22 February 2015

இன்னுமாடா இந்த ஒலகம் ஒங்கள நம்புது?

அண்டப்புளுகனும் ஆகாசப்புளுகனும் தனித்தனியாக புளுகினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது, அந்த பேட்டி. அதுவும் அப்பனும் புள்ளையுமே அந்த புளுகர்களாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மக்களை ஏமாளிகளாக்கி விடுவார்கள். அப்படித்தான் அண்டப்புளுகன் ராமதாசின் நேர்காணல் புதிய தலைமுறையிலும் ஆகாசப்புளுகன் அன்புமணியின் நேர்காணல் தந்தி தொலைக்காட்சியிலும் சனிக்கிழமை(21.2.2015) இரவு ஒளிபரப்பாகியது. இரு புளுகர்களையும் அவரவர் வீடுகளில் பேட்டி கண்டார்கள் நெறியாளர்கள்.



புதியதலைமுறையில் நேர்காணல் கண்ட திரு.குணசேகரன் அவர்களுக்கு ராமதாசைப் பற்றி நன்றாகவே தெரியும் என்பதால், ஆரம்பத்திலேயே நன்றாக புளுக அனுமதித்தார். அண்டப்புளுகனும் அள்ளி விட்டுக்கொண்டே இருந்தார். இறுதியாக, "முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல் வரைக்கும் தான், தேர்தலில் வந்ததும் மாறிடுவீங்கன்னு மக்கள் பேசிக் கொள்கின்றனர்" என்று கேள்வி கேட்டதும், முகத்தை சுழித்த அண்டப்புளுகன், "இது எங்களை இழிவுபடுத்துகிற கேள்வி, இப்படியெல்லாம் தெரிந்திருந்தால் பேட்டிக்கே ஒத்திருக்க மாட்டேன்" என்று பிகு செய்தார். இறுதியாக ஒரு கேள்வி என்று திரு.குணா கேட்ட போது கூட, எதுவுமே இல்லை என்று கடுகடுப்பாக முடித்து விட்டார்.

வெகு மக்களின், பல கட்சிகளின் சந்தேகமல்ல, உறுதியாக நம்பப்பட்டதையும் கடந்த கால புளுகுகளையும் மனதில் வைத்து தான் திரு.குணா கேள்வியாக ஆதங்கமாக கேட்டார். இதற்கு கூட அந்த அண்டபுளுகனால் பதில் சொல்ல முடியவில்லை. இதில் கோபம் வேறு.

தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியாது. தேசிய கட்சிகளோடும் திராவிடக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்று ஊர் ஊராய் புளுகி விட்டு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே தேசியக்கட்சியான பாஜகவுடனும், திராவிடக்கட்சியான மதிமுகவுடனும் கூட்டணி வைத்தார். அதற்கு முன்பு வரை சாதிவெறி அமைப்புகளை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு மாவட்டம் மாவட்டமாக படங்காட்டி விட்டுத்தான் பாஜகவுடன் பேரம் பேசினார். இது ஊர் உலகத்திற்கு தெரிந்த கதைதான். கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல், இப்படி தெரிந்தால், பேட்டிக்கே வந்திருக்க மாட்டேன் என்று சொல்வது தான் பதிலா? பாவம் இதற்கு எந்த பொய்யும் கிடைக்காததால் கோபத்தை மட்டும் வெளிப்படுத்தினார்.

அடுத்து நம்ம ஆகாசப்புளுகன். அப்பன் 8 அடி பாய்ந்தால் புள்ளை 16 அடி பாய்வார்கள் என்று கிராமப்புற பழமொழி உண்டு. அதைப்போல, அண்டப்புளுகனை மிஞ்சுகிற ஆகாசப்புளுகனாக அன்புமணி, தந்தி தொலைக்காட்சியில் அள்ளி விட்டார். நேர்காணல் கண்ட திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் எந்த கேள்வியையும் முடிக்கும் முன்பே முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு பதில் என்கிற பெயரில் புளுகிக்கொண்டு இருந்தார். "இதற்கு முன்பு தலித் ஒருவரைத்தான் முதலவராக்குவதாக நீங்கள்" என்று கேள்வியை முடிக்கும் முன்பே, "அதெல்லாம் பழசுங்க. இப்ப என்னன்னு பேசுங்க. ஓட்டை ரிக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லாதீங்கன்னு கோபத்துடன் சொல்லிவிட்டு, தலித் எழில்மலைக்கு மத்திய அமைச்சரு, பொதுச்செயலாளர் ஒரு தலித் என்று ரொம்ப காலத்து ஓட்டை ரிக்கார்டை ஓடவிட்டார். 



"தமிழகம் முழுக்க 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமா?" என்று அடுத்த கேள்வியை முடிக்கும் முன்னரே, "ஏன் முடியாது? ஏற்கனவே 234 தொகுதிகளிலும் நின்றுருக்கிறோம்" என்று ஆகாசப்புளுகை அள்ளி விட்டார். "உங்கள் தலைமையை ஏற்று மற்ற கட்சிகள் வரலாம் என்று சொல்லியிருக்கிரீர்கள். எந்த கட்சி வரும் என்று எதிர்பார்க்கிரீங்க? விஜயகாந்த், வைகோ உங்கள் தலைமையை ஏற்பார்களா? என்று திரு.பாண்டே கேட்டதற்கு, "வருவார்கள். அரசியலில் எதுவுமே நடக்கும்" என்று ஜோதிடத்தை நம்புவது போல எந்த வெட்கமும் கூச்சமும இல்லாமல் சொன்னது தான் காமெடியிலும் காமெடி. அதாவது, சந்தானம், சூரி போன்ற காமெடியர்களுக்கு துணை பாத்திரமாக விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களை அழைப்பது போல தான் இந்த ஆகாசப்புளுகனின் ஆசை இருக்கிறது.

"உங்கள் வாக்கு வங்கி என்ன? உங்கள் பலம் தெரிந்துதான் முதல்வர் வேட்பாளரை அறிவித்தார்களா?" என்று அடுத்தடுத்த எந்த கேள்விகளுக்குமே, "அரசியலில் எதுவும் நடக்குமுங்க, மக்கள் நம்புறாங்க மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்" என்று சீரியசாக காமெடி செய்தார். பெரும்பாலும் நான் இரவில் ஆதித்யா, சிரிப்பொலி தொலைக்காட்சிகளைத்தான் பார்ப்பது பழக்கம். ஆனால், அதையெல்லாம் மிஞ்சக்கூடியதாக ஜாலியாக இருந்தது ஆகாசப்புளுகனின் பொய்யுரை.

இடையிடையே நாங்க ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீங்கன்னு தயவு செய்து கேளுங்க.. கேளுங்க என்று அடுத்த பெரிய புளுகுகளை புளுகுவதறகு வாய்ப்பு கேட்டுக்கொண்டிருந்தார் ஆகாசப்புளுகன். ஆனால், திரு.பாண்டே அவர்களின் வழக்கம் போலான சாதுரியத்தால், "தேர்தல் நேரத்தில், தேர்தல் அறிக்கையை முன்வைத்து அப்போது கேட்கலாம்" என்று மக்களை காப்பாற்றினார். அப்படியும் விடாமல், "நாங்க ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம், மிஸ்டு கால் கொடுக்க வைப்போம் (ஏதோ புதிய கண்டுபிடிப்பு மாதிரி) கள்ளச்சாராயம் இருக்காது, அது இருக்காது, இது இருக்காது என்று பள்ளிக்கூடத்தில்" நான் முதலைமைச்சர் ஆனால்.." என்கிற தலைப்பில் மாணவர்கள் ஒப்புவிப்பது போல ஒப்புவித்துக்கொண்டிருந்தார். திரு.பாண்டே எவ்வளவோ முயன்று மற்ற கேள்விகளுக்கு நகரந்தாலும் பாவம் அவரால் முடியவில்லை. வேறு வழி இல்லாமல் ஆகாசப்புளுகனுக்கு முதல்வராக வாழ்த்துச்சொல்லி புளுகை முடித்து வைத்தார்.

பொய் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என்று முடிவெடுத்த பிறகு, எப்படி வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் புளுகிக்கொண்டே இருக்கலாம். அந்த கோயபல்சு கூட வெட்கப்படுமளவுக்கு பொய்யுரைக்கலாம். அதுவும் சொந்த வன்னிய மக்களை ஏமாற்றி மற்ற கட்சிகளுடன் பேரம் பேசுவதற்காகத்தான் இந்த 'முதல்வர் வேட்பாளர்' காமெடி நாடகம் என்பதை அப்பாவி வன்னிய மக்களே புரிந்து கொண்டிருக்கும் போது, மற்றவர்களுக்கு புரியாதா என்ன? 

டே...இன்னுமாடா இந்த ஒலகம் ஒங்கள நம்புது?

-வன்னி அரசு.

19 February 2015

லிங்கா படப் பிரச்சனை - விடுதலைச் சிறுத்தைகள் ஞாயத்தின் பக்கமே நிற்போம்!

பால் வியாபாரம் பார்த்தாலும் சரி; துணி வியாபாரம் பார்த்தாலும் சரி... ஒரே பாடல் காட்சியில் பெரும் பணக்காரன் ஆகிவிடுவார் கதாநாயகன்.  பாடல் முடிந்தவுடனேயே காரிலிருந்து இறங்குவார். 
 
அப்படித்தான் சினிமா வியாபாரமும்.  கோடிகளைக் குவிக்க ஆசைப்பட்டுக் கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களாக, விநியோகஸ்தர்களாக, கதாநாயகர்களாக ஆயிரக் கணக்கில் திரிகிறார்கள்.  வெற்றி பெறுகிறார்கள் சிலர்.  கோவணமாவது மிஞ்சியதே என்று ஊரைத் தேடி ஓட்டம் பிடிக்கிறார்கள் பலர்.
  
சினிமா சூது நிறைந்த உலகம்.  பெயரில்தான் தர்மனாக இருப்பார்கள்.  பெண்டாட்டி, பிள்ளைகளை விற்று சினிமா எடுக்கும் தர்மன்களாக மாறியிருக்கிறார்கள்.  இலாப-நட்டம் எந்தத் தொழிலிலும் உண்டு. சினிமாத் தொழிலில் மட்டும் புகழும் சேர்த்து உண்டு.  அப்படித்தான் இலாப நோக்கத்தோடு அண்மையில் 'லிங்கா' திரைப்படத்தை வாங்கிய வியாபாரிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

நடிகர் ரஜினிகாந்த் என்ற ஒற்றைப் பிம்பத்தை வைத்து, வியாபாரம் செய்திருக்கிறார்கள். ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாட்களில் சென்னை போன்ற பெரு நகரங்களின் சாலைகள் ஸ்தம்பித்துப் போகும். ரசிகர்களின் பணம் சாலைகளில் பட்டாசாக வெடித்துச் சிதறும்.  அந்த அளவுக்கு ஒரு 'ஓபனிங்' உண்டு. அதற்காகத்தான் பல கோடி ரூபாயைக் குதிரைப் பந்தயத்தில் கொட்டுவதுபோல் கொட்டுகிறார்கள்.  

இப்படிக் கொட்டுகிற சில படங்கள் 'ஓஹோ'வென ஓடுகின்றன.  ஏராளமான படங்கள் வந்த வேகத்திலேயே திரும்பி விடுகின்றன. 
 
இப்படி கமலின் எத்தனையோ படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன.  'ஆளவந்தான்', 'ஹேராம்' போன்றவை வியாபார அளவில் தோல்விப் படங்கள்தான். தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்திய படங்கள்தான்.  அதைப் போல முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்கள் பல தோல்வியைச் சந்தித்துள்ளன.  இந்தப் படங்களை வாங்கிய விநியோகஸ்தர் எவரும் சம்மந்தப்பட்ட நடிகர்களிடம் நஷ்ட ஈடு கேட்டதில்லை.  அடுத்தடுத்த படங்களை வாங்கி நட்டத்தைச் சரி செய்துகொண்டார்கள்.  இதுதான் திரையுலக மரபு.  இத்தகைய சுமூகமான உறவை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் பரஸ்பரம் மேம்படுத்திக்கொள்கிறார்கள்.

  

ஆனால் இப்போது, 'லிங்கா' படத்தின் விநியோகஸ்தர்கள் திரு. ரஜினி அவர்களிடம் நஷ்ட ஈடு கேட்பது நியாயம்தானா?  நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மீதும் அவரது படங்கள் மீதும் நமக்கு பல விமர்சனங்கள் உண்டு.  அது வேறு.  ஆனால், புகழ்பெற்ற ஒரு கலைஞரை முன்வைத்து, 'பிளாக்மெயில்' செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
  
திரு. ரஜினிகாந்த் அவர்கள் ஒரு தொழில்முறைக் கலைஞர். சம்பளம் வாங்கினார்; நடித்துக் கொடுத்தார். அவ்வளவுதான் அவரது 'ரோல்'.  இயக்குநரும் அப்படித்தான்.  இதில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும்தான் இலாப வேட்டையாடத் துடிப்பவர்கள்.  இந்தக் குதிரைப் பந்தயத்தில் அடித்தால் ஜாக்பாட்.  இல்லையென்றால் தெருவிற்கு வரவேண்டியதுதான்.  இப்படி எத்தனையோ தயாரிப்பாளர்கள் தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். வாரத்திற்கு பத்து திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதில் ஓரிரு படங்கள் மட்டுமே தப்பித்துக்கொள்கின்றன.  மற்ற படங்கள் எல்லாம் ஒரு காட்சிகூட ஓடுவதில்லை.  முன்பெல்லாம் தொழில் முறை வியாபாரிகளாக இருந்து சினிமாவை தொழிலாகப் பார்த்து நட்டம் ஏற்பட்டாலும் பொறுமையோடு காத்திருந்து வியாபாரம் செய்தார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல.  கார்ப்பரேட் நிறுவனங்கள் சினிமாவைக் கைப்பற்றிவிட்டன. அது மட்டுமல்லாமல் 'ரியல் எஸ்டேட்', சட்டத்திற்குப் புறம்பான 'நம்பர் 2' பிஸினஸ் மூலம் சம்பாதித்து சினிமாவுக்குள் வருபவர்கள்தான் இப்போது அதிகம்.  அப்படி தொழில்முறை விநியோகஸ்தர்களாக இல்லாதவர்களாகச் சேர்ந்து 'லிங்கா' படத்தை கொள்ளை இலாபம் கிடைக்கும் என்ற பேராசையில் வாங்கினார்கள்.  அவர்களின் முதல் வியாபாரமே நட்டத்தில் முடிந்துவிட்டது.

ஒரு தொழிலில் இலாபம்-நட்டம் வருவது சகஜம்தான்.  சினிமா என்பது இப்போது தொழிலாக இல்லாமல் சூதாட்டமாக மாறிவிட்டது. இந்தச் சூதாட்டத்தில் அரசியல்வாதிகளை இழுப்பது அநாகரிகம். அதைவிட அநாகரிகம் நடித்த நடிகர்களிடம் நட்டஈடு கேட்பது.  லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை நட்டம் அடைந்ததாகச் சொல்லப்படும் விநியோகஸ்தர்கள் யாருமே தொழில்முறை விநியோகஸ்தர்கள் அல்ல.  அதுதான் இங்கு பிரச்சனை.  

உண்மையிலேயே நட்டஈட்டை வேந்தர் மூவிஸிடம்தான் இவர்கள் கேட்க வேண்டும். அதைவிடுத்து திரு. ரஜினி அவர்களிடம் கேட்பது தவறானது.  லிங்கா படத்தின் மூலம் இலாபம் அடைந்திருந்தால் அதிக இலாபம் அடைந்துவிட்டோம் என்று அந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு எந்த விநியோகஸ்தராவது இலாபத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்களா?  அல்லது இலாபம் அடைந்தோம் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்களா?  லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் நட்டம் அடைந்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரதம், பிச்சையெடுக்கும் போராட்டம் என்று மிரட்டுவது தொழிலுக்கே எதிரானது. இதில் அரசியல்வாதிகளை இழுப்பது ஆபத்தானது.

பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அடுத்தடுத்த படங்களை வாங்கித்தான் நட்டத்தைச் சரி செய்ய வேண்டுமே தவிர, மிரட்டுவது, பிளாக்மெயில் செய்வது சரியல்ல.  அதாவது பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவாக இருப்பதாக, தவறாக ஒரு சிலர் கட்சியின் பெயரை திரையுலகில் பயன்படுத்தி வருவதாகக் கேள்விப்படுகிறோம்.  அப்படிப் பயன்படுத்தினால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது.  

கடந்த மாதம் வள்ளுவர் கோட்டத்திற்கு முன்பு நடிகர் ரஜினி அவர்களுக்கு எதிராக விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, விநியோகஸ்தர்கள் சார்பாக ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, "எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்துவதற்காக சீமான் வருகிறார், தலைவர் திருமாவளவன் அவர்களும் வரவேண்டும்.  அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்குமா?" என்று கேட்டார்.  அதற்கு நான், "இது உங்கள் திரையுலகப் பிரச்சனை.  படத்தில் நட்டம் ஏற்பட்டதற்காக நடிகரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்பது முறையானதுமல்ல. எனவே நாங்கள் இதில் தலையிட மாட்டோம்" என்று சொன்னதும் அமைதியாகிவிட்டார்கள்.

ஆகவே, லிங்கா திரைப்படப் பிரச்சனையில் விடுதலைச் சிறுத்தைகளின் பெயரை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் அது கண்டனத்துக்குரியது.  அப்படிப் பயன்படுத்துவது தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். 
 
விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை எந்தத் தளத்திலும் ஞாயத்தின் பக்கமே நிற்போம்!

வன்னி அரசு.

31 January 2015

ஈழத்தமிழர் சிக்கல்: புதிய இரு வல்லவர்களும் பழைய அலாவுதீன் விளக்கும்

இலங்கையின் புதிய இரு வல்லவர்களுக்கு பழைய அலாவுதீன் விளக்கு ஒன்று கிடைத்துவிட்டது. பங்காளிகள் எல்லாம் வேண்டாம் என்று பழைய குப்பை கூளங்களுடன் பரணியில் தூக்கிவீசப்பட்ட அந்த அலாவுதீன் விளக்கை மீண்டும் தூசிதட்டித் துடைத்து எடுத்துவிட்டார்கள். அந்த விளக்கு மிகவும் சக்தி வாய்ந்ததென்றும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை பொருந்தியதென்றும் உலகின் சகல ஜனங்களுக்கும் அறிவிப்புச் செய்துவிட்டார்கள். அந்த விளக்கு இலங்கைத் தீவுக்கே வெளிச்சம் கொடுக்கப் போகிறதாம். அதைத் தடவித் தடவிப் பார்த்தாலே போதும் பாலும் தேனும் கிடைக்குமாம். அது எல்லோருக்குமான எல்லாவிதமான பசியையும் தீர்த்துவிடுமாம். அரை நூற்றாண்டுக்கு மேலான மக்கள் பிரச்சனைகளைக்கூட இந்த விளக்கு தீர்த்துவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட அந்த அற்புத விளக்கின் பெயர் 13வது சட்டத் திருத்தம். இரு வல்லவர்கள் மைத்ரிபால சிறீசேனா, ரணில் விக்ரமசிங்கே.



2009ஆம் ஆண்டு இனப்படுகொலை நடத்திய இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாகத் தண்டிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க தமிழர்கள் அப்போதிருந்தே போராட்டங்களை முன்னெடுத்தார்கள். ஐக்கிய நாடுகள் அவையில் இராஜபக்சேவைத் தண்டிக்க வாக்கெடுப்புக்கூட நடத்தினார்கள். தண்டிக்க முடியவில்லை. ஆனால் அறம் சார்ந்த தமிழர்கள் இராஜபக்சேவைத் தண்டிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் வந்தது. நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் இராஜபக்சேவை சனநாயக முறையில் தண்டித்தார்கள். வடக்கு-கிழக்கு, மலையகப் பிரதேசங்களின் கோப நெருப்பு இராஜபக்சேவை வீழ்த்தியது. இலங்கைத் தீவுக்கு யார் அதிபராக வரவேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய சக்தியாய் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்தனர். இராஜபக்சே கட்சியின் பொதுச்செயலாளரான மைத்ரிபால அதிபரானார். ஏற்கனவே குள்ளநரியாக இருந்த ரணில் விக்ரமசிங்கே 13வது சட்டத்தைக் காட்டி இப்போது நல்ல நரியாக ஊளையிடுகிறார். இலங்கையின் இனப்பிரச்சனைகள் அத்தனைக்கும் சர்வரோக நிவாரணி 13வது சட்டத் திருத்தம்தான் என்று மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இலங்கையின் உச்ச நீதிமன்றமே 13வது சட்டத்திருத்தம் செல்லாது என்று தீர்ப்புக் கூறிய பிறகும் இலங்கையின் புதிய வல்லவர்கள் அதை நடைமுறைப்படுத்தப் போவதாக ஏமாற்றுகிறார்கள்.

சரி இந்த 13வது சட்டத்திருத்தத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

தனித்தமிழ் ஈழத்தில்தான் தமிழ் மக்கள் சுதந்திரமாக தனித்த இறையாண்மையோடு வாழ முடியும் என்கிற உறுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத் தந்தை செல்வா போராடினார். ஆனாலும், சிங்கள, பௌத்தப் பேரினவாதம் ஈழத் தந்தை செல்வா அவர்களின் அறப்போராட்டத்தை அரச பயங்கரவாதம்கொண்டு ஒடுக்கியது. அழுத்த அழுத்த வெடிகுண்டுகள் வெடித்தன. புலிகள் முளைத்தனர். புலிகளின் ஆயுதவழிப் போராட்டத்தை நசுக்க சிங்களப் பேரினவாதம் கடும் முயற்சியில் ஈடுபட்டது. புலிகளின் வலிமையை, உறுதியை சிங்களவர்கள் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், 1987 சூலை 5ஆம் நாள் நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலால் சிங்களப் பேரினவாதம் நிலைகுலைந்தது. சிங்களம் மட்டுமல்ல உலகமே அதிர்ந்தது. புலிகளைச் சமாளிக்க முடியாமல் இந்தியாவின் உதவியை நயவஞ்சகமாக நாடினார் அன்றைய அதிபர் ஜெயவர்த்தனே. அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேயின் வஞ்சகத்தை அறியாமல் சிங்கள வலையில் வீழ்ந்தார். சூலை 29, 1987அன்று இந்திய-இலங்கை உடன்பாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பமிட்டனர். தமிழர்களின் சார்பில் கையெழுத்திட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியா மிரட்டியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்று பிரபாகரன் மறுத்துவிட்டார். தமிழர்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமலேயே உடன்படிக்கை கையொப்பமானது. இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை தமிழ்ப் பெண்களை வேட்டையாடியது. தமிழர் உடைமைகளைச் சூறையாடியது. தமிழர்களைக் கொன்றுகுவிப்பதன் மூலம் புலிகளை அடிபணிய வைக்க முயன்றது. கூடுதலாக, புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் குறிவைத்து கொலை செய்ய 'செக் மேட்' எனும் நடவடிக்கையிலும் இறங்கியது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒட்டுக் குழுக்களுக்கு இந்திய இராணுவமே ஆயுதங்களை வழங்கி புலிகளுக்கு எதிராகக் களமிறக்கியது. இந்த அணுகுமுறை இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கே எதிரானதாகும். அதாவது, போராளிக் குழுக்கள் அனைவரும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சனநாயகப் பாதைக்கு வரவேண்டும் என்பதுதான் இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம். ஆனால் புலிகளை மட்டும் அழிப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தமாக அது மாறிப்போனது. ஆனாலும் புலிகள் நெஞ்சுரத்தோடு இந்திய இராணுவத்தை எதிர்கொண்டார்கள். இந்திய இராணுவத்தின் அட்டூழியத்தைக் கண்டித்துத் தமிழகம் கொதித்தது. இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்னும் போராட்டம் வலுத்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வி.பி.சிங் இந்தியப் பிரதமரானார். அமைதிப்படை திரும்பப் பெறப்பட்டது.




இந்திய-இலங்கை உடன்படிக்கை சனநாயகத்தின் முன் கிழித்தெறியப்பட்டது. விடுதலைப் புலிகள் இந்த உடன்பாடு குறித்து கடந்த சூலை 9, 1988 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 9 மாதங்களாக இந்திய இராணுவத்தினரால் எங்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் அநீதியான இராணுவ நடவடிக்கையினால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் பாலிய வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். பல இலட்சம் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வனவிலங்குகளும் காடுகளும் அழிக்கப்பட்டன. 

 கடந்த 40 ஆண்டுகளாக இனப்படுகொலையொத்த அடக்குமுறையைச் சந்தித்துவரும் தமிழ் மக்களுக்கு பல கோடி ரூபாய் செலவழித்து தமிழர் பகுதிகளில் குண்டுகளைப் பொழிந்து இந்தியா சனநாயகத்தை சொல்லித்தர முயற்சிக்கிறது. இந்தியாவின் பிரச்சாரம் என்பது வடக்கு-கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக ஒன்றிணைத்து அங்கு தேர்தல் நடத்தப்பட்டால் தமிழர்களின் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்கிறார்கள். இங்கே அளப்பரிய தியாகம் செய்த தமிழ் மக்களும், வீரச்சாவடைந்த மாவீரர்களின் அர்ப்பணிப்பும் அதிகாரமே இல்லாத மாகாண சபைத் தேர்தலுக்கோ மாகாணங்களின் தற்காலிக இணைப்புக்கோ அல்ல என்பதை நினைவுகூரவேண்டும். இங்கே வடக்கும் கிழக்கும் என்று சொல்லப்படுவது தமிழர்களின் தாயகம். அது பிரிவினைக்கு அப்பாற்பட்டது.

வடமராச்சியில் இலங்கை இராணுவ நடவடிக்கையையடுத்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்டோம் என்று இலங்கை இராணுவம் கொக்கரித்தது. அதே வேளையில் 1987 சூலை 5 நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலையடுத்து சிங்களர்களும் ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறவில்லை என்பதையும், விடுதலைப் புலிகள் ஒடுக்கப்படவில்லை என்பதையும் உணர்ந்துகொண்டனர். தமிழர்களைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு இலங்கைக்குள் நுழைந்த இந்தியா, சிங்களர்களைவிட மோசமான கொடுமைகளைப் புரிந்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகவும், கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கிறது. துரோகிகளின் உதவியிலாவது தேர்தலை நடத்த முடியுமா என்று வாய்ப்புகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது. 

 இந்திய இராணுவத்தின் முகாமாக மாற்றப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் போலியான தேர்தலை நடத்தி பொம்மை அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் தமிழீழத்தில் சனநாயகம் திரும்பிவிட்டது என்று உலகை நம்ப வைக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. ஏனென்றால், தமிழர்களுக்கு ஞாயமான பாதுகாப்பை வழங்காத எந்தவொரு தீர்வையும் சமாதானம் என்கிற போர்வையில் புலிகள் ஏற்க மாட்டார்கள் என்பதால் இந்தியா புலிகளை அழிக்கவும் அதன் தலைவர்களை ஒழித்துக்கட்டவும் பெரும் முயற்சி எடுத்துவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர்களையும் அழிப்பதன் மூலம் இந்திய-இலங்கை உடன்பாடு என்னும் தமிழர்களின் அடிமை சாசனத்தை அமல்படுத்த முடியும் என்று இந்தியா நம்புமானால் அது தவறாகும். 

தொடர்ந்து இந்தியா புலிகளை அழிப்பதிலும் தமிழர்களைக் கொல்வதிலும் ஈடுபடுமானால் அர்த்தமற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கி அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக தமிழ்த் தேசத்தை நீண்டதொரு போராட்டத்திற்குத் தயார்படுத்த புலிகள் தள்ளப்படுவார்கள்.

- இப்படி தொலைநோக்குப் பார்வையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்ததன்பேரில், அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக, தமிழீழ விடுதலைக்காகப் போராடி இலட்சக் கணக்கான மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் மாண்டு மடிந்திருக்கிறார்கள். இந்தச் சோகத்தின் நெருக்கடியில்தான் 13வது சட்டத் திருத்தத்தை ரணில் விக்ரமசிங்கே நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். 

இந்திய அமைதிப் படையின் டாங்கியை வீழ்த்திய பெண் புலிகள்

1988ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இந்தியாவே நடத்திய போலித் தேர்தலில் மாகாண முதல்வராக அமர்த்தப்பட்ட வரதராஜபெருமாள், 1990இல் இந்த சட்டத் திருத்தத்தால் தமிழர்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை என்று சொல்லிவிட்டு விடைபெற்றார். இந்திய இராணுவமும் இந்தியாவுக்குத் திரும்பும்போது வரதராஜபெருமாளை பாதுகாப்பாக கப்பலில் அழைத்துவந்து இறக்கிவிட்டது.

இப்படி, இந்தியாவின் எடுபிடியாக, பொம்மை முதல்வராக இருந்த வரதராஜபெருமாளே, இந்தச் சட்டத் திருத்தத்தால் எந்தவிதப் பயனும் இல்லை என்று சொன்ன பிறகும், இச்சட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்த இலங்கை அரசு துடிப்பதற்குக் காரணமென்ன?

முள்ளிவாய்க்கால் போருக்கு பின் சிங்கள அரசின் வெ(ற்)றிக் கொண்டாட்டத்தில் இராஜபக்சேவும் சிறீசேனாவும் 

வரும் மார்ச் 25ஆம் தேதி ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. அதற்குள்ளாக தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் என்ற பேரில் எதையாவது கொடுத்து இனப்பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று அறிவிப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அது மட்டுமல்லாமல் மார்ச் 25க்குப் பிறகு ஐ.நா. குழு இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்கத் தொடங்கினால் இராஜபக்சே மட்டுமல்ல அன்றைய இராணுவ தளபதி சரத் பொன்சேகா, மைத்ரிபாலசிறீசேனா (புலிகளின் மீதான போருக்கு ஒப்பமளித்த அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர்) போன்றோரும் குற்ற விசாரணையில் சிக்கிக்கொள்ள நேரிடும். இவற்றையெல்லாம் தடுப்பதற்காகவும், ஏமாற்றவும்தான் 13வது சட்டத் திருத்தத்தைத் தூசிதட்டி எடுத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை இலங்கையில் மீள்குடியமர்த்தும் பணியில் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த 30-1-2015 அன்று புதுதில்லியில் அகதிகள் மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அக்கூட்டம் கூட்டப்படக்கூடாது என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிப்பதான, வரவேற்கத் தகுந்த எதிர்ப்பாகும். ஐ.நா. மனித உரிமை அவை கூடுவதற்கு முன்பு இந்தியாவில் உள்ள அகதிகள் இலங்கையில் குடியமர்த்தப்பட்டுவிட்டதாக உலகை நம்ப வைக்கத்தான் இத்தகைய முயற்சிகள் நடக்கின்றன. போர் முடிந்து இராஜபக்சே வீழ்த்தப்பட்ட பிறகு தமிழர்கள் அங்கே போவதுதானே ஞாயம்? என்றுகூடச் சிலர் கருத்து வைக்கிறார்கள்.

13வது சட்டத் திருத்தத்தின்படி முதலில் தமிழர்கள் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்தி, தமிழர் நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும். உயர் பாதுகாப்பு வளையமாக மாற்றப்பட்டுள்ள தமிழர் தாயகத்தின் நெருக்கடியைத் தளர்த்த வேண்டும். இவற்றை முன்னோட்டமாக புதிய மைத்ரிபால அரசு செய்யாமல் வேறு எதைச் செய்தாலும் உலகை ஏமாற்றத்தான் அது என்பது நிரூபணமாகும்.

இலங்கையை சர்வதேச நெருக்கடியிலிருந்து காப்பாற்ற இந்தியா இப்போதே அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டது.

ஆனால் தமிழர்களாகிய நாம்...?

வன்னிஅரசு.

01 November 2014

ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இராமதாசு



"கட்சி மாறுவதால் என்னை கோழை என்றோ பச்சோந்தி என்றோ எண்ணி விடாதீர்கள். இருக்கின்ற கட்சியிலேயே இருக்கின்ற மேடையிலேயே இங்கிருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும் இந்தியாவிலேயே எனக்கு ஒருவனுக்குத்தான் இருக்கு என்று கூறிக் கொண்டு இங்கிருந்து விடை பெறுகிறேன்" என்று பல்டி அடித்துவிட்டு எதிர்க்கட்சிக்காரர் ஒருவரின் சைக்கிளின் முன்னால் உட்கார்ந்து போவார் நடிகர் வடிவேலு. ‘எல்லாம் அவன் செயல்’ என்ற திரைப்படத்தில் வரும் வண்டு முருகனைப் போல பா.ம.க. இராமதாசு அரசியலில் பல்வேறு துணிச்சல் மகுந்த ‘பல்டி’களை அடித்து வருகிறார். 


வன்னியர் சங்கமாக இருந்து பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கியபோது தன் குடும்பத்திலிருந்தோ ஒருவர் கூட அரசியலுக்கு வரமாட்டார்கள் என பத்து சத்தியம் செய்தவர் இப்படித் தன் அருமை மகனுக்காகவே அரசியல் செய்து வருகிறார். தாழ்த்தப்பட்ட ஒருவரை முதல்வராக்குவேன் என்று கூறிவிட்டு தலித்துகளை ஒழித்துக் கட்டுவதற்காகவே தைலாபுரம் தோட்டத்தில் பயிற்சிகளை நடத்தி வருகிறார். “திராவிடக் கட்சிகளை ஒழிப்பதுதான் என் முதல் வேலை. கருணாநிதியை நம்பினால் கோவணத்தையும் பிடுங்கி ஓடவிட்டுவிடுவார். இனி எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளோடு கூட்டணியை வைக்க மாட்டோம். (பார்க்க இணைப்பு: தமிழ்நாட்டை பீடித்த சனியன்களை ஒழிப்பேன் - இராமதாசு சூளுரை ) ஜெயலலிதாவோடு கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் உறவு வைப்பதற்குச் சமம்” என்றெல்லாம் வீராவேசத்தோடு வசனங்களைப் பேசிவிடடு இறுதியாக கோபாலபுரத்திற்கே வந்து கலைஞரின் காலில் விழுந்து அந்தர்பல்டி அடித்துவிட்டார். தனது பேத்தி திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இராமதாசு தனது மனைவியுடன் கலைஞர் காலில் விழுந்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார். 

மருத்துவர் இராமதாசின் பேத்தியின் திருமண விழா கடந்த 30-10-2014 அன்று மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்து. மணமக்கள் சிறந்து வாழ விடுதலைச் சிறுத்தைகளும் வாழ்த்துகிறோம். முதல்நாள் திருமண வரவேற்பு நிகழ்வில் மதிமுக தலைவர் வைகோவும், மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். மறுநாள் நடந்த திருமண விழாவிற்கு திமுக தலைவரும் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார். வாழ்த்தும்போது, இராமதாசுக்கும் அவருக்கும் உள்ள நீண்டகால நட்பை விளக்கி உருகினார். 




‘கெழுதகை நண்பர்’ என்றெல்லாம் கூறி பெருமைப்பட்டார். இதில் எந்தக் குறையும் இல்லை. திருமண விழாக்களில் இதுபோன்ற நாகரிகங்களும் வாழ்த்துக்களும் தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள்தான்; வரவேற்கக் கூடியதுதான். ஆனால் இது கூட்டணி அரசியலுக்கு முகூர்த்த விழாவாக மாறியதுதான் நகைச்சுவையாகவும் விந்தையாகவும் உள்ளது. கலைஞரின் அன்பு நிறைந்த தம்பி இராமதாசு உண்மையிலேயே கலைஞர் மீது அன்பு கொண்டவர்தானா.. நாகரிகம் நிறைந்தவர்தானா.. அரசியல் பண்பாட்டுடன் நடப்பவர்தானா என்கிற கேள்விகள் துளைத்தெடுக்கின்றன.

தருமபுரி நத்தம் சேரியைச் சேர்ந்த இளவரசனை திவ்யா திருமணம் செய்த பிறகு நவம்பர் 7 அன்று நத்தம் சேரி சூறையாடப்பட்டது. பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வன்முறைக்குக் காரணம் என்று பேராசிரியர் மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு முதல் அத்தனை மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சுமத்தின. தி.மு.க.சார்பில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலான குழு நத்தம் சேரியைப் பார்வையிட்டுவிட்டு பா.ம.கவினரின் செயலைக் கண்டித்து அறிக்கை கொடுத்தார்கள். கலைஞரும் இராமதாசின் செயல்களைக் கண்டித்தார். இதற்கு எந்த பதிலும் சொல்லாத இராமதாசு, பா.ம.க.வைக் கண்டித்த அத்தனை தலைவர்களையும் ஏக வசனத்தில் திட்டினார்.
தீயசக்தி இராமதாசை தனிமைப்படுத்திய எழுச்சித் தமிழர் 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி முதல் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் வரை பா.ம.க.விற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த அத்தனைத் தலைவர்களையும் ‘அவன் இவன்’ என்று சொல்லித்தான் செந்தியாளர்கள் சந்திப்பில் தன் வன்மத்தை வெளிப்படுத்தினார்.
மற்ற தலைவர்களையே இப்படித் திட்டியவர் தொல்.திருமாவளவன் அவர்களை எப்படித் திட்டியிருப்பார் என்பதைச் சொல்லவா வேண்டும். “அவன் முஞ்சியைப் பாரு! அவன் தாடியையும் மீசையயும் பாரு! அவனுங்க கட்சிக் கொடியைப் பார்த்தாலே அறுவறுப்பா இருக்கு!” என்றெல்லாம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது வெறுப்பைக் கொட்டினார்.


அது மட்டுமல்லாமல், “ஜீன்ஸ் பேண்ட், 100 ரூபாய் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செல் போனில் பேசிக்கொண்டு பஸ் ஸ்டாண்டில் பெண்களை தலித் இளைஞர்கள் மயக்குகிறார்கள்” என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை மட்டுமல்லாது வன்னியப் பெண்களையும் அவமானப்படுத்தினார்.

ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டுக் கிடக்கிற ஒடுக்கப்பட்டுள்ள சமூகத்தின் விடுதலைக்காக தன் வாழ்க்கையை ஒப்புவித்தவர்கள் தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும். இவர்கள் வழியில் தன்னுடைய வாழ்க்கையை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒப்படைத்துக் களமாடி வருபவர் தலைவர் தொல்.திருமாவளன் அவர்கள். அதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தமிழ்த் தேசிய அரசியலை எளிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களைப் போராட்டக் களத்திற்கும் அழைத்து வந்தவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கி சேரிகளெங்கும் பகுத்தறிவுப் பரப்புரைகளை முன்னெடுத்தவர். மார்க்சிய அரசியலை மையப்படுத்தி உழைக்கும் மக்களை அணிதிரட்டும் அரும்பணியில் தமிழக அரசியலில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் களமாடி வருகிறார். கலைஞர், மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனார், ஆசிரியர் வீரமணி, வைகோ, ஜெயலலிதா, நல்லக்கண்ணு, சங்கரைய்யா, தா.பாண்டியன், ஜி.இராமகிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களாகட்டும், சீமான், வேல்முருகன் உள்ளிட்ட இளைய தலைமுறைத் தலைவர்களாகட்டும் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான அன்பைச் செலுத்தி நட்பைப் போற்றுபவர்தான் தொல்.திருமாவளவன் அவர்கள்.


தமிழகத்தில் தலித் மக்கள் பிரச்சனையை முன்வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்தாலும் தமிழர்களின் அனைத்து உரிமைப் போராட்டங்களிலும் வலுவாக சமரசமின்றிக் களமாடி வருவது விடுதலைச் சிறுத்தைகள்தான். தமிழீழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளோடு தோளோடு தோள் நின்று சிறுத்தைகள் களமாடியதை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் வகையில் மேதகு பிரபாகரன் அவர்கள், திருமாவளவன் அவர்களை கிளிநொச்சிக்கே அழைத்து “அண்ணன் இங்கே நான் இருக்கிறேன்; தம்பி நீ தைரியமாக தமிழகத்தில் போராடு” என்று நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தார். சமாதான ஒப்பந்த காலங்களில் தமிழகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட ஒரு தலைவரைத்தான் பா.ம.க. இராமதாசு அவர்கள் மிகவும் அறுவறுப்பாக ஒருமையில் பேசி வருகிறார். அப்பாவி வன்னிய மக்களிடையே தலித்துகளுக்கெதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

மானுடத்தின் உயரிய பண்பாடான காதலைக் கொச்சைப்படுத்தும் வகையில் தமிழகம் முழுக்கப் பரப்புரையை மேற்கொண்டார். தலித் மக்களுக்கெதிராக 60க்கும் மேற்பட்ட சாதிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுக்கக் கலவரங்களைத் தூண்டிவிட்டார். தலித்துகளுக்கெதிரான விசமப் பிரச்சாரங்களை பொது மேடைகளிலும் தனது ‘மக்கள்’ தொலைக்காட்சியிலும் திட்டமிட்டே பரப்பி விட்டார். பெண்களுக்கு சொத்தில் பங்குதரக் கூடாது என்று தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கெதிரான நச்சுக் கருத்துக்களைப் பரப்பினார்.

உச்சகட்டமாக கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் பெருவிழாவில் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான கலைஞரை ‘மோளம் அடிக்கிற சாதி’ என்றும், ஆசிரியர் வீரமணியை ‘கூட்டிக்கொடுப்பவர்’ என்றும் மிகக் கேவலமாக காடுவெட்டி குரு பேசியதை கைதட்டி ரசித்தவர்தான் மருத்துவர் இராமதாசு. (பார்க்க இணைப்பு: குச்சிகொளுத்தி இராமதாசின் சாதிவெறி பேச்சு & காடுவெட்டி குருவின் சாதிவெறி பேச்சு)

அனைத்துத் தலைவர்களையும் ‘நிக் நேம்’ வைத்துக் குறிப்பிடும் ஒரே அரசியல் தலைவர் இந்தியாவில் இராமதாசு ஒருவராகத்தான் இருக்க முடியும். இப்படி அநாகரிகமான அரசியல் நடத்திவரும் இராமதாசு கடந்த ஓராண்டுக்கும் மேலாக, திராவிட அரசியலுக்கு எதிராகவும், மார்க்சிய சித்தாந்தத்திற்கு எதிராகவும் செய்துவந்த பரப்புரைகள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பிரச்சாரங்களைவிடக் கொடியதாக இருந்தது. மனுதர்மத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்தது. ஆனால் இன்று எல்லாம் மறைந்தே போய்விட்டது.

ஒரு திருமணத்தை முன்னிறுத்தி, கூட்டணிக்கு பந்தக்கால் போட்டுள்ளனர். தமிழகத்தில் தனிமைப்படுத்த வேண்டிய தீய சக்தியான இராமதாசை நண்பர் என்று அள்ளி அரவணைக்கும் கலைஞர் நட்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் (நட்புக்குக்கூடப் பொருத்தமில்லாதவர் என்பது வேறு) கூட்டணி வைக்கக் கை கோர்ப்பது திராவிடக் கொள்கைக்கே எதிரானது இல்லையா? அல்லது திமுக பலவீனமாகிவிட்டதா? தந்தை பெரியாரின் கொள்கைகளான பெண்ணுரிமைக்கெதிராக, இடஒதுக்கீட்டுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இராமதாசைத் தனிமைப்படுத்தாமல் கொஞ்சிக் குழாவுவது திராவிட அரலியலுக்கு, தந்தை பெரியாரின் கொள்கைக்கு எதிரானது இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் துரோகமில்லையா? ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஓரங்கட்ட நினைப்பவர்களைக் கண்டிக்காமல் அவர்களோடு கை கோர்ப்பது அவர்கள் கரத்தை வலுப்படுத்துவதாக அமையாதா? கூடுதலாகத் தூண்டிவிடுவதாகத்தானே அர்த்தம். இதனைக் கலைஞர் விரும்புகிறாரா? 


வரும் நவம்பர் 7 அன்று நத்தம் சேரி தீக்கிரையாக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள். அந்தக் கொடுமையிலிருந்து இன்னும் அந்தச் சேரி மீளவேயில்லை. குடிசைகள் எரிக்கப்பட்ட சாம்பலின் நெடி சனநாயகத்தின் மூச்சைத் திணற வைத்துக்கொண்டிருக்கிறது. (பார்க்க இணைப்பு: நவம்பர் 7 - சாதிவெறி அரசியல் எதிர்ப்பு நாள்)



காதலித்த காரணத்தால் படுகொலை சொய்யப்பட்ட இளவசரனின் குடும்பத்தின் கண்ணீர் இன்னும் காயவில்லை. மரக்காணம், வடக்கு மாங்குடி சேரி மக்களின் ஒப்பாரியும் ஓலமும் இன்னும் நின்றபாடில்லை. அதற்குள் அந்தக் கொடியவரோடு கலைஞர் கை கோர்ப்பது மேலும் பல சேரிகளைத் தீக்கிரையாக்காதா? இளவரசனைப் போன்ற பலரை கொலை செய்யத் தூண்டுவதாகாதா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எல்லோரும் துரோகம் செய்கிறார்கள். இதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கா என்ன? 

எல்லாச் சேரிகளும் எரிந்துபோகட்டும் தலித்துகள் என்னும் ஓர் இனமே இல்லாமல் போகட்டும். பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சமூகநீதிக் கொள்கைகள் நாசமாகட்டும். கலைஞர், வைகோ, இராமதாசு ஆகியோரின் எண்ணங்கள் நிறைவேறட்டும். மானங்கெட்ட அரசியல் தமிழகத்தில் செழித்து வளர வாழ்த்துவோம்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இராமதாசு.