31 January 2015

ஈழத்தமிழர் சிக்கல்: புதிய இரு வல்லவர்களும் பழைய அலாவுதீன் விளக்கும்

இலங்கையின் புதிய இரு வல்லவர்களுக்கு பழைய அலாவுதீன் விளக்கு ஒன்று கிடைத்துவிட்டது. பங்காளிகள் எல்லாம் வேண்டாம் என்று பழைய குப்பை கூளங்களுடன் பரணியில் தூக்கிவீசப்பட்ட அந்த அலாவுதீன் விளக்கை மீண்டும் தூசிதட்டித் துடைத்து எடுத்துவிட்டார்கள். அந்த விளக்கு மிகவும் சக்தி வாய்ந்ததென்றும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை பொருந்தியதென்றும் உலகின் சகல ஜனங்களுக்கும் அறிவிப்புச் செய்துவிட்டார்கள். அந்த விளக்கு இலங்கைத் தீவுக்கே வெளிச்சம் கொடுக்கப் போகிறதாம். அதைத் தடவித் தடவிப் பார்த்தாலே போதும் பாலும் தேனும் கிடைக்குமாம். அது எல்லோருக்குமான எல்லாவிதமான பசியையும் தீர்த்துவிடுமாம். அரை நூற்றாண்டுக்கு மேலான மக்கள் பிரச்சனைகளைக்கூட இந்த விளக்கு தீர்த்துவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட அந்த அற்புத விளக்கின் பெயர் 13வது சட்டத் திருத்தம். இரு வல்லவர்கள் மைத்ரிபால சிறீசேனா, ரணில் விக்ரமசிங்கே.



2009ஆம் ஆண்டு இனப்படுகொலை நடத்திய இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாகத் தண்டிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க தமிழர்கள் அப்போதிருந்தே போராட்டங்களை முன்னெடுத்தார்கள். ஐக்கிய நாடுகள் அவையில் இராஜபக்சேவைத் தண்டிக்க வாக்கெடுப்புக்கூட நடத்தினார்கள். தண்டிக்க முடியவில்லை. ஆனால் அறம் சார்ந்த தமிழர்கள் இராஜபக்சேவைத் தண்டிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் வந்தது. நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் இராஜபக்சேவை சனநாயக முறையில் தண்டித்தார்கள். வடக்கு-கிழக்கு, மலையகப் பிரதேசங்களின் கோப நெருப்பு இராஜபக்சேவை வீழ்த்தியது. இலங்கைத் தீவுக்கு யார் அதிபராக வரவேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய சக்தியாய் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்தனர். இராஜபக்சே கட்சியின் பொதுச்செயலாளரான மைத்ரிபால அதிபரானார். ஏற்கனவே குள்ளநரியாக இருந்த ரணில் விக்ரமசிங்கே 13வது சட்டத்தைக் காட்டி இப்போது நல்ல நரியாக ஊளையிடுகிறார். இலங்கையின் இனப்பிரச்சனைகள் அத்தனைக்கும் சர்வரோக நிவாரணி 13வது சட்டத் திருத்தம்தான் என்று மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இலங்கையின் உச்ச நீதிமன்றமே 13வது சட்டத்திருத்தம் செல்லாது என்று தீர்ப்புக் கூறிய பிறகும் இலங்கையின் புதிய வல்லவர்கள் அதை நடைமுறைப்படுத்தப் போவதாக ஏமாற்றுகிறார்கள்.

சரி இந்த 13வது சட்டத்திருத்தத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

தனித்தமிழ் ஈழத்தில்தான் தமிழ் மக்கள் சுதந்திரமாக தனித்த இறையாண்மையோடு வாழ முடியும் என்கிற உறுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத் தந்தை செல்வா போராடினார். ஆனாலும், சிங்கள, பௌத்தப் பேரினவாதம் ஈழத் தந்தை செல்வா அவர்களின் அறப்போராட்டத்தை அரச பயங்கரவாதம்கொண்டு ஒடுக்கியது. அழுத்த அழுத்த வெடிகுண்டுகள் வெடித்தன. புலிகள் முளைத்தனர். புலிகளின் ஆயுதவழிப் போராட்டத்தை நசுக்க சிங்களப் பேரினவாதம் கடும் முயற்சியில் ஈடுபட்டது. புலிகளின் வலிமையை, உறுதியை சிங்களவர்கள் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், 1987 சூலை 5ஆம் நாள் நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலால் சிங்களப் பேரினவாதம் நிலைகுலைந்தது. சிங்களம் மட்டுமல்ல உலகமே அதிர்ந்தது. புலிகளைச் சமாளிக்க முடியாமல் இந்தியாவின் உதவியை நயவஞ்சகமாக நாடினார் அன்றைய அதிபர் ஜெயவர்த்தனே. அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேயின் வஞ்சகத்தை அறியாமல் சிங்கள வலையில் வீழ்ந்தார். சூலை 29, 1987அன்று இந்திய-இலங்கை உடன்பாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பமிட்டனர். தமிழர்களின் சார்பில் கையெழுத்திட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியா மிரட்டியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்று பிரபாகரன் மறுத்துவிட்டார். தமிழர்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமலேயே உடன்படிக்கை கையொப்பமானது. இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை தமிழ்ப் பெண்களை வேட்டையாடியது. தமிழர் உடைமைகளைச் சூறையாடியது. தமிழர்களைக் கொன்றுகுவிப்பதன் மூலம் புலிகளை அடிபணிய வைக்க முயன்றது. கூடுதலாக, புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் குறிவைத்து கொலை செய்ய 'செக் மேட்' எனும் நடவடிக்கையிலும் இறங்கியது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒட்டுக் குழுக்களுக்கு இந்திய இராணுவமே ஆயுதங்களை வழங்கி புலிகளுக்கு எதிராகக் களமிறக்கியது. இந்த அணுகுமுறை இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கே எதிரானதாகும். அதாவது, போராளிக் குழுக்கள் அனைவரும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சனநாயகப் பாதைக்கு வரவேண்டும் என்பதுதான் இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம். ஆனால் புலிகளை மட்டும் அழிப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தமாக அது மாறிப்போனது. ஆனாலும் புலிகள் நெஞ்சுரத்தோடு இந்திய இராணுவத்தை எதிர்கொண்டார்கள். இந்திய இராணுவத்தின் அட்டூழியத்தைக் கண்டித்துத் தமிழகம் கொதித்தது. இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்னும் போராட்டம் வலுத்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வி.பி.சிங் இந்தியப் பிரதமரானார். அமைதிப்படை திரும்பப் பெறப்பட்டது.




இந்திய-இலங்கை உடன்படிக்கை சனநாயகத்தின் முன் கிழித்தெறியப்பட்டது. விடுதலைப் புலிகள் இந்த உடன்பாடு குறித்து கடந்த சூலை 9, 1988 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 9 மாதங்களாக இந்திய இராணுவத்தினரால் எங்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் அநீதியான இராணுவ நடவடிக்கையினால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் பாலிய வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். பல இலட்சம் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வனவிலங்குகளும் காடுகளும் அழிக்கப்பட்டன. 

 கடந்த 40 ஆண்டுகளாக இனப்படுகொலையொத்த அடக்குமுறையைச் சந்தித்துவரும் தமிழ் மக்களுக்கு பல கோடி ரூபாய் செலவழித்து தமிழர் பகுதிகளில் குண்டுகளைப் பொழிந்து இந்தியா சனநாயகத்தை சொல்லித்தர முயற்சிக்கிறது. இந்தியாவின் பிரச்சாரம் என்பது வடக்கு-கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக ஒன்றிணைத்து அங்கு தேர்தல் நடத்தப்பட்டால் தமிழர்களின் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்கிறார்கள். இங்கே அளப்பரிய தியாகம் செய்த தமிழ் மக்களும், வீரச்சாவடைந்த மாவீரர்களின் அர்ப்பணிப்பும் அதிகாரமே இல்லாத மாகாண சபைத் தேர்தலுக்கோ மாகாணங்களின் தற்காலிக இணைப்புக்கோ அல்ல என்பதை நினைவுகூரவேண்டும். இங்கே வடக்கும் கிழக்கும் என்று சொல்லப்படுவது தமிழர்களின் தாயகம். அது பிரிவினைக்கு அப்பாற்பட்டது.

வடமராச்சியில் இலங்கை இராணுவ நடவடிக்கையையடுத்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்டோம் என்று இலங்கை இராணுவம் கொக்கரித்தது. அதே வேளையில் 1987 சூலை 5 நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலையடுத்து சிங்களர்களும் ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறவில்லை என்பதையும், விடுதலைப் புலிகள் ஒடுக்கப்படவில்லை என்பதையும் உணர்ந்துகொண்டனர். தமிழர்களைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு இலங்கைக்குள் நுழைந்த இந்தியா, சிங்களர்களைவிட மோசமான கொடுமைகளைப் புரிந்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகவும், கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கிறது. துரோகிகளின் உதவியிலாவது தேர்தலை நடத்த முடியுமா என்று வாய்ப்புகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது. 

 இந்திய இராணுவத்தின் முகாமாக மாற்றப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் போலியான தேர்தலை நடத்தி பொம்மை அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் தமிழீழத்தில் சனநாயகம் திரும்பிவிட்டது என்று உலகை நம்ப வைக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. ஏனென்றால், தமிழர்களுக்கு ஞாயமான பாதுகாப்பை வழங்காத எந்தவொரு தீர்வையும் சமாதானம் என்கிற போர்வையில் புலிகள் ஏற்க மாட்டார்கள் என்பதால் இந்தியா புலிகளை அழிக்கவும் அதன் தலைவர்களை ஒழித்துக்கட்டவும் பெரும் முயற்சி எடுத்துவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர்களையும் அழிப்பதன் மூலம் இந்திய-இலங்கை உடன்பாடு என்னும் தமிழர்களின் அடிமை சாசனத்தை அமல்படுத்த முடியும் என்று இந்தியா நம்புமானால் அது தவறாகும். 

தொடர்ந்து இந்தியா புலிகளை அழிப்பதிலும் தமிழர்களைக் கொல்வதிலும் ஈடுபடுமானால் அர்த்தமற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கி அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக தமிழ்த் தேசத்தை நீண்டதொரு போராட்டத்திற்குத் தயார்படுத்த புலிகள் தள்ளப்படுவார்கள்.

- இப்படி தொலைநோக்குப் பார்வையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்ததன்பேரில், அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக, தமிழீழ விடுதலைக்காகப் போராடி இலட்சக் கணக்கான மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் மாண்டு மடிந்திருக்கிறார்கள். இந்தச் சோகத்தின் நெருக்கடியில்தான் 13வது சட்டத் திருத்தத்தை ரணில் விக்ரமசிங்கே நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். 

இந்திய அமைதிப் படையின் டாங்கியை வீழ்த்திய பெண் புலிகள்

1988ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இந்தியாவே நடத்திய போலித் தேர்தலில் மாகாண முதல்வராக அமர்த்தப்பட்ட வரதராஜபெருமாள், 1990இல் இந்த சட்டத் திருத்தத்தால் தமிழர்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை என்று சொல்லிவிட்டு விடைபெற்றார். இந்திய இராணுவமும் இந்தியாவுக்குத் திரும்பும்போது வரதராஜபெருமாளை பாதுகாப்பாக கப்பலில் அழைத்துவந்து இறக்கிவிட்டது.

இப்படி, இந்தியாவின் எடுபிடியாக, பொம்மை முதல்வராக இருந்த வரதராஜபெருமாளே, இந்தச் சட்டத் திருத்தத்தால் எந்தவிதப் பயனும் இல்லை என்று சொன்ன பிறகும், இச்சட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்த இலங்கை அரசு துடிப்பதற்குக் காரணமென்ன?

முள்ளிவாய்க்கால் போருக்கு பின் சிங்கள அரசின் வெ(ற்)றிக் கொண்டாட்டத்தில் இராஜபக்சேவும் சிறீசேனாவும் 

வரும் மார்ச் 25ஆம் தேதி ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. அதற்குள்ளாக தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் என்ற பேரில் எதையாவது கொடுத்து இனப்பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று அறிவிப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அது மட்டுமல்லாமல் மார்ச் 25க்குப் பிறகு ஐ.நா. குழு இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்கத் தொடங்கினால் இராஜபக்சே மட்டுமல்ல அன்றைய இராணுவ தளபதி சரத் பொன்சேகா, மைத்ரிபாலசிறீசேனா (புலிகளின் மீதான போருக்கு ஒப்பமளித்த அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர்) போன்றோரும் குற்ற விசாரணையில் சிக்கிக்கொள்ள நேரிடும். இவற்றையெல்லாம் தடுப்பதற்காகவும், ஏமாற்றவும்தான் 13வது சட்டத் திருத்தத்தைத் தூசிதட்டி எடுத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை இலங்கையில் மீள்குடியமர்த்தும் பணியில் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த 30-1-2015 அன்று புதுதில்லியில் அகதிகள் மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அக்கூட்டம் கூட்டப்படக்கூடாது என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிப்பதான, வரவேற்கத் தகுந்த எதிர்ப்பாகும். ஐ.நா. மனித உரிமை அவை கூடுவதற்கு முன்பு இந்தியாவில் உள்ள அகதிகள் இலங்கையில் குடியமர்த்தப்பட்டுவிட்டதாக உலகை நம்ப வைக்கத்தான் இத்தகைய முயற்சிகள் நடக்கின்றன. போர் முடிந்து இராஜபக்சே வீழ்த்தப்பட்ட பிறகு தமிழர்கள் அங்கே போவதுதானே ஞாயம்? என்றுகூடச் சிலர் கருத்து வைக்கிறார்கள்.

13வது சட்டத் திருத்தத்தின்படி முதலில் தமிழர்கள் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்தி, தமிழர் நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும். உயர் பாதுகாப்பு வளையமாக மாற்றப்பட்டுள்ள தமிழர் தாயகத்தின் நெருக்கடியைத் தளர்த்த வேண்டும். இவற்றை முன்னோட்டமாக புதிய மைத்ரிபால அரசு செய்யாமல் வேறு எதைச் செய்தாலும் உலகை ஏமாற்றத்தான் அது என்பது நிரூபணமாகும்.

இலங்கையை சர்வதேச நெருக்கடியிலிருந்து காப்பாற்ற இந்தியா இப்போதே அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டது.

ஆனால் தமிழர்களாகிய நாம்...?

வன்னிஅரசு.

01 November 2014

ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இராமதாசு



"கட்சி மாறுவதால் என்னை கோழை என்றோ பச்சோந்தி என்றோ எண்ணி விடாதீர்கள். இருக்கின்ற கட்சியிலேயே இருக்கின்ற மேடையிலேயே இங்கிருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும் இந்தியாவிலேயே எனக்கு ஒருவனுக்குத்தான் இருக்கு என்று கூறிக் கொண்டு இங்கிருந்து விடை பெறுகிறேன்" என்று பல்டி அடித்துவிட்டு எதிர்க்கட்சிக்காரர் ஒருவரின் சைக்கிளின் முன்னால் உட்கார்ந்து போவார் நடிகர் வடிவேலு. ‘எல்லாம் அவன் செயல்’ என்ற திரைப்படத்தில் வரும் வண்டு முருகனைப் போல பா.ம.க. இராமதாசு அரசியலில் பல்வேறு துணிச்சல் மகுந்த ‘பல்டி’களை அடித்து வருகிறார். 


வன்னியர் சங்கமாக இருந்து பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கியபோது தன் குடும்பத்திலிருந்தோ ஒருவர் கூட அரசியலுக்கு வரமாட்டார்கள் என பத்து சத்தியம் செய்தவர் இப்படித் தன் அருமை மகனுக்காகவே அரசியல் செய்து வருகிறார். தாழ்த்தப்பட்ட ஒருவரை முதல்வராக்குவேன் என்று கூறிவிட்டு தலித்துகளை ஒழித்துக் கட்டுவதற்காகவே தைலாபுரம் தோட்டத்தில் பயிற்சிகளை நடத்தி வருகிறார். “திராவிடக் கட்சிகளை ஒழிப்பதுதான் என் முதல் வேலை. கருணாநிதியை நம்பினால் கோவணத்தையும் பிடுங்கி ஓடவிட்டுவிடுவார். இனி எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளோடு கூட்டணியை வைக்க மாட்டோம். (பார்க்க இணைப்பு: தமிழ்நாட்டை பீடித்த சனியன்களை ஒழிப்பேன் - இராமதாசு சூளுரை ) ஜெயலலிதாவோடு கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் உறவு வைப்பதற்குச் சமம்” என்றெல்லாம் வீராவேசத்தோடு வசனங்களைப் பேசிவிடடு இறுதியாக கோபாலபுரத்திற்கே வந்து கலைஞரின் காலில் விழுந்து அந்தர்பல்டி அடித்துவிட்டார். தனது பேத்தி திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இராமதாசு தனது மனைவியுடன் கலைஞர் காலில் விழுந்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார். 

மருத்துவர் இராமதாசின் பேத்தியின் திருமண விழா கடந்த 30-10-2014 அன்று மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்து. மணமக்கள் சிறந்து வாழ விடுதலைச் சிறுத்தைகளும் வாழ்த்துகிறோம். முதல்நாள் திருமண வரவேற்பு நிகழ்வில் மதிமுக தலைவர் வைகோவும், மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். மறுநாள் நடந்த திருமண விழாவிற்கு திமுக தலைவரும் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார். வாழ்த்தும்போது, இராமதாசுக்கும் அவருக்கும் உள்ள நீண்டகால நட்பை விளக்கி உருகினார். 




‘கெழுதகை நண்பர்’ என்றெல்லாம் கூறி பெருமைப்பட்டார். இதில் எந்தக் குறையும் இல்லை. திருமண விழாக்களில் இதுபோன்ற நாகரிகங்களும் வாழ்த்துக்களும் தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள்தான்; வரவேற்கக் கூடியதுதான். ஆனால் இது கூட்டணி அரசியலுக்கு முகூர்த்த விழாவாக மாறியதுதான் நகைச்சுவையாகவும் விந்தையாகவும் உள்ளது. கலைஞரின் அன்பு நிறைந்த தம்பி இராமதாசு உண்மையிலேயே கலைஞர் மீது அன்பு கொண்டவர்தானா.. நாகரிகம் நிறைந்தவர்தானா.. அரசியல் பண்பாட்டுடன் நடப்பவர்தானா என்கிற கேள்விகள் துளைத்தெடுக்கின்றன.

தருமபுரி நத்தம் சேரியைச் சேர்ந்த இளவரசனை திவ்யா திருமணம் செய்த பிறகு நவம்பர் 7 அன்று நத்தம் சேரி சூறையாடப்பட்டது. பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வன்முறைக்குக் காரணம் என்று பேராசிரியர் மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு முதல் அத்தனை மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சுமத்தின. தி.மு.க.சார்பில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலான குழு நத்தம் சேரியைப் பார்வையிட்டுவிட்டு பா.ம.கவினரின் செயலைக் கண்டித்து அறிக்கை கொடுத்தார்கள். கலைஞரும் இராமதாசின் செயல்களைக் கண்டித்தார். இதற்கு எந்த பதிலும் சொல்லாத இராமதாசு, பா.ம.க.வைக் கண்டித்த அத்தனை தலைவர்களையும் ஏக வசனத்தில் திட்டினார்.
தீயசக்தி இராமதாசை தனிமைப்படுத்திய எழுச்சித் தமிழர் 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி முதல் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் வரை பா.ம.க.விற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த அத்தனைத் தலைவர்களையும் ‘அவன் இவன்’ என்று சொல்லித்தான் செந்தியாளர்கள் சந்திப்பில் தன் வன்மத்தை வெளிப்படுத்தினார்.
மற்ற தலைவர்களையே இப்படித் திட்டியவர் தொல்.திருமாவளவன் அவர்களை எப்படித் திட்டியிருப்பார் என்பதைச் சொல்லவா வேண்டும். “அவன் முஞ்சியைப் பாரு! அவன் தாடியையும் மீசையயும் பாரு! அவனுங்க கட்சிக் கொடியைப் பார்த்தாலே அறுவறுப்பா இருக்கு!” என்றெல்லாம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது வெறுப்பைக் கொட்டினார்.


அது மட்டுமல்லாமல், “ஜீன்ஸ் பேண்ட், 100 ரூபாய் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செல் போனில் பேசிக்கொண்டு பஸ் ஸ்டாண்டில் பெண்களை தலித் இளைஞர்கள் மயக்குகிறார்கள்” என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை மட்டுமல்லாது வன்னியப் பெண்களையும் அவமானப்படுத்தினார்.

ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டுக் கிடக்கிற ஒடுக்கப்பட்டுள்ள சமூகத்தின் விடுதலைக்காக தன் வாழ்க்கையை ஒப்புவித்தவர்கள் தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும். இவர்கள் வழியில் தன்னுடைய வாழ்க்கையை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒப்படைத்துக் களமாடி வருபவர் தலைவர் தொல்.திருமாவளன் அவர்கள். அதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தமிழ்த் தேசிய அரசியலை எளிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களைப் போராட்டக் களத்திற்கும் அழைத்து வந்தவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கி சேரிகளெங்கும் பகுத்தறிவுப் பரப்புரைகளை முன்னெடுத்தவர். மார்க்சிய அரசியலை மையப்படுத்தி உழைக்கும் மக்களை அணிதிரட்டும் அரும்பணியில் தமிழக அரசியலில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் களமாடி வருகிறார். கலைஞர், மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனார், ஆசிரியர் வீரமணி, வைகோ, ஜெயலலிதா, நல்லக்கண்ணு, சங்கரைய்யா, தா.பாண்டியன், ஜி.இராமகிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களாகட்டும், சீமான், வேல்முருகன் உள்ளிட்ட இளைய தலைமுறைத் தலைவர்களாகட்டும் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான அன்பைச் செலுத்தி நட்பைப் போற்றுபவர்தான் தொல்.திருமாவளவன் அவர்கள்.


தமிழகத்தில் தலித் மக்கள் பிரச்சனையை முன்வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்தாலும் தமிழர்களின் அனைத்து உரிமைப் போராட்டங்களிலும் வலுவாக சமரசமின்றிக் களமாடி வருவது விடுதலைச் சிறுத்தைகள்தான். தமிழீழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளோடு தோளோடு தோள் நின்று சிறுத்தைகள் களமாடியதை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் வகையில் மேதகு பிரபாகரன் அவர்கள், திருமாவளவன் அவர்களை கிளிநொச்சிக்கே அழைத்து “அண்ணன் இங்கே நான் இருக்கிறேன்; தம்பி நீ தைரியமாக தமிழகத்தில் போராடு” என்று நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தார். சமாதான ஒப்பந்த காலங்களில் தமிழகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட ஒரு தலைவரைத்தான் பா.ம.க. இராமதாசு அவர்கள் மிகவும் அறுவறுப்பாக ஒருமையில் பேசி வருகிறார். அப்பாவி வன்னிய மக்களிடையே தலித்துகளுக்கெதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

மானுடத்தின் உயரிய பண்பாடான காதலைக் கொச்சைப்படுத்தும் வகையில் தமிழகம் முழுக்கப் பரப்புரையை மேற்கொண்டார். தலித் மக்களுக்கெதிராக 60க்கும் மேற்பட்ட சாதிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுக்கக் கலவரங்களைத் தூண்டிவிட்டார். தலித்துகளுக்கெதிரான விசமப் பிரச்சாரங்களை பொது மேடைகளிலும் தனது ‘மக்கள்’ தொலைக்காட்சியிலும் திட்டமிட்டே பரப்பி விட்டார். பெண்களுக்கு சொத்தில் பங்குதரக் கூடாது என்று தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கெதிரான நச்சுக் கருத்துக்களைப் பரப்பினார்.

உச்சகட்டமாக கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் பெருவிழாவில் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான கலைஞரை ‘மோளம் அடிக்கிற சாதி’ என்றும், ஆசிரியர் வீரமணியை ‘கூட்டிக்கொடுப்பவர்’ என்றும் மிகக் கேவலமாக காடுவெட்டி குரு பேசியதை கைதட்டி ரசித்தவர்தான் மருத்துவர் இராமதாசு. (பார்க்க இணைப்பு: குச்சிகொளுத்தி இராமதாசின் சாதிவெறி பேச்சு & காடுவெட்டி குருவின் சாதிவெறி பேச்சு)

அனைத்துத் தலைவர்களையும் ‘நிக் நேம்’ வைத்துக் குறிப்பிடும் ஒரே அரசியல் தலைவர் இந்தியாவில் இராமதாசு ஒருவராகத்தான் இருக்க முடியும். இப்படி அநாகரிகமான அரசியல் நடத்திவரும் இராமதாசு கடந்த ஓராண்டுக்கும் மேலாக, திராவிட அரசியலுக்கு எதிராகவும், மார்க்சிய சித்தாந்தத்திற்கு எதிராகவும் செய்துவந்த பரப்புரைகள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பிரச்சாரங்களைவிடக் கொடியதாக இருந்தது. மனுதர்மத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்தது. ஆனால் இன்று எல்லாம் மறைந்தே போய்விட்டது.

ஒரு திருமணத்தை முன்னிறுத்தி, கூட்டணிக்கு பந்தக்கால் போட்டுள்ளனர். தமிழகத்தில் தனிமைப்படுத்த வேண்டிய தீய சக்தியான இராமதாசை நண்பர் என்று அள்ளி அரவணைக்கும் கலைஞர் நட்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் (நட்புக்குக்கூடப் பொருத்தமில்லாதவர் என்பது வேறு) கூட்டணி வைக்கக் கை கோர்ப்பது திராவிடக் கொள்கைக்கே எதிரானது இல்லையா? அல்லது திமுக பலவீனமாகிவிட்டதா? தந்தை பெரியாரின் கொள்கைகளான பெண்ணுரிமைக்கெதிராக, இடஒதுக்கீட்டுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இராமதாசைத் தனிமைப்படுத்தாமல் கொஞ்சிக் குழாவுவது திராவிட அரலியலுக்கு, தந்தை பெரியாரின் கொள்கைக்கு எதிரானது இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் துரோகமில்லையா? ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஓரங்கட்ட நினைப்பவர்களைக் கண்டிக்காமல் அவர்களோடு கை கோர்ப்பது அவர்கள் கரத்தை வலுப்படுத்துவதாக அமையாதா? கூடுதலாகத் தூண்டிவிடுவதாகத்தானே அர்த்தம். இதனைக் கலைஞர் விரும்புகிறாரா? 


வரும் நவம்பர் 7 அன்று நத்தம் சேரி தீக்கிரையாக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள். அந்தக் கொடுமையிலிருந்து இன்னும் அந்தச் சேரி மீளவேயில்லை. குடிசைகள் எரிக்கப்பட்ட சாம்பலின் நெடி சனநாயகத்தின் மூச்சைத் திணற வைத்துக்கொண்டிருக்கிறது. (பார்க்க இணைப்பு: நவம்பர் 7 - சாதிவெறி அரசியல் எதிர்ப்பு நாள்)



காதலித்த காரணத்தால் படுகொலை சொய்யப்பட்ட இளவசரனின் குடும்பத்தின் கண்ணீர் இன்னும் காயவில்லை. மரக்காணம், வடக்கு மாங்குடி சேரி மக்களின் ஒப்பாரியும் ஓலமும் இன்னும் நின்றபாடில்லை. அதற்குள் அந்தக் கொடியவரோடு கலைஞர் கை கோர்ப்பது மேலும் பல சேரிகளைத் தீக்கிரையாக்காதா? இளவரசனைப் போன்ற பலரை கொலை செய்யத் தூண்டுவதாகாதா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எல்லோரும் துரோகம் செய்கிறார்கள். இதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கா என்ன? 

எல்லாச் சேரிகளும் எரிந்துபோகட்டும் தலித்துகள் என்னும் ஓர் இனமே இல்லாமல் போகட்டும். பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சமூகநீதிக் கொள்கைகள் நாசமாகட்டும். கலைஞர், வைகோ, இராமதாசு ஆகியோரின் எண்ணங்கள் நிறைவேறட்டும். மானங்கெட்ட அரசியல் தமிழகத்தில் செழித்து வளர வாழ்த்துவோம்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இராமதாசு.

26 October 2014

பா.ம.கவின் தலித்துகளுக்கெதிரான வெறுப்பு பிரச்சாரத்தை முறியடித்த கோவிந்தப்பாடி வன்னிய மக்கள்

எல்லையோர கிராமத்தில் கர்நாடக வனத்துறையால் வன்னிய 
இளைஞர் சுட்டுக் கொலைசிறுத்தைகள் நேரில் அஞ்சலி!
விடுதலைச் சிறுத்தைகளை வரவேற்ற வன்னியப் பெருங்குடிமக்கள்!

கர்நாடக எல்லைப் பகுதி கிராமங்களான செட்டிபட்டி, கோவிந்தப்பாடி, நெட்டைக்காலன் கொட்டாய், கருங்களூர், காரைக்காடு உள்ளிட்ட கிராமங்கள் இப்போது பெரும் சோகத்திலும் பதட்டத்திலும் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன.  இந்த சோகத்திற்குக் காரணம் கர்நாடக வனத்துறையினர் அப்பாவிகள் மூவர் மீது நடத்திய துப்பாக்கிச் சூடுதான்.  
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்துள்ள கர்நாடக எல்லைப் பகுதியான செட்டிபட்டியைச் சேர்ந்த பழனி, கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா, நெட்டைக்காலன் கொட்டாயைச் சேர்ந்த முத்துச்சாமி ஆகியோர் கடந்த 22-10-2014 அன்று தீபாவளி கொண்டாட்ட உணவுக்காக மீன் பிடிக்க அதிகாலை 5 மணிக்கு அடிப்பாலாற்றின் மேற்குக் கரையில் தூண்டில் போட்டுக்கொண்டிருந்தனர்.  இப்பகுதியின் கிழக்குக் கரை கர்நாடக எல்லைப் பகுதியாகும்.  மேற்குக் கரையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மூவரையும் நோக்கி கர்நாடக வனத்துறையைச் சேர்ந்தவர்கள் எந்த முன்னறிவிப்புமின்றி திடீரெனத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.  பெரும் பதற்றத்துடன் தூண்டில்களையும் மீன்களையும் போட்டுவிட்டு மூன்று பேரும் ஓட ஆரம்பித்தனர்.  இதில்  பல இடங்களில் குண்டுகளால் துளைக்கப்பட்ட ராஜாவும் முத்துச்சாமியும் தப்பித்து விடுகிறார்கள்.  பழனியை மட்டும் வனத்துறையினர் சுற்றி வளைத்து கர்நாடக எல்லைப் பகுதிக்குள் கொண்டு செல்ல முயல்கின்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பழனி வனத்துறை காவலர்களோடு போராடுகிறார்.  அப்போது அங்கே வந்த கொல்லேகால் மண்டல வனத்துறை அதிகாரி வாசுதேவமூர்த்தி கடுங்கோபத்துடன் பழனியைத் தாக்க, காவலர்களும் கடுமையாகத் தாக்கி சித்ரவதை செய்தனர்.  பழனியின் கை, கால்களை அடித்து உடைத்ததோடு ஆணுறுப்பையும் வெட்டிப் போடுகிறார்கள்.  காடே பழனியின் கதறலை எதிரொலிக்கிறது.  கொலை வெறி கொண்ட வாசுதேவ மூர்த்தி பழனியின் வேட்டைத் துப்பாக்கியைப் பறித்து நெற்றிக்கு நேராக அருகிலிருந்தபடியே சுட பழனியின் இரண்டு கண்களும் வெளியே தெறிக்க மண்டை இரண்டாகப் பிளக்கிறது. பழனி இறந்த பிறகுதான் வாசுதேவ மூர்த்தியின் கொலை வெறி அடங்குகிறது. இறந்துபோன பழனியின் உடலை பாலாற்றின் மேற்குக் கரையில் தூக்கியெறிந்துவிட்டு வனத்துறை காவலர்கள் தப்பித்து விடுகின்றனர். காயமடைந்த ராஜாவும் முத்துச்சாமியும் நடந்ததை ஊரில் வந்து சொன்ன பிறகுதான் ஊர்க்காரர்கள் தேட ஆரம்பிக்கிறார்கள்.

கர்நாடக வனத் துறையால் கொல்லப்பட்ட பழனியின் உடல்  

வழக்கம்போல தமிழகக் காவல்துறை இதில் அரசியல் செய்ய ஆரம்பிக்கிறது. மிகக் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் பழனியின் உடல் மறுநாள் 23ந்தேதிதான் கிடைக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கர்நாடக எல்லைப் பகுதியிலுள்ள வனத்துறை சோதனைச் சாவடியை அடித்துச் சூறையாடினர்.  இதற்கிடையே வாசுதேவ மூர்த்தியைக் கைது செய்ய வலியுறுத்தி பழனியின் உடலை வாங்க மறுத்து சுற்றி உள்ள அனைத்துக் கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் எழுந்த பதற்றத்தைத் தணிக்க தமிழகக் காவல்துறை, பழனி இறந்தது கர்நாடகப் பகுதி என்பதால் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய மைசூருக்குத் திட்டமிட்டு திசை திருப்பி எடுத்துச் செல்கின்றனர்.  அப்பகுதிகளில் இரண்டு நாட்களாக பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.

சோகமே உருவான அக்கிராமத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சென்று வரச்சொல்லி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பணித்தார்.  அதன்படி தலைவரின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், ஜோஸ்வா ஐசக், மேட்டூர் மெய்யழகன், சேலம் அர்ஜுன், கொளத்தூர் தமிழ்மணி உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகளுடன் கோவிந்தப்பாடிக்கு 24-10-2014 அன்று இரவு 7 மணியளவில் சென்றடைந்தோம்.



மேட்டூரிலிருந்து கோவிந்தப்படி செல்லும் வழியெங்கும் காவல்துறையின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  காவலர்கள் துப்பாக்கியும் கையுமாக அலைந்துபொண்டிருந்தனர்.  நாங்கள் போய் இறங்கியதுமே காவல்துறையினர் வழக்கம்போலான தங்கள் சதிவேலையில் இறங்கினர்.  கொளத்தூர் காவல்துறை ஆய்வாளர் மனோகரன், டி.எஸ்.பி. ரவிக்குமார் ஆகியோர் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்டச் செயலாளர் மெய்யழகன், சேலம் அர்ஜுன் ஆகியோரை அழைத்து, "நீங்கள் அஞ்சலி செலுத்துவதை இங்குள்ள மக்கள் விரும்பவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் உள்ளே வந்தால் எதிர்ப்புத் தெரிவிப்போம் என்று ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். ஆகவே நீங்கள் வன்னிஅரசுவையும் தமிழ்ச்செல்வனையும் அழைத்துக்கொண்டு போய்விடுங்கள்" என்று மிரட்டும் தொனியில் சொல்ல, அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.



உடனே நாங்கள் அங்கு போய் டி.எஸ்.பி.யிடம் பேசினோம். "இங்குள்ள வன்னியர்கள் நீங்கள் வருவதை விரும்பலங்கய்யா" என்றார்.  அப்போதுதான் எமக்கே தெரியும் படுகொலை செய்யப்பட்ட பழனி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று.



டி.எஸ்.பி.யிடம் பேசிக் கொண்டிருந்தபோது கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ஒரு தம்பி காவல்துறையினரிடம் "சார்.. நீங்க இங்க அரசியல் பண்ணாதீங்க.  நான் பா.ம.க.வின் ஒன்றியத் துணைச் செயலாளர்தான்.  இவங்க வருவதால எந்தப் பிரச்சனையும் இல்ல.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாதான இவங்க வந்திருக்காங்க" என்று சொன்னதும் வன்னிய இளைஞர்கள் பலர் அந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசினார்கள். கூடுதலாக ஓர் இளைஞர், "அண்ணே நீங்க எங்க வீட்ல வந்து தங்குங்க" என்று கேட்டுக்கொண்டார்.  ஆனாலும் காவல்துறையினர் நம்மை விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர். பழனியின் உடல் மைசூரிலிருந்து வந்துகொண்டிருந்ததால் காவல்துறையினர் மேலும் பதற்றமாகி ஊரில் உள்ள சிலரை எங்களுக்கு எதிராகத் திருப்பிவிட ஆரம்பித்தனர்.  



நாங்களே ஊர்க்காரர்களிடம் பேசுகிறோம் என்று சொல்லிவிட்டு கோவிந்தப்பாடியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலசிங்கம் அவர்களிடம் பேசினோம். "விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் அனுப்பி வைத்துத்தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம்" என்று நாம் சொன்னதும் "நீங்க தாராளமா வாங்க. உங்களுக்கு யாரும் இங்க எதிர்ப்புக் காட்டல.." என்று சொல்லிக்கொண்டிருந்த அவர், கொளத்தூர் ஆய்வாளர் அங்கு வந்ததும் "போலீஸ் சொல்றதுபோல நீங்க போயிட்டு காலைல வாங்க" என்று மாற்றிப் பேசினார். இதனை காவல்துறை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எம்மை அப்புறப்படுத்த முயன்றது.  ஆனாலும் அங்குள்ள ஊர் மக்களின் முன்பாக விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நமது கோரிக்கைகளை உரத்து முழங்கினோம்.

* படுகொலை செய்யப்பட்ட செட்டிபட்டி பழனி குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 25 இலட்சம் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும்.
குண்டடி பட்டு படுகாயம் அடைந்துள்ள ராஜாவுக்கு ரூ. 10 இலட்சம் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும்.

* வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் பழனியைப் பிடித்து சித்ரவதை செய்து சுட்டுக் கொன்ற கொல்லேகால் வனத்துறை மண்டல அதிகாரி (ஏ.சி.எஃப்.) வாசுதேவ மூர்த்தி மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். உடனடியாக அவரை பணிநீக்கமும் செய்யவேண்டும்.

* கருங்களூர், செட்டிபட்டி, காரைக்காடு கிராமங்களைச் சேர்ந்த அப்பாவித் தமிழர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

* நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி யானைத் தந்தங்கள் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு பல அப்பாவித் தமிழர்களைத் தேடி வருவதைக் கைவிட வேண்டும்.  அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
* வழக்கைத் திசைதிருப்ப கர்நாடக வனத்துறையுடன் தமிழகக் காவல்துறையும் சேர்ந்து சதி செய்வதை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
* எல்லைப் பகுதியில் தொடரும் பதற்றத்தைப் போக்கி தமிழர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 30-10-21014 அன்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

* படுகொலை செய்யப்பட்ட பழனி குடும்பத்தினரை விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி வழங்க 30-10-2014 அன்று வருகிறார். 



இப்படி அறிவித்ததுமே இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். 30-10-2014 அன்று ஈரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் என்று சொன்னதுமே விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தை இங்கேயே நடத்துங்கள் என்று இளைஞர் ஒருவர் உற்சாகமாக முழக்கமிட்டார்.

அங்கிருந்த ஒட்டுமொத்த வன்னியர்களும் விடுதலைச் சிறுத்தைகளின் இத்தகைய நடவடிக்கையினை வரவேற்றனர்.  ஓரிருவரை காவல்துறையினர் தூண்டிவிட்டாலும் யாரும் அதனைப் பொருட்படுத்தவில்லை. காவல்துறையினரின் கெடுபிடிகளை மீறி நாம் இருந்தாலும் இருதரப்பினருக்கும் இடையே காவல்துறையினரே பிரச்சனையைத் தூண்டிவிடுவார்கள் என்கிற அய்யம் நமக்கு ஏற்பட்டதால் அங்கேயே பழனிக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு கோவிந்தப்பாடியைவிட்டு வெளியேறினோம்.  பழனியின் உடல் 25-10-2014 அன்று இரவு சுமார் 11 மணியளவில் கோவிந்தப்பாடியை வந்து சேர்ந்தது.  காவல்துறை, மக்களை அச்சுறுத்தி இரவோடு இரவாக பழனியின் உடலைப் புதைக்கச் செய்தாலும் மக்களிடையே எழுந்துள்ள எழுச்சியை அவர்களால் புதைக்க முடியாது.
விடுதலைச் சிறுத்தைகள் அப்பகுதிக்குள் வந்ததை வன்னியப் பெருங்குடி மக்கள் வரவேற்றது யாருமே எதிர்பாராததுதான். கடந்த காலங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கெதிராக, தலித்துகளுக்கெதிராக சிலர் பரப்பிய வெறுப்புப் பிரச்சாரம் எடுபடவில்லை என்பதை கோவிந்தப்பாடி வன்னிய மக்கள் நிரூபித்துள்ளனர்.  

வன்னியர்களுக்கெதிரான அரச ஒடுக்குமுறை அடக்குமுறையை களத்தில் நின்று எதிர்த்த ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் என்பதை அம்மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.

பா.ம.க. தலைவர் கோ.க.மணியின் சொந்த ஊரான கோவிந்தப்பாடியிலேயே இந்த மாற்றம் என்றால் தமிழகத்தின் மற்ற இடங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.  விரைவில் அந்த மாற்றம் வந்தே தீரும்.  

"தமிழர்களுக்கு எங்கே பாதிப்பு ஏற்பாட்டாலும் சிறுத்தைகள் அங்கே களமாடுவார்கள்!" என்று போராளித் தலைவர் தொல்.திருமாவளவன் சொன்னதற்கிணங்க சிறுத்தைகள் களமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வரலாற்றுப் பதிவாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் பகுதியில் கர்நாடக வனத் துறையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களைக் குறித்தான என்னுடைய முந்தைய பதிவை இங்கு படிக்கலாம்: ஆலம்பாடி மக்களின் அழுகுரல்: தூய்மைவாதமும், சாதியவாதமும் பதில் கூறுமா?

19 October 2014

எத்தனை ஆட்சி மாற்றங்கள் வந்தென்ன?கத்திரி மலைவாழ் மக்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை

“இதோ கொஞ்ச தூரம்” என்று சொல்லித்தான் அழைத்துப் போனார்கள்.  
மேட்டூரிலிருந்து அதிகாலையில் அந்த மலையடிவாரத்தில் இறங்கியதுமே வேறொரு உலகிற்கு வந்துவிட்டோமோ என்றுதான் தோன்றியது.  “அதோ அதுதான் கத்திரி மலை...  பக்கம்தான்... போய்விடலாம்” என்று சொல்லிக்கொண்டே கையை உயர்த்தி வான் நோக்கிக் காட்டினார்கள் வழிகாட்டுவதற்காக எங்களுடன் வந்திருந்த மலைவாழ் இளைஞர்கள்.  தலை நிமிர்ந்து மலையைப் பார்த்தபோது, ‘ஏறி விட முடியுமா?’ என்கிற மலைப்புத்தான் கண்முன் நின்றது.  



வெட்கப்பட்டு பச்சையைப் போர்த்திக்கொண்டு நிற்கும் மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தது எங்களை வரவேற்று அழைப்பதுபோல் இருந்தது. உருட்டிவிடப்பட்ட கற்களும் அவற்றைத் தாண்டி நிற்கும் மணல் வெளியும் எங்களுக்கான பாதைகளாகின.  25 கிலோ மீட்டர் நடந்தால்தான் அந்த கத்திரி மலைக்குப் போக முடியும்.  செங்குத்தான மலைப் பகுதி. பாதையை உருவாக்கியவர்கள் கத்திரி மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களான சோளகர்கள்.  கன்னடம் பேசினாலும் இவர்களின் தாய்மொழி தமிழ்தான். மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தின் மண்ணின் மைந்தர்கள்.  இந்த மக்களின் குலதெய்வமான மங்கம்மாள் கோயில் திருவிழாவிற்காகத்தான் கத்திரி மலைக்கு வரச்சொல்லி நமக்கு அழைப்பு வந்திருந்தது.

மங்கம்மாள் கோவில் 
திராவிடர் கழகத் தோழர் வழக்கறிஞர் ஜூலியஸ் அவர்கள் ஒருங்கிணைக்க, அய்யா தகடூர் தமிழ்ச்செல்வன், தம்பிகள்  ஜோஸ்வா ஐசக், சஜித்குமார் மற்றும் கத்திரி மலை இளைஞர்களுடன் நடக்க ஆரம்பித்தோம்.  சம தளத்தைக் கடந்து மலை ஏறஏற மரங்களை கிழித்துக் கொண்டு வீசும் காற்றைப் போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.  சமதளத்தில் எத்தனை கிலோ மீட்டரானாலும் நடக்க முடியும். ஆனால், சமமற்ற செங்குத்தான மலைப் பகுதியில் நடப்பதற்கு பயிற்சி வேண்டும் என்பதை 12-10-2014 அன்றுதான் உணர்ந்தோம்.  “வந்துவிட்டோமா... இன்னும் எவ்வளவு தூரம்” என்கிற வார்த்தைகள் மூச்சு வாங்க வாங்க அவ்வப்போது எங்களிடமிருந்து வந்துகொண்டுதான் இருந்தன.




சூரியன் நுழைய முடியாத அந்த அடர்த்தியான காடுகளுக்குள் நடப்பது என்பதே சுகமாகத்தான் இருந்தது.  ஆங்காங்கே மரங்களின் நிழலுக்குக் கீழே கிடக்கும் பெரும் பாறைகள் இருந்தன. எங்களுக்காகக் காத்திருந்ததுபோல் கிடந்த அந்தப் பாறைகளில் அனைவரும் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டுத்தான் போக முடிந்தது.  கொண்டுபோன தண்ணீர் பாட்டில்கள் தீர்ந்தாலும் எங்களுக்காக மலை உச்சியிலிருந்து மூலிகைத் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.  அந்தத் தண்ணீரைக் குடிக்கக் குடிக்க அவ்வளவு சுவை.  குடித்த பின்னர்தான் புதிய ‘எனர்ஜி’ கிடைத்தது.  களைப்புத் தீர்ந்தது.  மீண்டும் நடைபயணம்.

மலை ஏறஏற எங்களை வரவேற்கும்விதமாக மழை பொழிய மங்கலப் பாடல் முடிந்தது.  ஆம்.  குலதெய்வமான மங்கம்மாள் கோயில் திருவிழாவுக்காக ஒலிபரப்பப்பட்ட அந்தப் பாடலைக் கேட்ட பிறகுதான் கத்திரி மலைக்கு வந்தடைந்ததை நம்ப முடிந்தது.  25 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து விட்டோம் என்கிற பெருமிதத்துடன் கீழே எட்டிப் பார்த்தால் தலை சுற்றியது.  அவ்வளவு உச்சியில் நின்றுகொண்டிருந்தோம்.  சற்று நிமிர்ந்தால் ஆகாயம் தலையில் இடிப்பதாய் உணர்ந்தோம்.  

கத்திரி மலை மக்களைப் பார்த்த பிறகுதான் நிம்மதி வந்தது.  போனதும் சோளகர்கள் கொடுத்த அந்த கூட்டாஞ் சோறை உண்டோம்.  அமிர்தத்தையும் மிஞ்சும் உணவாக இருந்தது.  நவநாகரிக மாந்தர்களே வெட்கப்படும் அளவுக்கு உபசரிப்பு கத்திரி மலை மக்களிடம் இருந்தது.  அப்படி அம்மக்கள் முன்பின் தெரியாத எங்களை மிக வாஞ்சையாக வரவேற்றார்கள்.



லேசான மலைச் சாரல் கத்திரி மலையைத் தழுவியது.  கேழ்வரகுப் பயிறும் ஊடுபயிறான அவரையும் பச்சைப் பசேல் என குலுங்கின.  புளிய மரங்களும் வில்வ மரங்களும் காய்களைச் சுமக்க முடியாமல் விழி பிதுங்கின.  வீடுகளெல்லாம் மாட்டுச் சாணங்களைப் பூசிக்கொண்டு மினுமினுத்துக் கொண்டிருந்தன.  மண்ணைப் பிசைந்து கட்டப்பட்ட மண் வீட்டை தென்னை ஓலைகளும் நாணல்களும் கிரீடங்களாய் அலங்கரித்துக் கொண்டிருந்தன.  பத்துக்குப் பத்து அளவுக்கும் குறைவான அளவு கொண்ட வீடுகள்தான்.  அந்த ஊருக்கான மின்சாரத்தைத் தர 20 சோலார் கம்பங்கள் சூரியனுக்காகக் காத்திருந்தன.  மொத்தமே 70 வீடுகளைக் கொண்டதுதான் அந்த மலைக் கிராமம்.  மின்சாரத்தைப் பார்க்கவில்லை, பாழாய்ப் போன டி.வி. பெட்டியையும் பார்க்கவில்லை.  அங்கே ஒரே ஒரு ஆறுதல் சினிமாக்காரர்களின் அடையாளமே இல்லை.




ரசிகர் மன்றங்களே இல்லாத கிராமங்களில்லை.  ஆனால் கத்திரி மலையில் மட்டும் ரசிகர் மன்றங்களுக்குக் கத்திரி போட்டுவிட்டார்கள் போலும்.  அம்மக்களுக்கான தாகத்தைத் தீர்த்துக் கொண்டேயிருக்கும் மணிமேகலையின் பாத்திரமாய் காட்சியளிக்கும் ஊரின் ஒரே கிணறு வந்திருந்த மக்களுக்கும் நீரை வாரி இரைத்துக்கொண்டே இருந்தது.



மங்கம்மாளை தரிசிப்பதற்காக மலையடிவாரத்திலிருந்து வந்த மக்கள் கூட்டம் கத்திரி மலையை நிறைத்துக் கொண்டேயிருந்தது.  கோவிலைச் சுற்றி கூடாரம் அமைத்து மக்கள் தங்க ஆரம்பித்தார்கள்.  மலையடிவாரத்திலிருந்து வந்த மக்கள் பெரும்பாலும் வன்னியர்கள்தான்.  அவர்களுக்கும் குலதெய்வம் இந்த மங்கம்மாள்தான்.  பழங்குடி மக்களான சோளகர்கள் கொடுத்த அந்தக் கூட்டாஞ்சோற்றினை வந்திருந்த வன்னியர் மக்களும் உண்டு பசியாறினார்கள்.

மங்கம்மாளை  வழிபட்ட  பின்பு  

அரசு பழங்குடியின பெண்கள் உண்டி-உறைவிட உயர்நிலைப் பள்ளி


கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மங்கம்மாள் கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றிட வன்னியர்கள் முயற்சித்து வந்ததை பழங்குடி மக்களான சோளகர்கள் முறியடித்தனர்.  அப்பகுதியில் தாசில்தாராக இருந்து பணி ஓய்வு பெற்ற குரு லட்சுமணன் என்பவர்தான் சோளகர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்று வருகிறார்.  இவரும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒடுக்கப்படும் பழங்குடியின மக்கள் பக்கம் நிற்கிறார். இவர் பதவியிலிருந்த காலத்தில்தான் கத்திரி மலைக்கென ‘அரசு பழங்குடியின பெண்கள் உண்டி-உறைவிட உயர்நிலைப் பள்ளி’ ஒன்றை பாடுபட்டுப் பெற்றுத் தந்தார். தன் வாழ்க்கையை பழங்குடியின மக்களுக்காக அர்ப்பணித்துவரும் மிகச் சிறந்த மனிதரான குரு லட்சுமணன் அவர்கள்தான் கோவில் திருவிழாவை நடத்துவதற்கும் இன்றுவரை உறுதுணையாக இருந்து வருகிறார். இதேபோல், வழக்கறிஞர் ஜூலியட் அவர்கள் அம்மக்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் நின்று போராடி வருகிறார்.  இவரும் கிறித்தவ வன்னியர்தான்.

அய்யா குரு லட்சுமணன்

கத்திரி மலை என்பது வீரப்பன் சுற்றிய பகுதி என்றும், காவல்துறையாலும் வனத்துறையாலும் கண்காணிப்புக்குள்ளான கிராமம் என்பதால் ஒருவிதப் பதற்றம் இருந்தது.  வேட்டையாடி சமூகமான இவர்கள் மீது வேட்டையாடுவதாக வழக்குப்போடுவதே வேடிக்கையாக இருக்கிறது.  அப்படித்தான் சின்னப்பி என்கிற மோட்டாவை பல்வேறு வழக்குகளில் தேடப்படுவதாக கர்நாடக வனத்துறை அறிவித்திருக்கிறது.  65 வயதைக் கடந்த மோட்டாவுக்கு 3 மனைவிமார்கள்.  7 ஆண்கள், 8 பெண்கள் என குழந்தைச் செல்வங்களைக் கொண்டவர்.  கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டில் பேரக் குழந்தைகளைக்கூடக் கொஞ்ச முடியாமல் காட்டிலும் மலைக் குகைகளிலும் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  இவர் செய்த குற்றம்தான் என்ன?  கத்திரி மலையில் சோளகர்கள் குடியில் பிறந்ததுதான் இவர் செய்த குற்றம்.  இன்று மோட்டா குட்டி வீரப்பன் என்கிற சரவணனின் கூட்டாளி என்று தேடப்படுகிறார். சரவணன் இப்போது மைசூர் சிறையிலிருக்கிறார்.  மோட்டா அவரைப் பார்த்ததுகூட இல்லையாம். ஆனாலும் மோட்டாவைக் குறி வைக்கிறது கர்நாடக தோட்டா.  மோட்டாவின் மனைவியரில் ஒருவரான குந்தியம்மாளையும் மகன்கள் பேரக் குழந்தைகளையும் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆறுதல் கூறிவந்தோம்.  தலைவர் திருமாவளவன் அவர்களை ஒருமுறை சந்தித்து பாதுகாப்புக் கேட்டதை குந்தியம்மாள் நினைவுபடுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது.  

மோட்டாவின் மனைவி குந்தியம்மா

இரவில் உண்டி-உறைவிடப் பள்ளியில்தான் தங்கினோம். அவ்வளவு கூட்டம்.  கடும் இடநெருக்கடி.  அதிகாலை அவரவர் எழுந்து மலையிறங்க ஆரம்பித்தார்கள்.  நாமும் அந்த ஊரைவிட்டுக் கிளம்பும்போது, அம்மக்கள் மலைத்தேன் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்.  உடன் வழிகாட்ட ஒரு தம்பியையும் அனுப்பி வைத்தார்கள்.  வழிநெடுக அந்தத் தேன்தான் களைப்பைப் போக்கியது.  

யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராமல் மலை உச்சியில் இயற்கையோடு வாழ்ந்து வரும் அவர்களை, நாகரிக மனிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள்தான், மக்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்கிறவர்கள்தான் வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  
எத்தனை ஆட்சி மாற்றங்கள் வந்தென்ன?  அவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.  இந்தியாவை வல்லரசாக்கத் துடிக்கிறார்கள்.  இப்படி அவலம் நிறைந்த கிராமங்கள் இருக்கும் வரை என்ன மாற்றத்தைச் செய்து கிழித்து விடப்போகிறார்கள்.

(தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து வரும் மலைவாழ் மக்கள் மீதான அரச வன்கொடுமைகளுக்கு எதிராக எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஈரோட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது)