15 June 2013

சுயமாய் எடுத்த முடிவுதானா திவ்யா..?

செல்லங்கொட்டாய் திவ்யாவுக்கு வணக்கம்.

திவ்யா தவறாக நினைக்க வேண்டாம். இக்கட்டான ஒரு மன நிலையில் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் உங்களுக்கு இப்போது இப்படி ஒரு மடல் எழுதுவது உறுத்தலாக இருக்கலாம். இரண்டு தனி நபர்களின் காதல் திருமணமாக இருந்தால் கூட நான் இதை எழுதியிருக்க மாட்டேன். இரண்டு சமூகங்களுக்கிடையிலான மோதாலாக ஊதிப் பெருக்கப்பட்டு தலித் மக்களின் குடிசைகள் வரை எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டதால் மட்டுமே இதை எழுத வேண்டி நேர்ந்தது.

அக்டோபர் 14ஆம் நாள் பதிவுத் திருமணம் செய்துகொண்ட பிறகு என்ன நடந்தது என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ஊராரின் குடும்ப கௌரவ பேச்சும் சாதிவெறியர்களின் நயவஞ்சகத்தையும் கொடூரமான அவமதிப்பையும் தாங்கமுடியாத உனது தந்தை நாகராஜ் மரணத்திற்குப் பிறகு, நத்தம் காலனி ரத்தச் சிவப்பாய் தீக்கிரையானதை மறந்துவிட முடியாது. இளவரசனோடான உங்கள் திருமணத்துக்குப் பிறகு நத்தம் காலனியிலுள்ள அத்தனை வீடுகளுமே தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டிலிருந்த டி.வி., வாசிங் மெசின், பீரோ, கட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் என அனைத்துமே உடைத்து நொறுக்கப்பட்டு வெளியே வீசப்பட்டன. வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்டு எலும்புக்கூடுகளாய் நின்றுகொண்டிருந்தன. உனது ஆசைக் கணவன் இளவரசனின் வீடு பார்க்கவே பரிதாபமாய்க் கிடந்தது. கொஞ்சம் பாத்திரங்களும் பாதி எரிந்த நிலையிலிருந்த மின்விசிறிகளுமே வீடு இருந்ததற்கான சாட்சியங்களாய் இருந்தன. நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மாற்றிக்கொள்ள துணிமணிகள்கூட இல்லாமல் மிக மோசமான நிலையில் நத்தம் காலனி மக்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நின்றுகொண்டிருந்தார்கள். நத்தம் காலனியே சுடுகாடுபோலக் காட்சியளித்ததை தொலைக்காட்சிவழி நீ பார்த்திருப்பாய்.





நத்தம் காலனி மட்டுமல்லாது, கொண்டம்பட்டி, அண்ணாநகர் காலனிகள்கூட சாதிவெறியர்களிடமிருந்து தப்பவில்லை. அடுத்தவேளை சாப்பிடக்கூட வழியில்லாமல் பொதுமந்தையில் கஞ்சி காய்ச்சிக் குடித்துக்கொண்டிருந்தார்கள். சேமித்து வைத்த நெல், வரகு, கம்பு போன்ற உணவு தானியங்கள் கருகிக் கிடந்ததைப் பார்க்கும்போது 'இந்த மக்கள் செய்த பாவம்தான் என்ன?' என்று நெஞ்சுருகாதோர் இருக்க முடியாது. சேமித்து வைத்த சொத்துக்கள் எல்லாமே பறிபோய்விட்டன. பள்ளிக்கூடம் செல்கின்ற குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது, அவர்களது சான்றிதழ்களும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. இன்னமும் அந்த சான்றிதழ் கிடைக்கப்பெறாமல் எத்தனையோ பிள்ளைகள் பரிதவித்துக் கிடக்கிறார்கள். நீதிமன்றம் வழிகாட்டிய பிறகும் எந்தப் பயனும் இல்லை. நர்சிங் படித்த உன்னைப் போன்றோருக்குக் கல்விச் சான்றிதழின் முக்கியத்துவம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ்வளவு வேதனைகளும் சோதனைகளும் எதற்காக நடத்தப்பட்டன என்பது உனக்கு நன்றாகவே தெரியும்! தனிப்பட்ட முறையில் உனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக நீ விரும்பிய ஆண்மகனை திருமணம் செய்ய முடிவெடுத்ததுதான் காரணம். இளவரசன் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்றாலும் அவனோடுதான் வாழ்வேன் என்று உறுதியாக இருந்து திருமணம் செய்தாய். தனிப்பட்ட உனது வாழ்க்கையை விரும்பியவனோடு அமைத்துக்கொள்ள இளவரசன் சார்ந்த சமூகம் கொடுத்த விலை சாதாரணமானதல்ல என்பதை நீ அறிவாய். அத்தனையையும் அம்மக்கள் தாங்கிக்கொண்டார்கள்.


உனது காதல் திருமணம் போலவே பல திருமணங்கள் உங்கள் பகுதிகளில் நடந்திருந்தாலும் உன்னுடைய காதலுக்கு ஏற்பட்ட நெருக்கடிபோல் யாருக்கும் ஏற்பட்டதில்லை. உன்னைக் காப்பதற்காகவே வாராது வந்த மாமணிபோல் களமிறங்கினார் மருத்துவர் இராமதாசு. நாடகக் காதல் செய்து உன்னை ஏமாற்றித் திருமணம் செய்ததாக ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்தார். ஆனாலும், அந்தப் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் நீ இளவரசனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தாய். உன்னுடைய ஒற்றைக் காதல் திருமணம் தமிழக அரசியலையே புரட்டிப்போட்டது. காதல் திருமணம் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு நத்தம் காலனிதான் எடுத்துக்காட்டு என்று மருத்துவர் இராமதாசு தலைமையிலான குச்சிக்கொளுத்திக் கும்பல் கொள்ளிக்கட்டைகளோடு பிரச்சாரம் செய்ததை நீ கவனமாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தாய்.



                      நத்தம் காலனியில் தாக்குதலுக்கு உள்ளான இளவரசனின் வீடு. 


இளவரசனிடமிருந்து உன்னைப் பிரிக்க எத்தனையோ வழிமுறைகளைக் கையாண்டார்கள். உன்னைக் கெஞ்சினார்கள்; அச்சுறுத்தினார்கள். உன் தாய் தேன்மொழி, தம்பி மணிசேகரனைக் காட்டி 'பாச மிரட்டல்' செய்தார்கள். ஆனாலும் நீ எதற்கும் அஞ்சாது இளவரசனின் குடும்பத்தோடுதான் வாழ்ந்தாய். அப்போது உனக்காக இளவரசனின் குடும்பம் பட்டபாடுகள் சாதாரணமானதல்ல என்பதை உடனிருந்தே அறிந்திருப்பாய். வீடு கூட வாடகைக்குக் கிடைக்காமல் அலைந்த அலைச்சல் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்திருப்பாய். எப்போது யார் வந்து என்ன செய்வார்களோ என்கிற பதைபதைப்பு உன்னையும் இளவரசன் குடும்பத்தையும் தொடர்ந்துகொண்டேயிருந்தது. உன்னை மட்டுமல்லாது சேரியையும் அந்தப் பதைபதைப்பு விட்டுவைக்கவில்லை. எந்தச் சேரி எந்த நேரத்தில் எரியுமோ என்கிற அச்சம் குடிகொண்டிருந்தது.

பயந்ததைப் போலவே, மரக்காணத்தில் வீடுகள் எரிக்கப்பட்டன. மா மரங்கள், பலா மரங்கள் எரிக்கப்பட்டன. மரக்காணம் சேரியின் காவல்தெய்வமான அங்காளம்மனைக்கூட சாதிவெறியர்கள் விட்டுவைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க எத்தனையோ பேருந்துகள் கொளுத்தப்பட்டன. சாதிவெறியர்களின் வன்முறை வெறியாட்டம் மருத்துவர் இராமதாசு உள்ளிட்டோரைக் கைது செய்த பிறகு ஓரளவு குறைந்தது. ஆனாலும் பதற்றம் குறையவில்லை. இவை அத்தனைக்கும் உனது காதல் திருமணத்தையை அடிப்படைக் காரணமாகக் காட்ட முனைந்ததை நீ அறிவாய்.

பாவம், உனது காதலுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் என்ன தொடர்பு? தமிழகம் முழுக்க தலித் எதிர்ப்புணர்வை, தலித்துகள் மீதான காழ்ப்புணர்வைப் பரப்பிவிட்டார்கள். அனைத்து சமுதாயத்திற்கும் பொது எதிரியாக தலித்துகளைச் சித்தரித்தார்கள். ஒழுக்கமில்லாதவர்கள் என்று பொது விதியை உருவாக்க முயற்சித்தார்கள். ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருந்த பொதுப்புத்தி இதற்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம் தமிழகத்தை, மானுட நாகரிகத்தை நூறாண்டுகளுக்குப் பின் இழுத்துச் சென்றதை, படித்த உன்னால் உணராமல் இருக்க முடியாது.

இதிகாசங்களில் இலக்கியங்களில் இல்லாத காதலையா நீயும் இளவரசனும் செய்துவிட்டீர்கள்? மலைசாதிப் பெண்ணான வள்ளியை முருகன் சாதி மறுப்புத் திருமணம் செய்த பின்பும் அவனே தமிழ்க் கடவுள் என்று வணங்கினார்கள். ஆனால் அந்த முருகன் வழியில் நீ திருமணம் செய்தவுடன் உன்னையும் இளவரசனையும் கொல்லத் துடிக்கிறார்கள். நீ உயர்நீதிமன்றத்தில் ஆஜர்ஆனபோது உன் முகத்தில் அந்தக் கொலை பயத்தைப் பார்க்க முடிந்தது. வழக்கறிஞர்கள் புடைசூழ நீ மிரட்சியோடு வந்ததைப் பார்த்தபோது உனது நிலை என்ன என்று தெரிந்தது. உன்னை எப்படியெல்லாம் மிரட்டினார்களோ? தைலாபுரம் தோட்டத்தில் எத்தனை நாள் சிறை வைக்கப்பட்டாயோ? "கீழ்சாதிப் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சாதி கவுரவத்தை குழிதோண்டிப் புதைச்சிட்டியே!" என்கிற வசைச் சொற்களால், நடைபிணமாய் நிலைகுலைந்துபோய் நீ நீதிமன்றம் வந்ததைப் பார்க்க முடிந்தது. செய்தியாளர்களிடம்கூட சுதந்திரமாகப் பேசவிடாமல், உன்னை இழுத்துச் சென்ற போக்கு பெண்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு உள்ளது என்பதைத்தான் காட்டியது. அம்மா வீட்டிற்கே போவதாய் நீதிபதிகளிடம் சொல்லிவிட்டதாகத் தீர்ப்பில் சொன்னார்கள். நீ மனக்குழப்பத்தில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

சகோதரி திவ்யா, உனக்குப் பிடித்த இளவரசனோடு பத்து மாதங்கள் வாழ்ந்தாய். இப்போது உங்கள் குடும்பத்தோடு போகப்போவதாய்ச் சொல்கிறாய். யாருடன் இருப்பது என்பது உன் அடிப்படை உரிமை. தாராளமாகப் போகலாம்.

ஆனால்...

நீ போகும்போது ஏனம்மா அழுதாய்?

இளவரசன் முகத்தைக்கூடப் பார்க்காமல் எப்படியம்மா போக முடிந்தது?

நீ எடுத்த முடிவு உன் சுயமான முடிவுதானா அல்லது மிரட்டலால் எடுத்த முடிவா?
அம்மா, தம்பியின் அழுகையால் எடுத்த முடிவா?

நாடகக் காதல்.. நாடகக் காதல் என்று ஊர் ஊராய்ப் புலம்பிய சாதிச் சொந்தங்களின் அழுத்தங்களால் எடுத்த முடிவா? அல்லது இந்தச் சமூகத்தில் வாழவே விடமாட்டார்கள் என்ற அவநம்பிக்கையால் எடுத்த முடிவா?

தான் வாழ்ந்த காலமெல்லாம் சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி சமூகநீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியாரின் மண்ணில் இன்னமும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்கிற அவநம்பிக்கையால் எடுத்த முடிவா?

எத்தனையோ புரட்சிகரக் குழுக்கள் உருவாகி சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரப் போராடும் தமிழ் மண்ணில் விரும்பியவனோடு வாழ்வதுகூட முடியாத காரியம் என்கிற கோபத்தால் எடுத்த முடிவா?

ஜீன்ஸ் போட்டும், டி-சர்ட் போட்டும் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், பெண்களுக்கு சொத்துரிமை கொடுப்பதால்தான் தலித்துகள் இப்படி திருமணம் செய்கிறார்கள் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்தபோது, பெண்களையே கேவலப்படுத்துகிறார்கள் என்கிற கோபத்தில்கூட பெண்ணுரிமை இயக்கங்கள் தெருவுக்கு வந்து போராடாத போக்கால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாயா?

சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக, இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக அனைத்துச் சமுதாயப் பேரவை என்கிற பெயரில் ஊர் ஊராய் சாதிவெறியைத் தூண்டிக் கலவரம் செய்த பிறகும் அவர்களின் பிரச்சாரத்தைத் தடுக்காமல், கண்டிக்காமல் அவர்களுக்கு ஆதரவு தருகிற திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞரே இப்படி முடிவெடுக்கிறாரே, நாமெல்லாம் எம்மாத்திரம் என்கிற பயத்தினால் எடுத்த முடிவா?

'ஏனம்மா தாலியைக் கழற்றிவிட்டாய்? அம்மாவோடுதானே போகப்போகிறாய், போய்விட்டு வரவேண்டியதுதானே' என்று கேட்காமலிருந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மவுனம்தான் இந்த முடிவுக்குக் காரணமா? 

'உன்னுடைய திருமணத்திற்குப் பிறகுதானே மூன்று சேரிகள் கொளுத்தப்பட்டன, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன, குடியிருக்கக்கூட வீடுகள் இல்லாமல் போய்விட்டன. இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு அம்மாவுடன் போ' என்று நீதிபதிகள் சொல்லாததால்தான் உன்னால் இப்படி எளிதாக முடிவெடுக்க முடிந்ததா?



                         உயர்நீதிமன்றத்தை விட்டு வெளியில் வரும் திவ்யா (படம்: தி இந்து) 

துப்பட்டாவால் உன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து வெளியேறியபோது நீதியே சாதி அமைப்பு முறைக்குள் முடங்கிக் கிடக்கிறது என்பதை இந்த வழக்கின் மூலம் உணர்ந்ததால்தான் இப்படி ஒரு முடிவை எடுக்க முடிந்ததா திவ்யா?

இத்தனை அவநம்பிக்கைகளோடு வாழ முடியாதுதான். உன்னைப் போன்ற சாதாரண ஒரு பெண்ணைக்கூட பாதுகாக்க முடியவில்லையென்றால், வெறுமனே புரட்சி, பெண்ணுரிமை, சமூகநீதி, சட்டம், நீதி இவையெல்லாம் என்ன எழவுக்கு என்று கேட்கத்தான் தோன்றுகிறது.. உனது மனசாட்சியைப் போலவே. உன்னுடைய இயலாமையும், சாதி ஆதிக்கமும்தான் இந்த முடிவுகளுக்குக் காரணமாகிவிட்டது. பரவாயில்லை! உன்னுடைய சொந்த ஊரான செல்லங்கொட்டாய்க்குப் போகும்போது நத்தம் காலனியைக் கடந்துதான் நீ போவாய். உன்னுடைய காதலுக்குச் சாட்சியமாய், தியாகமாய் நின்றுகொண்டிருக்கும் அந்த நத்தம் காலனியை ஒரு முறை பார். உனக்காகப் பாதிப்பை ஏற்றுக்கொண்ட அந்த மக்களைப் பார். நானும் உன்னை துன் புறுத்த விரும்பவில்லை. ஆனால் உன் வாழ்வு முழுவதும் எரிக்கப்பட்ட குடிசைகளின் சாம்பல் நெடி இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் திவ்யா, நீ ஓணாய்களை நம்பிப் போகிறாய். உன் அப்பாவை சாதிவெறியர்கள் கொன்றதைப் போல, உனக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது. ஏனென்றால் நீ எங்கள் வீட்டு மருமகள். சாதி அமைப்பை உடைத்து நீ விரைவில் வருவாய் என நம்புகிறோம்.

எதிர்பார்ப்புடன்
சாதிஅமைப்பை உடைக்கும் களத்தில்..
வன்னிஅரசு

(இந்த வாரம் 15.06.13 கல்கி இதழில் வெளியாகியுள்ள என்னுடைய கடிதத்தின் திருத்தப்படாத பதிப்பு)

10 May 2013

மருத்துவர் இராமதாசின் பொய் முகமும், வேலாயுதபுர சாதியத்தின் கோர முகமும்-வன்னிஅரசு

“நெல்லை மாவட்டம் கழுகுமலைக்கு அருகே உள்ள அந்த ஊரில் வசிக்கின்ற நானூறு ரெட்டியார் குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். தாழ்த்தப்பட்டோர் எங்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று காப்பாற்றும்படிக் கதறி அழுகிறார்கள்”
vanniarasu_velayuthapuram_6
நாதஸ்வர வித்வான் எம்.எஸ்.முத்தையாவுடன்...
கடந்த 25-4-2013 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சாதிச் சங்கக் கூட்டத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கானோர் மத்தியில் நூற்றுக் கணக்கான உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்த அதிர்ச்சித் தகவலை மருத்துவர் இராமதாசு வெளிப்படுத்தினார். அந்த ஊர் எது என்று ஊடகவியலாளர்களும் உளவுத்துறையும் ஆராய ஆரம்பித்தனர்.
8-5-2013 அன்று நாமும் அந்த ஊரைத் தேடி பயணப்பட்டோம். அந்த ஊரின் பெயர் டி.வேலாயுதபுரம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலிருந்து 3வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த டி.வேலாயுதபுரம் (மருத்துவர் இராமதாசு சொல்வதைப்போல் நெல்லை மாவட்டத்தில் இல்லை.)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் இராசா, ஆதித் தமிழர் பேரவையின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், கவுதமன் ஆகியோருடன் நாமும் அந்த ஊருக்குச் சென்றோம். புளியம்பழங்களைச் சுமந்துகிடக்கும் மரங்களும், மஞ்சநெத்திப் பூக்களின் மணம் மரப்பும் மரங்களும் வழிநெடுக எங்களை வரவேற்றன. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த 47 குடும்பங்களும், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 4 வண்ணார் குடும்பத்தினரும் அடங்கியதுதான் இந்த வேலாயுதபுரம்.
வேலாயுதபுரத்திற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கொடி பறக்கும் காரில் நுழைந்தவுடனேயே அந்த ஊர் மக்கள் கும்பல் கும்பலாகக் கூட ஆரம்பித்தனர். ஊர் மந்தைக்கு அருகே இரண்டு போலிசார் காவலுக்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் வேலாயுதபுரம் சேரிக்குச் செல்லும் பாதையைக் கேட்டுச் சென்றோம். எலந்தப் பழங்களை சின்னஞ்சிறு பிள்ளைகள் முள் படாமல் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். ஊருக்கும் சேரிக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. சேரிக்குள் நுழைந்தோம்.
இந்தியாவிலுள்ள எல்லா ஊர்களும் சேரியை எப்படி நடத்துகின்றனவோ அப்படித்தான் வேலாயுதபுரமும் சேரியை நடத்துகிறது. ஊருக்கே செருப்புத் தைத்துக் கொடுத்தாலும் அருந்ததிய மக்கள் செருப்புப் போட்டுக்கொண்டு ரெட்டியார் தெருவுக்குள் நடக்க முடியாது. சைக்கிள் வாங்கலாம். ஆனால் உருட்டிக்கொண்டுதான் போக வேண்டும்; ஏறிச் செல்ல முடியாது. அங்குள்ள நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் அருந்ததியர் குழந்தைகளுக்கு தனியேதான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்புக்கு மேல் யாரும் படிக்கக் கூடாது.
இங்குள்ள அருந்ததியர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் எதுவும் இல்லை. கூலி வேலைக்குத்தான் செல்லவேண்டும். பெண்கள் அங்குள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்குச் சென்று தீக்குச்சிகளை அடுக்க வேண்டும். ஆண்கள் சீமைக் கருவேல மரங்களை வெட்டி கரிக்கட்டைகளாக்கி திருநெல்வேலி, தூத்துக்குடி, கழுமலை, சங்கரன்கோவில் போன்ற ஊர்களுக்குச் சென்று விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டும். இதுதான் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலை.
vanniarasu_velayuthapuram_7
சுபா குடும்பத்தாருடன்..
கடந்த 10-8-2006 அன்று தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைசெய்யும் சுபா என்கிற 16 வயது பெண், “இந்த ஊரின் கொடுமையிலிருந்து எங்கள் மக்கள் விடுதலை பெற வேண்டும்” என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்.
ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் சுபாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்துள்ளனர். சாதிப் பெயரைச் சொல்லி கேலியும் செய்து வந்துள்ளனர். சுபா மட்டுமல்லாது சேரியிலிருந்து வருகிற எல்லா பெண்களிடமும் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கேலியும் கிண்டலும் செய்து கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த சுபா தற்கொலை செய்துகொள்கிறார். காவல்துறையோ, வழக்கம்போல் சிலரைக் கைது செய்துவிட்டு பின்பு அவர்களை விட்டுவிடுகிறார்கள். சுபாவின் தற்கொலையை அடுத்து, போலிஸ், கோர்ட் என்று அதே சேரியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அலைய ஆரம்பிக்கிறார். “போலிசுக்கெல்லாம் போக வேண்டாம்!” என்ற ரெட்டியார்களின் கட்டளையை மீறி கருப்பசாமி களப்பணியாற்ற ஆரம்பித்தார்.
இந்நிலையில், கடந்த 12-4-2013 அன்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கருப்பசாமி வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த 13 இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
“இந்த ஊர்ல ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு தம்பி. எங்க தெருவுக்குள்ள ரேசன் கடை இல்லை. அவுங்க தெருவுக்குள்ள இருக்கிற ரேசன் கடைக்குத்தான் போக வேண்டும். யாரும் இல்லாத நேரமாப் பாத்து ஜன்னலுக்கு வெளியே நின்னுதான் வாங்க வேண்டும்” என்றார் சேரித்தெரு நாட்டாமை சுப்பிரமணி.
சுப்பிரமணியின் மகன் முத்துகிருஷ்ணனுக்கு ஊரில் அஞ்சல் அலுவலக உதவியாளராகப் பணி கிடைத்தது. “சக்கிலியப் பய தொட்ட லட்டர நாங்க வாங்கணுமா? ஒழுங்கு மரியாதையா வேலை வேணாம்னு எழுதிக் கொடுக்கச் சொல்லு” என்று தினமும் ரெட்டியார் சமூகத்தினர் சுப்பிரமணியை மிரட்ட ஆரம்பித்தனர். மிரட்டலுக்குப் பயந்து முத்துகிருஷ்ணன் வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்னைக்குச் செல்கிறார். இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால், முத்துகிருஷ்ணனோ சென்னைக்குப் போய் அடுத்தடுத்த போட்டித் தேர்வுகளை எழுதி இப்போது தலைமைச் செயலகத்தில் கமாண்டோவாக துப்பாக்கியும் கையுமாகப் பணிபுரிகிறார்.
நாதஸ்வர வித்வானாக அம்மாவட்டங்களில் புகழ்பெற்றவராக மதிக்கப்படும் எம்.எஸ்.முத்தையா, “இப்பகுதியில் திருவிழாக் காலங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் நாங்கள் போகக் கூடாது. ஊரில் உள்ள நிகழ்ச்சியில்தான் நாதஸ்வரம் வாசிக்க வேண்டும். அதுவும் இலவசமாகத்தான் வாசிக்க வேண்டும். உறவினர்களின் வீடுகளுக்கு நாங்கள் போக வேண்டுமென்றாலும், உறவினர்கள் எங்கள் வீடுகளுக்கு வரவேண்டுமென்றாலும் ஊர் மந்தையில் காலில் விழுந்து கேட்டுவிட்டுத்தான் போக வேண்டும், வரவேண்டும்” என்றார். சிறந்த நாதஸ்வர வித்வானான எம்.எஸ்.முத்தையாவுக்கு கடந்த ஆண்டுதான் அரசு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது. ஆனால் வேலாயுதபுரமோ...?
vanniarasu_velayuthapuram_8
கருப்பசாமி குடும்பத்தாருடன்..
அடிமைத்தனத்திற்கு எதிராக 2006ஆம் ஆண்டு உயிர்நீத்த சுபாவின் மறைவுக்குப் பிறகு அருந்ததியர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தார்கள். மந்தையில் துணிச்சலாகக் கேள்வியெழுப்ப ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அரிபால் ரெட்டியார், அருந்ததியர் பலரை மந்தையில் வைத்தே அடித்துள்ளார். இவர் வேலாயுதபுரத்திலிருந்து வெளியேறி துபாயில் சென்று பணிபுரிந்து வந்தவர். “நான் போகும்போது ஊரு இப்படியில்லையே. இவனுகளுக்கு யார் துணிச்சலத் தந்தது? இவனுகள ஆரம்பத்துலயே அடக்கி வைக்கணும்” என்று அரிபால் ரெட்டியார் கொதித்துப்போனதன் விளைவு சேரியைச் சுற்றி முள் வேலி அமைக்கும் பணி தொடங்கியது. 47 குடும்பங்கள் வசிக்கும் அருந்ததியர் குடியிருப்பைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைத்தனர். அருந்ததியர்கள் இந்த முள்வேலிக்குள்தான் வாழ வேண்டும். ரெட்டியார்களின் காடு கரைகளில் கால் வைக்கக் கூடாது. கால் வைத்தால் தீட்டுப் பட்டுவிடுமாம்.
இந்தத் தீண்டாமை முள்வேலி அமைக்கும்போது பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இவர் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். “என்னையும் சக்கிலியர்களோடு ஒதுக்கி வைத்துவிடுங்கள். இதற்கு நான் உடன்படமாட்டேன்” என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். விளைவு 2011 பஞ்சாயத்துத் தேர்தலில் தோழர் இராதாகிருஷ்ணன் தோற்கடிக்கப்பட்டு அமராவதி என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மதிமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பழனிச்சாமி ரெட்டியார்தான் இப்போது அருந்ததியர்களை ஒடுக்குவதில் மும்முரமாக இருக்கிறார். இவரோடு போஸ், அரிபால், சுப்புராஜ் (அதிமுக), இராஜேந்திரன், மணிகண்டன், நாராயண ரெட்டியாரின் மகன் பால்ராஜ், தவிட்டு ரெட்டியாரின் மகன் ரமேஷ், நாராயணன், பெத்து ரெட்டியார், சீனிச்சாமி ரெட்டியார் ஆகியோர்தான் தீண்டாமை முள்வேலி உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளைச் செய்வதில் முன்னணியில் நிற்பவர்கள். 
கடந்த 12-4-2013 அன்று கருப்பசாமி படுகொலை செய்யப்பட்டதை அடுத்துதான் இந்தத் தீண்டாமை முள்வேலி உலகுக்கே தெரிய வந்துள்ளது. 13-4-2013 அன்று அந்த ஊருக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. இராஜேந்திரன் அவர்கள் தீண்டாமை முள்வேலியைப் பார்த்துக் கொதித்துப் போய்விட்டார். அவரே முன்னின்று முள்வேலியைப் பிரித்து எறியும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனாலும், கழுகுமலை காவல்நிலைய அதிகாரிகளோ உள்ளூர்ப் பகை வேண்டாம் என்று ரெட்டிகளோடு ஒட்டி உறவாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இத்தகைய சேரியைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் நமக்கு வந்தது.
ஆதித்தமிழர் பேரவையின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் தோழர்கள் சிலர் எங்களைப் பார்ப்பதற்காக சேரிக்குள் வர முயன்றனர். அப்போது ஊர் மந்தையில் பெண்கள் வழிமறித்து, “ஏண்டா சக்கிலியப் பயலுகளா, எங்கடா வந்தீங்க? இந்த நாய்களுக்கு நீங்கதான் சப்போர்ட்டா? கார்ல உள்ள போன அந்த சக்கிலிய நாயிகள நாங்க வெளியே விடப்போறதில்ல...” என்று வாய்க்கு வந்தபடி கூச்சலிட்டு அவர்களை அடிக்காத குறையாக விரட்டியடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலிசோ வேடிக்கை பார்த்ததைத் தவிர ஒன்றும் செய்யவில்லை. இதையறியாமல், நாங்களோ அந்தத் தீண்டாமை முள்வேலியையும் ஊர் மக்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரே ஒரு போலிஸ்காரர் எங்களிடம் வந்து, “சார் கொஞ்சம் இருங்க. அவங்க கும்பலா கூடி கோபத்தோட இருக்காங்க. போலிஸ் ஃபோர்ஸ் வந்ததுக்குப் பிறகு நீங்கள் போகலாம்” என்றார்.
vanniarasu_velayuthapuram_9
காவல் துறையினருடன்...
மாலை 5 மணிக்கு சேரிக்குள் போன நாங்கள் இரவு 7 மணியளவில் வெளியேற முயன்றோம். போக முடியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் இரு காவலர்களுடன் வந்து, “சார் எங்க பின்னாலயே வாங்க” என்றபடி நடந்து சென்றார்கள். நாங்கள் காரில் பின்தொடர்ந்தோம். ஊர் தெருவை நெருங்கும்போதே அந்தக் குரல் கேட்டது.
“அந்தச் சக்கிலியப் பயலுகள இறக்கிவிடுங்க. இவனுங்களுக்கெல்லாம் கார் ஒரு கேடா?” என்று கத்த ஆரம்பித்தனர். கைகளில் அரிவாள், வேல்கம்பு, ஈட்டி மற்றும் கற்கள். நிலைமையை அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு எங்களிடம் மிக அமைதியாகச் சொன்னார், “சார் போகலாம் சார். பேசிட்டேன். போற வழியில மந்தையில போய் இனிமே வரமாட்டோம்னு சொல்லிட்டுப் போயிருங்க” என்றார்.
அதிர்ந்துபோன நாங்கள், “அவர்களிடம் போய் சொல்ல வேண்டுமா? இல்லை காலில் விழுந்து செல்ல வேண்டுமா? என்ன நடக்கிறது இங்கே” என்று கோபத்துடன் கேட்டோம். சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் அந்த ஊர் மக்களிடமே சென்றுவிட்டார். உயர் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசிய பிறகு டி.எஸ்.பி. தலைமையில் காவல்துறையினர் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல்தான் சேரியைக் கடந்து ஊரையும் கடந்து வெளியேறினோம். நடந்ததை கழுகுமலைக் காவல் நிலையத்தில் புகாராக எழுதிக் கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி வற்புறுத்தி வந்தோம்.
டி.வேலாயுதபுரம் சேரியைப் பார்வையிடச் சென்ற நமக்கே இந்த நிலை என்றால் காலங்காலமாய் அங்கேயே குடியிருக்கும் அப்பாவி அருந்ததிய மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். இலங்கையில் முள்வேலி முகாம்களை அகற்றக் கோரி தமிழர்களெல்லாம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற சூழலில்தான், சொந்த மண்ணிலேயே முள்வேலிக்குள் மண்ணின் மைந்தர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.
இவ்வளவு கொடுமைகளையும் செய்துவிட்டு தலித்துகள்தான் கொடுமை செய்கிறார்கள் என்று மருத்துவர் இராமதாசு பேசுவது நியாயம்தானா? அவர் பொது மேடையில் நாகரிகமாகப் பேசுவதில்லை. பேசும் பேச்சிலும் உண்மை இல்லை. ஆனால் தொடர்ந்து எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று சவால் விட்டுக்கொண்டேயிருக்கிறார். 'விடுதலைச் சிறுத்தைகள் பெண்களைக் கடத்துகிறார்கள், அதை வைத்துப் பேரம் பேசுகிறார்கள்' என்று வாய்க்கு வந்தபடி பேசி ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் காட்டியதில்லை. இல்லாததை எப்படிக் காட்ட முடியும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இராமதாசு பேசுவதெல்லாம் பொய்யும் புரட்டும்தான் என்பதை இந்த வேலாயுதபுரம் சேரி உலகுக்குக் காட்டுகிறது. வேலாயுதபுரம் சேரிமக்களிடம் நாங்கள் வந்த நோக்கம் குறித்துப் பேசும்போது, “நீங்கதான் ரெட்டியார்களைக் கொடுமைப்படுத்துறதா டாக்டர் இராமதாசு சொன்னாரு. உண்மையான்னு பார்க்க வந்தோம்” என்று சொன்னபோது, ஒரு கிழவி கோபத்தோடு, “அந்த பிராடுகாரப் பயல இங்கக் கூட்டியா, அவனும் எங்கத் தாலிய அறுத்துட்டுப் போகட்டும்” என்றார்.
மருத்துவர் அவர்களே உங்கள் குடும்ப சுயநலத்திற்காக ஏன் இப்படி சேரிமக்களின் உயிரை எடுக்கிறீர்கள்?
- வன்னிஅரசு
Bookmark and Share

24 April 2013

கௌரவம் - சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு - வன்னிஅரசு


கௌரவம் - சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு - வன்னிஅரசு

அந்தப் பெரியவருக்கு வயது 70 இருக்கும். 23ஆம் புலிகேசி மன்னனைப்போல் அவருக்கும் ஒரு மீசை இருக்கும். இடுப்பில் பச்சை பெல்ட் மாட்டியிருப்பார். மேல் சட்டை இல்லை. முக்கால் அளவு வேட்டி. காலையில் எழுந்தவுடன் குளித்து விபூதிப் பட்டை தீட்டி பக்தி மணக்க மணக்க நடைபயணம் புறப்படுவார். யாரிடமும் பேசமாட்டார். யாராவது பேச முயற்சி செய்தால்கூட கண்டுகொள்ள மாட்டார். உணவு வாங்குவதற்கு வரிசையில்கூட வந்து நிற்க மாட்டார். எல்லோரும் உணவு வாங்கிச் சென்றபின் அவரது அலுமினியத் தட்டில் சோறு வாங்கிச் செல்வார். காவலர்கள் ஏதாவது கேட்டால்கூட, எதுவும் பேச மாட்டார். ஆனாலும் அந்த மத்திய சிறைவாசிகளில் பலர் அந்தப் பெரிசுக்கு மரியாதை கொடுத்துத்தான் வந்தார்கள்.

gouravam_450“டேய் இது எங்களுக்காக கட்டுன ஜெயிலுடா... பள்ளன் பறையன் எவனாவது ஜெயிலுக்கு வந்திங்கன்னா தேவன்னு சொல்லிப் பிழைச்சிட்டுப் போங்கடா” என்று தனிமைச் சிறையில் அடைபட்டிருக்கும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட கைதி கூட இந்தப் பெரிசைப் பார்த்தால் வணக்கம் போடுவான்.

பெரிசு பெயர் பாண்டித்தேவர். உசிலம்பட்டியைச் சேர்ந்தவர்.

நானும் பலமுறை அவரிடம் பேச முயற்சி செய்து பேச முயன்றேன் முடியவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டேன் - பாண்டித்தேவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையாம். மற்றபடி எந்த விவரமும் தெரியவில்லை. பாண்டித்தேவர் லாக்-அப் ஆகும்வரை நூலகத்தில்தான் இருப்பார். நூலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் படித்து முடித்தவர் அவர்தான். நூலக ஆசிரியர் சுருளிதான் என்னை பாண்டித்தேவருக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு வரும் நூல்களை அவருக்கும் படிக்கக் கொடுத்ததன் மூலம் என்னோடு சகஜமாகப் பேச ஆரம்பித்தார். அப்புறம்தான் அவரது முழுக் கதையும் எனக்குத் தெரிந்தது.

ஆசை ஆசையாய் வளர்த்த அவரது மகள் பக்கத்து ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட பள்ளர் வகுப்பைச் சேர்ந்த பையனைக் காதலித்துளளார். ஊரில் உள்ள புளிய மரங்களும் பனை மரங்களும்கூட இவர்களது காதல் கதையினை பேச ஆரம்பித்தன. பாண்டித்தேவருக்கு அது தெரியாமலா போய்விடும்! அவர் கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டது.

எட்டு மாதமாகக் கண்டுகொள்ளவில்லை. எட்டு மாதமாக வீட்டை விட்டே வெளியேறியதில்லை பாண்டித்தேவர். ஏதோ நடந்தது நடந்துபோச்சு என்று ஒன்பதாவது மாதம் வளைகாப்பு செய்து மகளை அழைத்து வருவதற்காக வைப்பதற்காக பாண்டித்தேவரின் மனைவி செல்கிறார். தலித் மருமகனும் மகிழ்ச்சியாக வளைகாப்பு முடித்து மனைவியை மாமியாருடன் அனுப்பி வைக்கிறார். வயறு நிறையக் குழந்தையோடு கை நிறைய வளையல்களோடு நெற்றி நிறைய மஞ்சள் குங்குமத்தோடு வாய் நிறைய சிரிப்போடு வந்த மகளைப் பார்த்து கட்டி அணைத்துக்கொண்டார் பாண்டித்தேவர். தன் கையாலேயே மகளுக்குச் சோறு ஊட்டிவிடுகிறார்.

இரவு 10 மணி. எல்லோரும் தூங்கப்போய்விட்டனர். நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம். வீட்டுக்குள் ஒரு உருவம் தீயில் எரிந்து விழுகிறது. வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் வந்து பார்க்கும்போது கருகிய நிலையில் பாண்டித்தேவரின் மகள் கிடக்கிறாள். வயிற்றுக்குள் இருந்த குழந்தையும் கருகி செத்துப்போனது.

“அப்பாடா... அப்பத்தான் என் சாதி கௌரவம் காப்பாற்றப்பட்டது தம்பி!” என்றார் பாண்டித்தேவர்.

“உங்க ஆசை மகளைக் கருக்கிட்டிங்களே. உங்க மகளைவிட சாதி பெரிசாப் போச்சா?” என்று கேட்டதற்கு,

அந்தப் பெரிசு எந்தச் சலனமும் இல்லாமல் சொன்னார்- “என்னை விட என் சாதி கௌரவம்தான் முக்கியம்”

இதற்காகத்தான் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

மதுரை மத்திய சிறையை இப்போது கடந்து போனாலும் அந்த பாண்டித்தேவர் என் நினைவில் வந்துபோவார்.

சக ஆயுள் சிறைவாசியாக நான் இருந்தாலும், இம்மாதிரியான காட்டுமிராண்டித்தனங்களின் எச்சங்களோடுதான் பயணப்பட்டேன். 1990ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வை, 1998ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றபோது அறிந்தேன். இப்படியெல்லாமா மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கொதித்துப் போனேன்.

ஆனால், நாயக்கன்கொட்டாய் இளவரசன்-திவ்யா காதலை சாக்காக வைத்து மூன்று சேரிகளைத் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கிய சாதிவெறியர்களை நினைக்கும்போது, பாண்டித்தேவர் என்கிற பெரிசு பரவாயில்லைபோல் தோன்றியது.

விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையில் வன்னியப் பெண் கண்ணகி, தலித் வகுப்பைச் சேர்ந்த முருகேசனை காதல் திருமணம் செய்துகொண்டார். எல்லா காதலர்களும் செய்வதைப்போலத்தான் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார்கள். கண்ணகியின் உறவினர்கள் ஊர் ஊராய்த் தேடிக் கண்டுபிடித்து ஊர் மந்தைக்கு அந்த காதல் ஜோடியை இழுத்து வந்தனர். மக்கள் யாவரும் பார்த்துப் பதைக்க, காதல் ஜோடி கதறக் கதற விஷம் கொடுத்து எரித்துக் கொல்கின்றனர். தங்களுடைய சாதி கௌரவத்தைக் காப்பதற்காக மனிதநேயத்தை கொன்றழித்த இந்தக் கொடூரத்தின் முன்பு பாண்டித்தேவர் என் நினைவில் வந்து வந்து போகிறார்.

இப்படி சமூகத்தில் அன்றாடம் நடக்கும் அவலங்களை, அநியாயங்களை படைப்புகளாக்க இச்சம்பவங்கள் யாரையும் உறுத்தவில்லையோ, மனசாட்சியை உலுக்கவில்லையோ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் ‘கௌரவம்’ திரைப்படம் வந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் நீயா? நானா? நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கொடுமை செய்பவர்களைவிட அதனை அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டார். அத்தகைய ஆபத்தானவர்கள் இந்தச் சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் உலவுகிறார்கள். மார்க்சியம் பேசுகிற, தமிழ்த் தேசியம் பேசுகிற, காந்தியம் பேசுகிற, முற்போக்குப் பேசுகிற எத்தனையோ இயக்குநர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் இயங்குகிறார்கள். எதற்கெடுத்தாலும் புரட்சி பேசுவது, அல்லது பெரியார் கருத்துகளைச் சொல்வது, இன்னும் கூடுதலாய் கருப்புச் சட்டையைப் போட்டுக்கொண்டு நாத்திகனாய் விசுவரூபம் எடுப்பார்கள். ஆனால் எடுக்கும் திரைப்படங்களைப் பார்த்தால் சமூகத்திற்கு எதிரான மசாலா படங்களையே எடுத்து பெருமை பேசுவார்கள்.

ஆனால் இயக்குநர் ராதாமோகன் அவர்கள் மிக நேர்மையாக இச்சமூகத்தில் நிலவும் சமூக அநீதியை திரைக்கதைப் போக்கில் எந்தத் திணிப்பும் இல்லாமல் அம்பலப்படுத்தியிருக்கிறார். சாதியின் பெயரால் நடக்கும் கௌரவக் கொலைகள் இயக்குநரை எந்த அளவுக்குப் பாதித்திருந்தால் இப்படியொரு படைப்பைப் படைக்கக் களம் இறங்கியிருப்பார்! சாதி எப்படியெல்லாம் சமூகத்திற்கு எதிராக இருக்கிறது என்பதை மிக நேர்த்தியாகப் திரைப்படமாக்கியிருக்கிறார்.

திரைப்படத்தில் பல இடங்களில் சினிமாத்தனமும் முரண்பாடுகளும் இருந்தாலும் இப்படியொரு கதையை களமாக அமைத்து தமிழகம் முழுவதும் சாதியை முன்வைத்து அரசியல் செய்பவர்களை அம்பலப்படுத்திய துணிச்சலுக்காகவே இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும்.

தன்னுடன் படித்த சண்முகத்தை தேடிப்போன நண்பர்களுக்கு அந்த டி.வெண்ணனூர் கிராமத்தில் நடப்பவை அதிர்ச்சியளிக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சண்முகம் அந்த ஊரில் மேல் சாதிப் பண்ணையாரான பசுபதியின் மகளை காதலித்து கூட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார். அவர்கள் என்ன ஆனார்கள்? மர்ம முடிச்சுகளை கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களுடன் சேர்ந்து அவிழ்க்கின்றனர். சாதி கௌரவத்தைக் காப்பதற்காக அந்த காதல் ஜோடியை வெட்டிப் படுகொலை செய்யும்போது இந்தியாவில் இப்படி எத்தனைக் காதலர்கள் வெட்டியும் நஞ்சு கொடுத்தும் எரித்தும் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதை நினைக்கும்போது நம் குலை நடுங்குகிறது.

“உங்களுக்கு கௌரவம்தான் முக்கியம் என்றால் நீங்க சாக வேண்டியதுதானே? ஏன் என் பிள்ளையைக் கொன்னீங்க?” என்று பண்ணையாரை அவரது மனைவி கேட்கும்போது பல பெரிய மனிதர்களின் செவுளில் அறைந்ததுபோல் இருக்கிறது. கம்யூனிசம் பேசுகிற தொழிற்சங்கவாதிகூட எப்படி இருப்பார் என்பதை நாசர் தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். தலித்துகளுக்குள்கூட தீண்டாமை இருக்கிறது என்பதை சம்பந்தமில்லாமல் கம்யூனிஸ்டுகள் பேசுவதை இயக்குநர் சுட்டிக்காட்டியுள்ளார். சேரியைக் காட்டும்போதுகூட புரட்சியாளர் அம்பேத்கர் சிலை கோணியால் மூடப்பட்டிருக்கும் அயோக்கியத்தனத்தையும் சத்தமில்லாமல் படம்பிடித்துள்ளனர்.

தேநீர்க் கடைகளில் முன்பெல்லாம் தலித்துகளுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் ஊற்றுவார்கள். அதற்கடுத்து தனிக் குவளைகளை ஒதுக்கினார்கள். நாகரிகம் வளர வளர, அறிவியல் வளர வளர தீண்டாமையும் வேறொரு வடிவம் கொள்கிறது என்பதை திரைப்படத்தின் தேநீர்க் கடைகள் அம்பலப்படுத்துகின்றன. சேரியிலிருந்து வருகிற மாசி என்கிற இளைஞன் தேநீர் குடிக்க கடைக்கு வரும்போது மரத்தில் தொங்க விடப்பட்டுள்ள பயன்படுத்திவிட்டுத் தூக்கிப்போடும் காகிதக் குவளையில் தேநீர் குடிப்பான். உயர் சாதியினர் கண்ணாடிக் குவளையில் குடிப்பதை குளோஸ்-அப்பில் காட்டும்போது இப்பல்லாம் யார் சாதி பார்க்குறாங்க என்று முற்போக்குப் பேசுபவர்களின் முகத்தில் காறி உமிழ்வதுபோல் உள்ளது.

“சேரிக்காரர்கள் எவ்வளவுகாலம்தான் அடி வாங்குவார்கள். திருப்பி அடிப்பது எப்போது?” என்று சேரித் தோழர் கேட்கும்போது தலித் மக்களின் வலியையும் உணர்வையும் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளைக் களைய மாணவர்களும் இளைஞர்களும் களமிறங்கினால்தான் முடியும் என்று இயக்குநர் இளைஞர்களை உசுப்பேற்றியிருக்கிறார்.

இன்றைக்கு மாணவர்களை, இளைஞர்களை சாதிவெறி ஊட்டி தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்ற முயற்சி செய்து வரும் மனித சமூகத்திற்கே அவமானமான செயலை அரங்கேற்றி வருகிற காட்டுமிராண்டிகளுக்கு அறிவுரைக்கும் வகையில் சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு இத்திரைப்படம். சமூகத்தில் தன்னோடு வாழும் சக மனிதன் ஏன் இப்படி சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்படுகிறான்? புறக்கணிக்கப்படுகிறான்? கொல்லப்படுகிறான் என்பதை பிரகாஷ்ராஜ், ராதாமோகன் ஆகியோர் கேள்வி கேட்டிருப்பது துணிச்சலான செயல், பாராட்டுக்குரிய செயல்.

சமூகநீதிக்காகப் போராடுபவர்கள், முற்போக்குப் பேசுபவர்கள், சமூகத்தை மாற்றத் துடிப்பவர்களும் இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். அனைவரையும் பார்க்கத் தூண்ட வேண்டும். அப்போதுதான் இந்தச் சமூகத்தின் அவலங்களை பரப்புரை செய்ததற்கான கடமையைச் செய்ததாக அமையும்.

- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)

30 January 2013

திரைப்படங்களில் 'விசுவரூபம்' எடுக்கும் 'இந்துத்துவம்' - வன்னி அரசு



நாட்டுக்கோழி அடித்து மணக்க மணக்க மசாலா தடவிநெருப்பில் வாட்டி ருசிக்க ருசிக்க குழம்பு வைத்து விருந்து தடபுடலாக ஏற்பாடாகி விட்டது. இலை போட்டு, பரிமாறி சாப்பிட யாவரும் தயாராகி விட்டனர். நாட்டுக்கோழியின் மணம் ஊரெல்லாம் சுண்டி இழுக்கிறது. நாவில் உமிழ்நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. கைக்குத்தல் அரிசிச் சோறோடு கோழிக்கறியை பிசைந்து வாயில் வைக்கும் போது "அய்யோ அந்த உணவில் விஷம் கலந்திருக்கிறது. யாரும் சாப்பிடாதீர்கள்" என்று ஒருவன் கத்துகிறான். எல்லோரும் அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள், இவ்வளவு சிரமப்பட்டு செலவு செய்து விருந்து படைத்து விட்டார்கள் என்று விஷம் கலந்த உணவை யாரும் சாப்பிடுவார்களா?

kamal_vishwaroopam_370அதேபோல்தான் 'விசுவரூபம்' திரைப்படமும். 'கோடிக்கணக்கில் செலவு செய்து விட்டோம்; பெரும் பொருட்செலவில் பல நாடுகளில் படப்பிடிப்பு எடுத்து விட்டோம். ஆகவே திரைப்படம் திரையிட்டே ஆக வேண்டும்' என்று சொல்வது ஞாயமா? நல்ல விருந்தில் ஒரு சொட்டு 'விஷம்' விழுந்தாலும் உணவு முழுக்கப் பரவி உண்பவர்களை சாகடிக்கும். அதேபோல்தான் பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுத்தாலும் இசுலாமிய சமூகத்திற்கெதிராக விஷத்தைக் கொட்டியிருப்பது சனநாயகத்தை, மதச்சார்பின்மையைச் சாகடிப்பதற்கு ஒப்பானதுதான்.

திரைப்படக் கலைஞர் கமல் எழுதி இயக்கியிருக்கும் 'விசுவரூபம்' திரைப்படத்தை இசுலாமிய சமூகத்தினரின் கடுமையான எதிர்ப்பால் தமிழக அரசு தடை செய்தது. கமல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக படத்தில் காட்சிகள் இல்லை என்று கூறி தடையை நீக்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்திய முஸ்லிம்களுக்கு என்று தனி கொள்கை, கோட்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இது ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தின் உணர்வுகளுக்கு எதிரானது என்று எண்ணத் தோன்றுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறப்பட்டுள்ளது. இசுலாமிய சமூகத்தினர் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டுள்ளதாக இசுலாமிய சமூகம் மட்டுமல்ல படம் பார்த்த மற்றவர்களும் அப்படித்தான் வருத்தப்பட்டனர்.

படம் தடை செய்யப்பட்ட சூழலில் கமலுக்கு ஆதரவாக பலர் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.இராமகிருஷ்ணன் மற்றும் வன்னியர் சங்கத் தலைவர் இராமதாஸ் (இனி இவரை இப்படி அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்) ஆகியோர் 'கமல் நல்லவர், வல்லவர், சிறந்த கலைஞன்' என்றெல்லாம் கமல் மீது தங்களுக்குள்ள தனிப்பட்ட மதிப்பை வைத்து அறிக்கை விடுத்து 'விசுவரூபம்' திரைப்படத்தை வெளியிட ஒத்துழைப்புத் தர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"உலக மகா கலைஞன் கமல். அவனது படைப்பைச் சுதந்திரமாக வெளியிட உதவுங்கள்" என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா உருக்கமாக கமலுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

கமல் என்கிற தனிமனிதனுக்காகப் பேசும் இவர்கள் கோடிக்கணக்கான இசுலாமிய சமூகத்தினரைக் கொச்சைப்படுத்தி, திரித்துக் காட்டுவதைக் கண்டிக்கவும் இல்லை; அக்காட்சிகள் தணிக்கைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட‌ வேண்டும் என்று கமலுக்கு அறிவுரையோ ஆலோசனையோ சொல்ல முன்வரவும் இல்லை.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டுமே கமலின் இசுலாமிய விரோதப் போக்கைக் கண்டித்தார். கடந்த 27.1.2013 அன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து விட்டார்கள். அவர் நட்டப்படக் கூடாது என்று சொல்கிறார்கள். கோடிக்கணக்கான இசுலாமியர்களின் நன்மதிப்பைவிட, கோடிக்கணக்கான பணம் முக்கியமல்ல" என்றார். அது மட்டுமல்லாமல் தணிக்கைக் குழுவையும் கண்டித்து கட்சி, மதச் சார்பற்ற அறிவுஜீவிகளைத் தணிக்கை குழுவில் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இச்சூழலில் 'விசுவரூபம்' திரைப்படத்தை முன்வைத்து இன்றைக்குப் பல விவாதங்களை நாம் முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கமல்ஹாசன் நல்ல கலைஞர், இதற்கு முந்தைய திரைப்படங்களையெல்லாம் சிறப்பாக எடுத்திருக்கிறார் என்றெல்லாம் கமலுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். (உன்னைப் போல் ஒருவன் கூட நல்ல திரைப்படம்தானா?) "இது வரை நன்றாகத்தான் இருந்தான். பாவம் இப்போது புத்தி பேதலித்து விட்டது. தெரியாமல் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான். மன்னித்து விட்டுவிடுங்கள் யுவர் ஆனர்" என்று நீதிபதியிடம் வழக்கறிஞர் பேசினால் எப்படி நீதிமன்றமே சிரிக்குமோ அப்படித்தான் இந்த உலகமே சிரிக்கும். கமல் நல்ல சமூக சிந்தனை உள்ளவராக இருந்திருந்தால் ஒட்டுமொத்த சினிமா என்ன சிந்தனையைக் கொண்டுள்ளதோ அத்தகைய இந்துத்துவ சிந்தனைகளைக் கமலும் கொண்டிருப்பாரா? இதில் என்ன முற்போக்கு என்று புரியவில்லை.

கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் விஜயகாந்த் கூட இசுலாமியத் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டத்தான் திரைஉலகில் நுழைந்ததுபோல் பாகிஸ்தான் வரை சென்று இசுலாமியத் தீவிரவாதிகளை வேட்டையாடுவார். உச்சகட்டமாக இசுலாமியத் தீவிரவாதிகள் மதுரை அழகர் கோவிலைத் தகர்க்க சதித்திட்டம் தீட்டுவதையும், அந்தச் சதித்திட்டத்தை கள்ளழகர் 'விஜயகாந்த்' முறியடிப்பதையும் நாம் சகித்துக் கொண்டுதான் இருந்தோம். இப்படி விஜயகாந்த் மட்டுமல்ல பெரும்பாலான திரைப்படங்களில் இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளாக, இந்திய தேசத்திற்கே எதிரானவர்களாகத்தான் சித்தரிக்கிறார்கள்.

அண்மையில் விஜய் நடித்து வெளிவந்த 'துப்பாக்கி' படத்திலும் இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளாகத்தான் அப்பட்டமாகக் காட்டினார்கள். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த 'பயணம்' திரைப்படத்தில்கூட விமானத்தை இசுலாமிய பயங்கரவாதிகள் கடத்துவதைப் போலத்தான் காட்டினார்கள்.

இது திரைக்கதைக்காகவோ அல்லது விறுவிறுப்புக்காகவோ எடுக்கப்படுவதல்ல. சமூகத்தில் மேலாதிக்கம் செய்து வரும் இந்துத்துவச் சக்திகளின் திட்டமிட்ட பரப்புரையும் சிந்தனையும்தான் இதற்குக் காரணம்.

இன்றைக்குத் திரை உலகமே இந்துத்துவ ஆதிக்கவாதிகளின் பிடியில்தான் சிக்கி இருக்கிறது. அதனால்தான் இசுலாமியச் சமூகத்தை மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மற்றும் கிறித்துவ சிறுபான்மை சமூகத்தையும் இழிவுபடுத்தி காட்சி அமைக்கின்றனர்.

துணி வெளுப்பவர்களைக் கிண்டல் செய்வது, முடி வெட்டுபவர்களை முட்டாள்களாகக் காட்டுவது, தாழ்த்தப்பட்டவர்களை அடிமைத் தொழில் செய்பவர்களாக அல்லது அடிமைத் தொழிலை விரும்பியோ விரும்பாமலோ செய்பவர்களாகக் காட்டுவதில்தான் பெரும்பாலான திரைப்படங்கள் போட்டி போட்டுள்ளன. தலித்துகளை மட்டுமல்லாது பெண்களை எவ்வளவு உச்சத்திலும் நின்று கேலி செய்து கொண்டிருக்கிறது சினிமா உலகம்.

மானே, தேனே, மயிலே, குயிலே என்று வர்ணித்த திரைத்துறையினர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்கா, முத்துன மாங்கா என்றெல்லாம் பெண்களைக் காய்கறிகளை வைத்துக் கிண்டல் செய்யும் அளவிற்குச் சென்றனர். இந்த ஆணாதிக்க மனோபாவம் என்பது இந்துத்துவத்தின் உள்ளீடுதான்.

தலித்துகளைக் கூட இழிவுபடுத்தி ஏராளமான படங்களில் திட்டமிட்டும் தற்செயலாகவும் காட்சி அமைத்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு பல திரைப்படங்களில் "அட சண்டாளா" என்று பேசுவார். தாழ்த்தப்பட்டோரைப் பட்டியலிடும்போது 'சண்டாளன்' என்கிற சாதியும் உள்ளது என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். 'சாமி' திரைப்படத்தில் நடிகர் விவேக் முற்போக்கு வைதீகனாக நடிப்பார். அதில் மற்றொரு வைதீகன் அவனுடைய மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். அப்போது செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். உடனே நடிகர் விவேக், "அந்த புள்ளாண்டனுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடாதோ" என்பார். உடனே அந்த வைதீகன் "அவங்கள்ளாம் படிக்கக் கூடாது" என்று சாதியைக் காரணம் காட்டுவார். உடனே அந்த தாழ்த்தப்பட்ட பையனிடம் போய் என்ன படிக்க விரும்புகிறாய் என்று விவேக் கேட்பார். "லா படிக்க விரும்புகிறேன்" என்பான் அந்த தலித் பையன். "என்ன லா" என்பார் விவேக். அதற்கு 'சகிலா' என்பான். இப்படித்தான் தலித்துகளைப் பயன்படுத்தி கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.

அது மட்டுமல்ல இன்றைக்கு திரைப்படங்களில் மட்டுமல்ல, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ஒரு வார்த்தையை சகஜமாக பழக்கத்தில் விடுகிறார்கள். 'அட்டு பிகர்' என்கிற சொல்லாடல்தான்.

இந்தச் சொல்லாடல் அனைத்துத் திரைப்படங்களிலும் பெண்களைக் கிண்டல் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். இந்த 'அட்டு பிகர்' எங்கிருந்து வந்தது?

'Hut' என்கிற ஆங்கில வார்த்தையிலிருந்துதான் வந்திருக்க முடியும். ஏனென்றால் 'hut' என்றால் குடிசை என்று பொருள். சேரிகளெங்கும் குடிசைகள் இருப்பதனால் சேரிப் பெண்ணை அல்லது குடிசைப் பெண்ணைக் கிண்டல் செய்வதற்காக 'hut figure' அட்டு பிகர் என்று கூறுகிறார்கள். இன்றும் திரைப்படங்களில் கறுப்புப் பெண்களை அல்லது கிண்டல் செய்வதற்காகவே காட்டப்படும் பெண்களை இப்படி அழைக்கிறார்கள்.

kamal_vishwaroopam_400வில்லன்களாகச் சுட்டப்படும் பெயர்களைக் கூட பாருங்கள். ஆஸிப்கான், யூசுப்கான், அன்வர், பீட்டர், டேனியல் என்று சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த பெயர்களையே தொடர்ச்சியாகக் காட்டி வருகிறார்கள்.

இதுவெல்லாம் திரைக்கதை ஆசிரியருக்கும் தெரிந்தே, திட்டமிட்டே வைக்கப்படுகிற காட்சிகள், பெயர் சூட்டல்கள்தான். இதை திரைப்படத்துறையினர் மிகவும் துணிச்சலாக செய்து வருகின்றனர். இதில் உலக மகா கலைஞர் கமலஹாசன் எந்தவிதத்தில் முற்போக்கு? எந்தவிதத்தில் மற்றவர்களைவிட வித்தியாசமானவர் என்று புரியவில்லை.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

எதற்காக சினிமா எடுக்கிறார்கள், சமூகத்தை மாற்றவா? அல்லது புரட்சி செய்து புதிய மாற்றத்தை உருவாக்கவா சினிமா எடுக்கிறார்கள்? அதுவெல்லாம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் காலம். விதவைத் திருமணத்தை வலியுறுத்தி திரைப்படங்கள், சமூக இழிவுகளுக்கெதிரான திரைப்படங்கள், அறிஞர் அண்ணா, கலைஞர், திருவாரூர் தங்கராசு போன்றோரின் திரைப்படங்கள் எல்லாம் சமூகத்தைப் புரட்டிப் போட்டன. அது ஒரு காலம்.

இப்போது சமூகநீதிக்கு எதிரான திரைப்படங்களைத் துணிச்சலாக எடுக்கின்றனர். இடஒதுக்கீடுதான் சமூகத்தைச் சமப்படுத்தும் என்று தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வாழ்நாள் முழுக்கக் களமாடினார்கள். ஆனால் சினிமா மூலம் பிழைக்க வந்த அட்டக்கத்திகள் அப்போராளிகளுக்கு எதிராகவே திரைப்படம் எடுத்து வருகின்றனர். லட்சுமி நடித்த 'ஒரே ஒரு கிராமத்திலே', ஷங்கர் இயக்கிய 'ஜென்டில்மேன்', முருகதாஸ் இயக்கிய 'ஏழாம் அறிவு', அமிதாப்பச்சன் நடித்த 'ஆரக்ஷா' போன்ற படங்கள் எல்லாம் சமூகநீதிக்கு எதிரான விஷக் கருத்துக்களைக் கொண்டவை தான்.

இம்மாதிரி திரைப்படங்களை எடுப்பவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்களை விட சிறந்த சமூக சிந்தனையாளர்களா? எதுவும் இல்லை. இந்துத்துவத் கருத்தியலின் அடிமைகள்தான்.

கதாநாயகியை பாம்பு வந்து காப்பாற்றுவது, மயில் காப்பாற்றுவது, குழந்தை இல்லையென்றால் வேப்பிலை கட்டி ஒரே ஒரு பாட்டு பாடினால் குழந்தை பெற்று விடுவது, மறுபிறப்பில் வந்து பழி வாங்குவதுபோல், பிசாசு, பில்லி சூன்யம் இது போன்ற காட்சி அமைப்புகளும் கதை ஓட்டமும் இந்துத்துவ மன ஓட்டத்தில் எடுக்கப்படுவதுதான். இதுவெல்லாம் நம்பப்படுவதில்லை என்றாலும் திட்டமிட்டே நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள்.

திரைப்படங்கள் வணிகமயமாகி விட்டது. தயாரிப்பாளர்களுக்கு படம் ஓட வேண்டும். கதை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை. கதையே இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் லாபம் தரும்படி ஓட வேண்டும். இதுதான் இன்றைக்கு அளவுகோலாக இருக்கிறது. இதில் எங்கே வந்தது சமூகம் குறித்த அரசியல்?

சமூகம் குறித்து திரைப்படம் எடுப்பவர்கள், சமூகத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்துதான் 'உலக மகா கலைஞன்' கமலஹாசன் விசுவரூபம் திரைப்படத்தை எடுத்தாரா? அவருக்கு இசுலாமியர்கள் பற்றிய பார்வை என்ன? சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் செய்கிற எதிர்வினையை பெரும் சமூகமான இசுலாமிய சமூகத்தின்மீது திணித்து, ஒட்டுமொத்தமாக பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பது என்ன அரசியல்?

செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்காவின் இசுலாமிய பயங்கரவாத அறிவிப்பு 'உலகமயமாகிக் கொண்டிருக்கிறது'. அதைத்தான் உலகமெங்கும் கடை விரித்து வியாபாரம் செய்யத் துணிந்துள்ளார்கள்.

இந்த வியாபாரத்தில் இசுலாமியர்களைப் பலி கொடுத்துத்தான் லாபம் பார்க்கத் துடிக்கிறார் கமல். இதைப் புரிந்துகொள்ளாமல் சிலர் 'கருத்துச் சுதந்திரம்' என்று திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் பண்பாட்டையே கொச்சைப்படுத்தி அவதூறு பரப்புவதுதான் கருத்துச் சுதந்திரமா?

முதலில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு திரைப்படங்களை எடுப்பது நல்லது. இத்தருணத்தில் நடிகவேள் எம்.ஆர்.இராதா சொன்னதுதான் ஞாபகம் வருகிறது - "கூத்தாடிகளுக்கு எதற்கு அரசியல்?".

நடிகவேளை விட சிறந்த சமூகக் கருத்துக்களை சினிமாவில் இதுவரை யாரும் சொன்னதில்லை. இனியும் சொல்லப் போவதும் இல்லை. இப்போது அரசியலும் சமூகமும் இந்துத்துவ ஆதிக்கத்தின் உச்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு சினிமா வழி அமைத்துத் தந்து கொண்டு இருக்கிறது. வியாபாரிகளின் எண்ணமும் செயலும் லாபத்தை நோக்கித்தான். சினிமா வியாபாரிகளின் நோக்கம் பணத்தோடு இந்துத்துவக் கருத்தியலைப் பரப்புவதும்தான்.

அந்த வகையில்தான் நடிகர் கமல் இந்துத்துவ மேலாதிக்கத்தோடு இசுலாமிய விரோத திரைப்படத்தை எடுத்துள்ளார். ஆகவேதான் இப்படம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காட்சிகளில் மட்டுமல்லாமல் கதை முழுக்கவே இசுலாமிய சமூகத்தை பயங்கரவாதிகளாகவே காட்டுகிறது.

காவி பயங்கரவாதத்தின் எதிர்வினையை முறியடிப்பது சனநாயக முற்போக்குவாதிகளின் கடமைதான். அது எந்த 'ரூபத்தில்' வந்தாலும் முறியடிக்க வேண்டும். விசுவரூபமாக இருந்தாலும் முறியடிப்பதுதான் முதல் கடமை. தயாராவோம். அனைவரையும் தயாராக்குவோம்.

- வன்னிஅரசு
நன்றி கீற்று இணைய தளம்