள்ளார். ஆகவேதான் இப்படம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காட்சிகளில் மட்டுமல்லாமல் கதை முழுக்கவே இசுலாமிய சமூகத்தை பயங்கரவாதிகளாகவே காட்டுகிறது.

காவி பயங்கரவாதத்தின் எதிர்வினையை முறியடிப்பது சனநாயக முற்போக்குவாதிகளின் கடமைதான். அது எந்த 'ரூபத்தில்' வந்தாலும் முறியடிக்க வேண்டும். விசுவரூபமாக இருந்தாலும் முறியடிப்பதுதான் முதல் கடமை. தயாராவோம். அனைவரையும் தயாராக்குவோம்.

- வன்னிஅரசு
நன்றி கீற்று இணைய தளம்

28 November 2012

ம.க.இ.க. ‘புரட்சி’யாளர்களே - இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புகிறது?

''டே ஆறுமுகம் அப்படியே டெரரா மூஞ்சிய வச்சுக்க. அப்பதான் இவனுகள்ளாம் பயப்படுவானுங்க. கண்ண உருட்டி இன்னும் விறைப்பா மூஞ்சிய வைடா'' வெடிகுண்டு முருகேசன
் திரைப்படத
்தில் நடிகர் வடிவேலுவிடம் காமெடி செய்வார் கதாநாயகன் பசுபதி. அதுபோல காமெடி செய்கிறார்கள் நக்சல்பாரிகள் என்று தங்களுக்குத் தாங்களே பிதற்றிக் கொள்ளும் ம.க.இ.க. குழுவினர். 'டெரரா' எப்படி மூஞ்சிய வடிவேலு காட்டுகிறாரோ அதைப் போல புரட்சி, நக்சல்பாரி என்று மூஞ்சியக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ம.க.இ.க. கும்பல்.

நக்சல்பாரி புரட்சியாளர்கள் என்று குறுந்தகட்டிலே பேசுவது, சுவர்களில் எழுதித் தள்ளுவது, புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களில் விளம்பரங்கள் செய்ததைத் தவிர வேறு எங்கு புரட்சியை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி உழைக்கும் தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் நிலங்களை ஒப்படைத்து அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து வருவதாக ஆந்திர நக்சல்பாரிகள் பற்றி அறிய முடிகிறது. இதே போல் பீகார், சட்டீஸ்கர், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் மாவோயிஸ்ட்டுகள் ஆதிகுடிகளுக்கு, அதாவது அந்த மண்ணின் மைந்தர்களுக்காகப் படை கட்டி ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கமான தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களும் அந்த நக்சல்பாரிப் போராளிகளோடு ஆயுதம் ஏந்தி களத்தில் நிற்பதைத் தொடர்ந்து கவனிக்க முடிகிறது. அரச பயங்கரவாதத்திற்கு எதிராகக் களமாடும் அப்போராளிகளுக்கு வழக்குகளும், சிறைகளுமே பரிசாகக் கிடைக்கின்றன. உச்சக்கட்டமாக மரணங்களையும் தின்று செரிக்கிறார்கள்.

பீகாரில் மாட்டுத் தோலை உரித்ததற்காக 4 தலித்துகளை தோலை உரித்துக் கொன்றனர் இந்துத்துவ நிலவுடமைப் பண்ணையாளர்கள். இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 6 மாதங்களுக்குப் பிறகு கொல்லப்படுகின்றனர்.

இப்படி புரட்சிகரக் குழுக்கள் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களமாடுவதை நினைக்கையில் அப்போராளிகள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. பெருமையாகவும் அதே நேரத்தில் தலைநிமிர்வையும் உருவாக்குகிறது.

தமிழகத்தில் 1957ஆம் ஆண்டில் மாவீரன் இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டதிலிருந்து தருமபுரி நத்தம் சேரியைக் கொள்ளையடித்து தீக்கிரையாக்கிய சம்பவம் வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குறிஞ்சான்குளத்தில் நாயுடு சாதி வெறியர்களால் அன்பு, சுப்பையா உள்ளிட்ட 4 தலித்துகள் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் தலித்துகளின் குலதெய்வமான காந்தாரி அம்மன் சிலை நிறுவ முயற்சி செய்ததுதான். இதே போல மேலூர் - சென்னகரம்பட்டியில் கோவில் சொத்துக்களில் ஏலம் கேட்டதற்காக அம்மாசி, வேலு என்கிற இரு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலவளவில் தேர்தலில் பங்கெடுத்ததற்காக முருகேசன், பூபதி, மூக்கன் ராஜா உள்ளிட்ட 7 தலித்துகள் பேருந்தில் பயணிக்கும்போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் புளியங்குடியில் கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட காந்தி, வெள்ளையன், மதியழகன் ஆகிய மூன்று தலித்துகள் தூங்கும் போது கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இப்படி தலித்துகள் மீதான படுகொலைகள் ஏராளம்.

1995ஆம் ஆண்டு கொடியங்குளமாகட்டும், 1998ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டுப்பட்டியாகட்டும், ஒகலூர் சேரியாகட்டும், கடலூர் - புலியூர் சேரியாகட்டும், 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற சங்கரலிங்காபுரம் சேரியாகட்டும், கோவை காளப்பட்டி சேரியாகட்டும், பரணி புதுச்சேரியாகட்டும் அனைத்துச் சேரிகளுமே நத்தம் சேரியைப் போலவே சாதி வெறியர்களால் சூறையாடப்பட்டன. வழக்கம்போல் பின்னணியில் காவல்துறை இருந்துதான் இவ்வளவும் நடைபெற்றன. அரச வன்முறையும் சாதிய வன்முறையும் சேர்ந்துதான் தலித்துகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. நக்சல்பாரி புரட்சியாளர்கள் என்று சொல்லித் திரியும் ம.க.இ.க.வினர் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய வன்முறைகளுக்கெதிராக பீகார், ஆந்திரா போராளிகள் போல களமாட முடிந்ததா? கண்டித்து சுவரொட்டி ஒட்டுவது என்பது இவர்கள் சொல்வது போலவே சாதாரண ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் செய்கிற வேலைதான்.

அதே வேலையைச் செய்யும் ம.க.இ.க. ‘புரட்சி’யாளர்களை என்னவென்று அழைப்பது? இவர்கள் என்ன புரட்சியைச் செய்து விட்டார்கள்? வழிகாட்டும் பீகார், ஆந்திரத்தைப் போல தமிழகத்தில் ஒரே ஒரு புரட்சியை நடத்திக் காட்டியிருக்கிறார்களா? பிறகு எப்படி இவர்கள் மீது நம்பிக்கை வரும்? குறைந்தபட்சம் மதிப்பாவது வர வேண்டுமே. மாறாக வெறுப்புதான் வருகிறது. போஸ்டர் ஒட்டுவது அல்லது ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில் புதிய கலாச்சாரம் புத்தகங்களைக் கூவிக்கூவி விற்பதுதான் புரட்சி என்று அப்பாவி இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் போல.

தமிழகத்தில் ம.க.இ.க. அமைப்போ அல்லது புரட்சிகர அமைப்புகள் என்று சொல்லிக் கொள்ளும் அமைப்புகளோ ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக, நம்பிக்கையை ஊட்டும்விதமாகக் களத்தில் நின்றிருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் தோன்றியிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது.

எத்தனையோ தத்துவங்களும் புரட்சியாளர்களும் தோன்றிய பிறகும் தருமபுரி போன்ற வெறியாட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றால், அதற்காக இந்த புரட்சிகரக் குழுக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டுமே தவிர, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் இயக்கத்தை பிழைப்புவாதக் கட்சி என்றும், ஓட்டுப் பொறுக்கிக் கட்சி என்றும் சொல்வது அறிவுடைமையாகாது.

இவ்வளவு காலம் ஓட்டுப் போடவும், போஸ்டர் ஒட்டவும் பயன்படுத்தப்பட்ட பெரும் மக்கள் திரளை அமைப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

அரசியல் அதிகாரத்தின் பக்கமே தீண்டப்படாத மக்களாக விரட்டியடிக்கப்பட்ட இந்த மண்ணின் மைந்தர்களை ''அதிகாரமும் ஒரு சொத்துதான். அந்த சொத்தில் நமக்குரிய பங்கைக் கைப்பற்ற வேண்டும்'' என்று முழங்குகிற தலைவர் திருமாவளவன் அவர்களின் இந்த முழக்கத்தால் ஆதிக்கக் கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுவது நியாயம். ஓட்டுப் பொறுக்காத புரட்சிகரக் குழுக்களுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது?

ஆயுதம் ஏந்தி போராடி தமக்கான அதிகாரத்தை வென்றெடுப்பது அல்லது சனநாயகரீதியாக தமக்கான அதிகாரத்தை வென்றெடுப்பது - இந்த இரு வழிகள்தான் உழைக்கும் மக்களுக்கான விடுதலை வழிமுறைகள்.

தமிழகத்தில் ஆயுதம் ஏந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை பெருமளவில் வென்றெடுத்தது போலவும், விடுதலைச் சிறுத்தைகள் அதனைத் தடுப்பதுபோலவும் பொய்யான பிம்பத்தை உருவாக்கி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகத் திட்டமிட்டே பரப்புரை செய்து வருகிறார்கள்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் புறக்கணிப்பில் களமாடிய இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள். முதலில் உதிரியான, சிதறடிக்கப்பட்ட தலித்துகளை அமைப்பாக்க வேண்டுமானால், 'தேர்தல் புறக்கணிப்பு' அமைப்பையே புறக்கணித்து விடும் என்பதால்தான் தேர்தலில் பங்கெடுத்தது விடுதலைச் சிறுத்தைகள்.

தேர்தல் புறக்கணிப்பின் போது இந்த புரட்சிகரப் புடுங்கிகள் தலைவர் திருமாவளவன் அவர்களைச் சந்தித்து ஆயுதப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து, அவரது தலைமையை ஏற்றார்களா? அப்போதும் 'ஏகாதிபத்திய எடுபிடிகள்', 'பிழைப்புவாத தலித்துகள்' என்று தலித்துகளை கொச்சைப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, தேர்தல் புறக்கணிப்பின்போது எந்த புரட்சிகரக் குழுக்கள் சிறுத்தைகளைத் தேடி வந்து விவாதித்தது?

அரசியல் அதிகாரத்தைத் தலித்துகள் கைப்பற்றவே கூடாது என்பதுதான் ஆதிக்கச் சாதிகளின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாடுடன் இந்தப் புரட்சிகரக் குழுக்கள் செயல்படுவது சரியா? ஆதிக்கச் சாதியினர் ஓட்டுக் கட்சிகளாக மாறியதற்கும், ஒடுக்கப்பட்ட தலித்துகள் ஓட்டுக் கட்சிகளாக மாறியதற்கும் வித்தியாசம் இல்லையா?

முதலில் அரசியலில் பங்கெடுக்கும் உரிமையே தலித்துகளுக்கு மறுக்கப்படும் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களைக் கொச்சைப்படுத்துவது மறைமுகமாக உரிமைகளை மறுக்கும் சதியல்லாமல் வேறென்ன? சாதி ஒழிப்பும் தமிழ்த் தேசியமும் உயிர்க் கொள்கைகளாகக் கொண்டு செயல்படும் விடுதலைச் சிறுத்தைகளைப் போன்று வேறு ஏதேனும் ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் உண்டா?

உள்ளூர் பண்ணை எடுபிடிகளாக நடத்தப்பட்ட தலித்துகளை தற்போது, ஏகாதிபத்திய எடுபிடிகள் என்று அழைப்பதன் நோக்கம் என்ன? யாருக்காவது எடுபிடிகளாகவே இருக்க வேண்டும் என்கிற நயவஞ்சகமா?

முதலில் உழைக்கும் மக்களிடத்தில் ஆக்கப்பூர்வமான நம்பிக்கையை, பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். அதை விடுத்து நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்று விளம்பரம் செய்வது எந்தப் பயனையும் தராது.

குறைந்தபட்சம் தோழர் தமிழரசன் அவர்களின் சாதி ஒழிப்புக் களத்திலாவது நேர்மையாகச் செயல்படுங்கள்.

இப்போது முக்கிய பிரச்சனைக்கு வருவோம். தருமபுரி வன்முறை வெறியாட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க இவர்களோடு சேர்ந்து ம.க.இ.க-வைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்தார்கள் என்று எழுதியிருப்பது அந்த இயக்கத்தை அவதூறு கிளப்புவதாக எதிர்வினையாற்றுகிறார்கள்.

அ.தி.மு.க., தி.மு.க வரிசையில் ம.க.இ.க.வைச் சேர்த்ததுதான் இந்த கோபத்திற்கு காரணமா? அல்லது குட்டு உடைந்து விட்டதே என்ற அதிர்ச்சி காரணமா?

கடந்த நவம்பர் 4ஆம் நாள் வன்னியர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து பஞ்சாயத்து ஒன்றை நாயக்கன்கொட்டாயில் கூட்டுகின்றனர். இந்தப் பஞ்சாயத்திற்குக் கட்டுப்பட தலித்துகள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர்.

இது குறித்து நத்தம் சேரியைச் சேர்ந்த பொடா பழனிச்சாமி என்கிற தோழர் மற்ற தோழர்களுடன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் புரட்சிகர இயக்கமான ம.ஜ.இ.க. மாநிலச் செயலாளர் தமிழ்வாணன் அவர்களைச் சந்தித்து முறையிடுகிறார்கள். அவரோ தாக்குதல் நடத்துவது குறித்து எச்சரிக்கையும் செய்து விட்டு, ''விவசாயப் பிரச்சினை குறித்து அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் போய் தோழர் சித்தானந்தம் அவர்களைப் பாருங்கள்'' என்று நழுவிக் கொள்கிறார். ம.ஜ.இ.க.விலிருந்து (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) பிரிந்து ம.ஜ.இ.அ (மக்கள் ஜனநாயக இளைஞர் அமைப்பு) என்கிற புதிய புரட்சி அமைப்பை நடத்தி வருகிறார் தோழர் சித்தானந்தம். இதே போல் மக்கள் யுத்தக் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பச்சியப்பன் அவர்களிடமும் முறையிடுகின்றனர். அவரும் சாக்குப் போக்குச் சொல்லி கழன்று கொள்கிறார். நத்தம் சேரி தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய பா.ம.க.வைச் சேர்ந்த வி.பி.மதியழகனின் உறவினர்கள்தான் இந்த சித்தானந்தமும் பச்சியப்பனும். இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த வன்னியர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர்.

இப்படியாக புரட்சிகரக் குழுக்கள் நத்தம் சேரித் தாக்குதலுக்குத் துணை போயிருப்பதைத்தான் 'பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும்' கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். மற்றபடி அப்புரட்சிகரக் குழுக்கள் எங்காவது ஆயுதப் போராட்டம் நடத்தி அழித்தொழிப்பு வேலைகள் செய்ததை நான் தடுக்கவும் இல்லை, கொச்சைப்படுத்தவில்லை. இதனால், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் புரட்சியைத் தடுத்துவிடவும் இல்லை.

ஆனால், ஒரு சந்தேகம் நெடு நாட்கள் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறது. நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்... நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்... என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புகிறது?

- வன்னிஅரசு, செய்தித்தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி